Author: Namadhu Arasu

அறிவியல்தமிழ்நாடு

பாஜகவுடன் கூட்டணி? நிலைப்பாட்டை மாற்றுகிறதா அதிமுக?

பாஜகவுடன் கூட்டணியா? என்ற கேள்விக்கு மறுப்பு தெரிவிக்காத எடப்பாடி பழனிசாமி, திமுகவைத் தவிர வேறு எந்த கட்சியும் தங்களுக்கு எதிரி இல்லை என்று தெரிவித்துள்ளார். இது, எப்போதும் பாஜகவுடன் கூட்டணி இல்லை எனக் கூறிவந்த அதிமுகவின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்ற சந்தேகத்தை எழுப்பி உள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு 2019 மக்களவைத் தேர்தலின் போது மீண்டும் உருவான அதிமுக – பாஜக கூட்டணி, 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முறிந்தது. இனி எக்காலத்துக்கும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்றும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார்.

இந்நிலையில், பாஜகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுகவை தவிர தங்களுக்கு வேறு யாரும் எதிரி கிடையாது என்றும் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக வாக்குகளை சிதறாமல் வாங்க வேண்டும் என்று கூறினார்.
இது குறித்து கோவையில் செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த தமிழக பாஜக தலைவர், புதன்கிழமை விளக்குவதாகவும் அவசரப்பட்டு பேசக்கூடிய விஷயம் இல்லை என்றும் கூறினார்.

விமானம் மூலம் சென்னை வந்த அண்ணாமலையிடம் சற்று மாற்றம் ஏற்பட்டிருந்தது. ஈபிஎஸ் குறித்து மீண்டும் கேள்வி எழுப்பப்பட்டபோது, திமுகவை வீழ்த்துவது தான் இலக்கு என்றும், தேர்தலுக்கான காலமும் சூழலும் வரவில்லை என்றும் அவர் தனது விளக்கத்தை தந்தார்.

திமுக எதிர்ப்பு நிலையை அதிமுக மட்டுமே எடுக்க முடியும் என்றும் மற்ற கட்சிகளுக்கு வலுவான வாக்கு சதவீதம் இல்லாதது அதற்கான காரணம் என்றும் கூறுகிறார்கள் மூத்த பத்திரிகையாளர்கள். இதுகுறித்து கருத்து தெரிவித்த மூத்த பத்திரிகையாளர் சபீர் அஹமத், அதிமுகவிற்கு தவெகவுடன் கூட்டணி அமைப்பதே முதல் நோக்கமாக இருக்கும் என்றும், ஆனால் பாஜகவுடனான கூட்டணிக்கும் தாங்கள் கதவுகள் அடைக்கவில்லை என்றும் இபிஎஸ் மறைமுகமாக கூறுவதாக தெரிவித்தார்.

Read More
இந்தியாவிளையாட்டு

ஆஸ்திரேலியாவை வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி..

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இறுதிப் போட்டி வரும் ஞாயிறு அன்று நடைபெறவுள்ளது.
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் துபாய் மற்றும் பாகிஸ்தானில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் இன்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின.

இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 264 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் டிராவிஸ் ஹெட் 33 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து வெளியேறினார். லபுஷேன் 29 ரன்களும், ஜோஷ் இங்லீஸ் 11 ரன்களும் எடுத்தனர். விக்கெட்டுகளை ஒருபக்கம் விழுந்தாலும் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் பொறுப்பாக விளையாடி ரன்கள் சேர்த்தார்.
96 பந்துகளை எதிர்கொண்ட அவர் 1 சிக்சர் 4 பவுண்டரியுடன் 73 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அலெக்ஸ் கேரி 57 பந்துகளில் 61 ரன்கள் எடுத்திருந்தபோது ஷ்ரேயாஸ் ஐயரால் ரன் அவுட் செய்யப்பட்டு வெளியேறினார்.

இந்திய அணி தரப்பில் முகமது ஷமி 3 விக்கெட்டுகளையும் வருண் சக்ரவர்த்தி, ரவிந்திர ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதையடுத்து 265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில், தொடக்க வீரர்கள் கில் 8 ரன்னிலும், ரோஹித் சர்மா 28 ரன்னிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.
அடுத்து இணைந்த கோலி – ஷ்ரேயாஸ் இணை பொறுப்பாக விளையாடி ரன்கள் சேர்த்தது. இருவரும் 3 ஆவது விக்கெட்டிற்கு 91 ரன்கள் சேர்த்தனர். ஷ்ரேயாஸ் 45 ரன்னில் வெளியேற, சிறப்பாக விளையாடிய கோலி அரை சதம் கடந்தார்.

