என் பெயர் அந்த லிஸ்ட்டில் இல்லாதது வேதனையளிக்கிறது” – இயக்குநர் சுந்தர் சி….
தமிழ் சினிமாவில் ரசிகர்கள் ரசிக்கும் படங்களையும், தயாரிப்பாளர்களுக்கு லாபகரமான படங்களையும் கொடுத்து வரும் தன்னுடைய பெயர் நல்ல இயக்குனர் என்ற பட்டியலில் வராதது வருத்தம் என சுந்தர்.சி வேதனை தெரிவித்திருக்கிறார். அதேசமயம் இந்திய சினிமாவில் 12 வருடங்களுக்குப் பிறகு வெளியாகி பிளாக் பஸ்டரான ஒரே திரைப்படம் மதகஜராஜா என விஷால் பெருமைப்பட பேசி உள்ளார். இது குறித்த தொகுப்பை பார்க்கலாம்.
மதகஜராஜா திரைப்படம் உருவாகி 12 ஆண்டுகள் கழித்து இந்த பொங்கலுக்கு வெளியானது. ஆக்சன், காமெடி என பக்கா கமர்சியல் ஃபார்முலாவில் வெளியான இந்தப் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தமிழகத்தில் மட்டும் இந்த திரைப்படம் சுமார் 50 கோடி ரூபாய் வசூலை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில் தற்போது வரை மட்டும் 20 கோடி ரூபாய் தாண்டி வசூல் செய்துள்ளது.
இந்நிலையில் மதகஜராஜா திரைப்படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் விஷால், அஞ்சலி, விஜய் ஆண்டனி, சுந்தர்.சி உள்ளிட்ட படக் குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பேசிய அஞ்சலி, மதகஜராஜாவை திரையரங்கில் ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள் எனக் கூறினார். சுந்தர்.சி எல்லா படங்களிலும் ஒரே பெயரை தன்னுடைய கதாபாத்திரத்திற்கு வைக்கிறார். அடுத்த படத்தில் மாற்ற வேண்டும் என வேண்டுகோள் வைத்தார். கலகலப்பு மதகஜராஜா படங்களில் நடித்த அஞ்சலி தன்னுடைய ராசியான நடிகை என்று சுந்தர்.சி பாராட்டினார். பின்னர் படத்தின் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி பேசுகையில், விஷால் பாடிய ‘ஓ மை டியர் லவ்வர்’ பாடல் படத்திற்கான அடையாளத்தை கொடுத்திருக்கிறது. அந்தப் பாடலை தன்னுடைய கான்செட்டில் விஷால் பாட இருக்கிறார் எனவும் தெரிவித்தார்.
Read More