தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் அறிவித்துள்ளார். இதன்படி, தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்.23-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. மார்ச் 30-ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது.
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக, மார்ச் 15 டெல்லியில் சி.பி.ஐ அதிகாரிகள் விஜய்யிடம் 3-ம் கட்ட விசாரணையை மேற்கொண்டனர். சுமார் ஏழு மணி நேரம் நடைபெற்ற இந்த விசாரணைக்குப் பிறகு, நேற்று இரவே விஜய் சென்னை திரும்பினார். சென்னை திரும்பிய கையோடு, பிற்பகல் 3.30 மணி முதல் மாலை 7 மணி வரை தேனாம்பேட்டையில் உள்ள ‘ப்ரெஸ்டிஜ் பாலிகன்’ வார் ரூமில் விஜய் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார்.கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, செங்கோட்டையன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் இந்த ஆலோசனையில் பங்கேற்றனர். வேட்பாளர் பட்டியலைத் தயார் செய்வது, தேர்தல் அறிக்கை தயாரிப்பு, மாநிலம் தழுவிய தேர்தல் சுற்றுப்பயணம் மற்றும் தேர்தல் வியூகங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. த.வெ.க.-வை என்.டி.ஏ கூட்டணிக்கு இழுக்க முயற்சிகள் நடைபெறுவதாகக் கூறப்படும் சூழலில், இன்றைய ஆலோசனை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
முன்னதாக இன்று காலை பட்டினம்பாக்கத்தில் ஆலோசனையைத் தொடங்கிய விஜய், பின்னர் தேனாம்பேட்டை வார் ரூமிற்குச் சென்றார். ஆலோசனை முடிந்து வெளியே வந்த விஜய், அங்கு திரண்டிருந்த தொண்டர்களைப் பார்த்து புன்னகையுடன் ‘தம்ப்ஸ் அப்’ (Thumbs up) காட்டி உற்சாகப்படுத்தினார்.