அக்சர் படேல் 27 ரன்களில் ஆட்டமிழக்க அவரைத் தொடர்ந்து சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 98 பந்துகளில் 84 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார். கடைசி ஓவர்களில் அதிரடியாக விளையாடிய ஹர்திக் பாண்ட்யா 3 சிக்சர் 1 பவுண்டரியுடன் 24 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
48.1 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி வெற்றி இலக்கை எட்டியது. கே.எல்.ராகுல் 42 ரன்களும், ரவிந்திர ஜடேஜா 2 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

Read More
சினிமாதமிழ்நாடு

நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய ஐகோர்ட் உத்தரவு.. காரணம் என்ன?

‘ஜகஜால கில்லாடி’ படத்தை தயாரிப்பதற்காக வாங்கிய கடனை திருப்பி செலுத்தாதது தொடர்பான வழக்கில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், நடிகருமான துஷ்யந்த், அவரது மனைவி அபிராமி ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள ஈசன் புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் நடிகர் விஷ்ணுவிஷால், நடிகை நிவேதா பெத்துராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் ஜகஜால கில்லாடி என்ற படத்தை தயாரித்தனர்.

பட தயாரிப்புக்காக தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம், 3 கோடியே 74 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியிருந்தனர். இந்த கடனை ஆண்டுக்கு 30 சதவீத வட்டியுடன் திருப்பிக் கொடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டிருந்தது.
ஆனால் கடன்தொகையை திருப்பி தராததை அடுத்து இந்த விவகாரத்தில் தீர்வு காணும் வகையில் சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி டி.ரவீந்திரன் மத்தியஸ்தராக நியமிக்கப்பட்டார்.

இந்த விவகாரத்தை விசாரித்த மத்தியஸ்தர் நீதிபதி ரவீந்திரன், கடன் தொகை வட்டியுடன் சேர்த்து 9 கோடியே 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயை வசூலிக்க ஏதுவாக, ஜகஜால கில்லாடி படத்தின் அனைத்து உரிமைகளையும், தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவன நிர்வாக இயக்குனரிடம் ஒப்படைக்கும்படி கடந்த 2024ம் ஆண்டு மே 4ம் தேதி உத்தரவிட்டார்.
உரிமைகளைப் பெற்று அவற்றை விற்று கடன் தொகையை ஈடு செய்யவும், மீதத்தொகையை ஈசன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்திடம் வழங்கவும் உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவின்படி படத்தின் அனைத்து உரிமைகளையும் வழங்கக் கோரிய போது, படம் முழுமையடையவில்லை எனக் கூறி பட தயாரிப்பு நிறுவனம் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால், மத்தியஸ்தர் தீர்ப்பை அமல்படுத்தும் வகையில், ராம்குமாரின் தந்தையான சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்து, பொது ஏலம் விட உத்தரவிடக் கோரி, தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது.
அந்த மனுவில், தற்போது வரை கடன் தொகை வட்டியுடன் சேர்த்து 9 கோடியே 39 லட்சத்து 5 ஆயிரத்து 543 ரூபாய் வசூலிக்க வேண்டியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, பதில் மனு தாக்கல் செய்ய ஈசன் புரொடக்‌ஷன்ஸ் தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது.
அந்த மனுவில், தற்போது வரை கடன் தொகை வட்டியுடன் சேர்த்து 9 கோடியே 39 லட்சத்து 5 ஆயிரத்து 543 ரூபாய் வசூலிக்க வேண்டியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, பதில் மனு தாக்கல் செய்ய ஈசன் புரொடக்‌ஷன்ஸ் தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது.

Read More
சினிமா

சுந்தர்.சி – வடிவேலுவின் ‘கேங்கர்ஸ்’.. எதிர்பார்க்கப்படும் காம்போ.. எப்போது ரிலீஸ்

சுந்தர்.சி – வடிவேலுவின் ‘கேங்கர்ஸ்’.. எதிர்பார்க்கப்படும் காம்போ.. எப்போது ரிலீஸ்
சுந்தர்.சி – வடிவேலு காம்போவில் உருவாகியுள்ள ‘கேங்கர்ஸ்’ படம் வரும் ஏப்ரல் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
‘அரண்மனை 4’ வெற்றிக்குப் பிறகு சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கேங்கர்ஸ்’. நீண்ட இடைவெளிக்குப் பிறகு சுந்தர்.சி இயக்கத்தில் வடிவேலு பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. படத்தை இயக்கிய சுந்தர்.சி நாயகனாகவும் நடித்துள்ளார்.
மேலும் படத்தை அவரே தயாரித்துள்ளார். இதில் சிங்காரம் கதாபாத்திரத்தில் வடிவேலு நடித்துள்ளார். கத்ரீன் தெரசா, முனீஸ்காந்த், பக்ஸ், மைம் கோபி, ஹரிஷ் பேரடி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்நிலையில் இந்தப் படம் வரும் ஏப்ரல் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு விநியோகஸ்தர்கள் இதன் தமிழக உரிமையைக் கைப்பற்றிவிட வேண்டும் என்ற முனைப்பில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

Read More
அரசியல்தமிழ்நாடு

அனைத்து கட்சி கூட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்தது ஏன்?

