டெல்லியில் சட்டப்பேரவைத் தேர்தலில் 60.39 விழுக்காடு வாக்குகள் பதிவாகின. டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.
டெல்லி சட்டப்பேரவையின் பதவிக் காலம் வரும் 23ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், மொத்தமுள்ள 70 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து ஆளும் ஆம் ஆத்மி, பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இடையே மும்முனை போட்டி ஏற்பட்ட நிலையில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, டெல்லி முன்னாள் முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உட்பட தேசியத் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் புதிய அரசைத் தேர்ந்தெடுப்பதற்காக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. 70 இடங்களுக்கு 699 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்தது. டெல்லி முழுவதும் 13,766 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்ட நிலையில், தேர்தலை சுமூகமாக நடத்த 220 கம்பெனி துணை ராணுவப் படை வீரர்களும், 19,000 ஊர்க்காவல் படையினரும், டெல்லி போலீசார் 35,000 பேரும் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு விறுவிறுப்பாக தேர்தல் நடைபெற்றது. டாக்டர் ராஜேந்திர பிரசாத் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வாக்களித்தார். நிர்மான் பவன் வாக்குச்சாவடியில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வாக்களித்தார். அவருடன் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியும் ஜனநாயக கடமை ஆற்றினார்.
இதேபோன்று, லோதி எஸ்டேட்டில் காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி, தனது கணவர் ராபர்ட் வதேரா மற்றும் மகன் ரைஹன் வதேராவுடன் சென்று வாக்களித்தார். லேடி இர்வின் மேல்நிலைப் பள்ளியில், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், தனது பெற்றோர், மனைவி, மகனுடன் சென்று ஜனநாயக கடமையை ஆற்றினார்.
Read More