புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்று கையெழுத்திடாததால் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை வழங்க மறுத்து வருகிறது. இதை கண்டித்து திமுக எம்பிக்கள் இன்று மக்களவையில் பேசிய போது கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் திமுக எம்பிக்களை தரக்குறைவாக விமர்சித்தார்.
அதுமட்டுமல்லாமல் பிஎம்ஸ்ரீ திட்டம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட வந்ததாகவும், ஆனால் கடைசி நேரத்தில் சூப்பர் முதல்வர் ஒருவரது பேச்சைக் கேட்டு கடைசி நேரத்தில் யூ டர்ன் அடித்ததாக கூறினார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், “தன்னை மன்னரென எண்ணிக் கொண்டு ஆணவத்துடன் பேசம் ஒன்றியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களுக்கு நாவடக்கம் வேண்டும்! தமிழ்நாட்டின் நிதியைத் தராமல் ஏமாற்றும் நீங்கள் தமிழ்நாட்டு எம்.பி.க்களைப் பார்த்து அநாகரிகமானவர்கள் என்பதா?
தமிழ்நாட்டு மாணவர்களுக்குரிய நிதியை, எங்களிடம் இருந்து வசூல் செய்த வரியை விடுவிக்க முடியுமா முடியாதா என்பதற்கு மட்டும் பதில் கூறுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவுடன் தர்மேந்திர பிரதான் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் எழுதிய இரு பக்க கடிதத்தையும் முதல்வர் தற்போது பகிர்ந்துள்ளார்.
மக்களவையில் தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாகரிகமற்றவர்கள் எனப் பேசிய ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து தான் பேசியதை திரும்பப் பெற்றார்.
புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்க மறுப்பதால் தமிழ்நாட்டு கல்விக்காக வழங்க 2152 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு நிறித்தி வைத்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று திமுக மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன் பேசியதற்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மிக காட்டமாக பேசினார்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் தமிழ்நாடு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட முன்வந்ததாகவும் கடைசி நேரத்தில் சூப்பர் முதல்வர் ஒருவரின் பேச்சைக் கேட்டு யூ டர்ன் அடித்து விட்டதாகவும் கூறினார். யார் அந்த சூப்பர் முதல்வர் என்பதை கனிமொழி விளக்க வேண்டும் என்று கூறினார்.
அப்போது அமளியில் ஈடுபட்ட திமுக எம்.பிக்களை ஜனநாயகத்துக்கு எதிரானவர்கள் என்றும், நாகரீகமற்றவர்கள் என்றும் தர்மேந்திர பிரதான் கூறினார். இதனால் கோபமடைந்த திமுக எம்பிக்கள் மத்திய அரசை கண்டித்து தொடர்ந்து கூச்சல் இட்டதால் அவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
மீண்டும் அவை கூடிய போது பேசிய திமுக எம்.பி கனிமொழி, “தமிழர்கள் அநாகரீகமானவர்கள் என்ற கல்வி அமைச்சரின் பேச்சு வேதனை அளிக்கிறது. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சர்வ சிக்ஷா அபியான் திட்டத்திற்கான நிதியை விடுவிப்பது தொடர்பாக தான் கல்வி அமைச்சரை தமிழக எம்பிக்கள் உடன் சந்தித்தேன். மும்மொழிக் கொள்கைளை ஏற்பதாக தமிழ்நாடு ஒருபோதும் கூறியதில்லை. தமிழ்நாடு நிச்சயம் அதை ஏற்காது. தேசிய கல்விக்கொள்கையில் தமிழ்நாட்டுக்கு கருத்து வேறுபாடு உள்ளதால் அதை ஏற்கமாட்டோம் என்று ஏற்கனவே கூறிவிட்டோம்.
புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு ஏற்காது என்று பிரதமர், கல்வி அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் தெளிவுபடுத்திவிட்டார். மத்திய அரசு தர வேண்டிய நிதியை தர வேண்டும் என்று முதலமைச்சர் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். எஸ்எஸ்ஏ திட்டத்தின்கீழ் ஒன்றிய அரசு தர வேண்டிய நிதியை உடனடியாக வழங்க வேண்டும்” என்று கூறினார்.
Read More