தொகுதி மறு சீரமைப்பில் தமிழகத்தில் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்படும் என்ற தகவலையடுத்து தமிழக முதல்வர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டியுள்ளார்.
மத்திய அரசு சமீபத்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நாடாளுமன்றத் தொகுதிகளை மறு சீரமைப்பு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அது மக்கள்தொகையை சிறப்பாக கட்டுப்படுத்திய தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களை வெகுவாக பாதிக்கும் என்றும் தமிழ்நாட்டுக்கு 8 தொகுதிகள் குறையும் என்றும் கருதப்படுகிறது. அதனால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து இந்த உரிமைப் பறிப்பு நடவடிக்கைக்கு எதிராக குரல் தரவேண்டும் என அழைப்புவிடுத்து நாளை அதற்கான கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
இதுவரை தமிழக முதலமைச்சர் நடத்தியுள்ள அனைத்து கட்சிக் கூட்டங்களுக்கு தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கும், சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் உள்ள கட்சிகளுக்கும் மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தொகுதி மறுசீரமைப்பு குறித்து விவாதிக்க முக்கிய முடிவு எடுப்பதற்காக நடைபெறக்கூடிய இந்த அனைத்து கட்சி கூட்டத்திற்கு அதிமுக, பாஜக, விசிக, இடதுசாரிகள், பாமக, தவெக உள்ளிட்ட 45 அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
தேர்தல் உத்திக்காக அனைத்து அரசியல் கட்சிகளையும் அழைக்கவில்லை என்றும் , மாநில உரிமை பிரச்சனைக்காக ஒத்த கருத்துடன் இருக்க வேண்டுமென்ற அடிப்படையிலேயே அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாகவும் திமுக தலைமை செய்தி தொடர்பாளர் டிகே எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

Read More
சினிமாதமிழ்நாடு

அஜித்தின் ஸ்டைலான லுக்… வெளியானது ‘குட் பேட் அக்லி’ படத்தின் டீசர் – ரசிகர்கள் உற்சாகம்!

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது.
‘விடாமுயற்சி’ படத்தை தொடர்ந்து அஜித் நடிப்பில் அடுத்ததாக திரைக்கு வர உள்ள படம் ‘குட் பேட் அக்லி’. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இந்தப் படத்தில் த்ரிஷா, அர்ஜுன் தாஸ், பிரசன்னா, பிரபு, யோகிபாபு, சுனில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

அண்மையில் இந்தப் படத்தில் நடிக்கும் த்ரிஷாவின் கதாபாத்திர வீடியோ வெளியானது. அதில் ரம்யா என்ற கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறார். ஆதிக் இயக்கியுள்ள அனைத்து படத்திலும் நாயகி கதாபாத்திரத்தின் பெயர் ரம்யா என்பது கவனிக்கத்தக்கது. இந்தப் படம் தொடர்பாக வெளியான அஜித்தின் லுக் அனைத்தும் ஸ்டைலிஷாக ரசிகர்களை கவர்ந்தது.
இந்நிலையில், இந்தப் படத்தின் டீசர் இன்று (பிப்.28) மாலை 7.03 மணிக்கு வெளியானது. அதில் அஜித்தின் ஸ்டைலுடன் மாஸாக இடம்பெறும் காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. படம் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
https://youtu.be/jl-sgSDwJHs?si=PickSzHmf_sSBlQZ

Read More
தமிழ்நாடு

மூன்றரை வயது சிறுமி பாலியல் வழக்கில் சர்ச்சை கருத்து… மயிலாடுதுறை ஆட்சியர் மாற்றம்

மூன்றரை வயது சிறுமி பாலியல் தொல்லை வழக்கில் சர்ச்சையான வகையில் கருத்து கூறிய மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் புதிய ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மயிலாடுதுறையில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்த ஒருநாள் திறன் வளர்ப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் பேசிய மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, சீர்காழியில் கடந்த 24ஆம் தேதி அங்கன்வாடிக்கு சென்ற மூன்றரை வயது சிறுமி, 16 வயது சிறார் குற்றவாளியால் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு, தலை மற்றும் கண் சிதைக்கப்பட்ட சம்பவத்தில் குழந்தை மீதும் தவறு இருப்பதாக தெரிவித்தார்.

தனக்கு கிடைத்த ரிப்போர்ட்டின் படி, குழந்தை, சிறுவனின் முகத்தில் துப்பியதால் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இரண்டு தரப்பிலும் பார்க்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம் எனக் கூறிய மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, இது போன்ற விஷயங்களை குழந்தைகளுக்கு சொல்லித்தருவது குறித்து பெற்றோர்களுக்கு உணர வைக்க வேண்டும் எனக் கூறினார்.
மூன்றரை வயது சிறுமி, சிறுவனின் முகத்தில் துப்பியது தான் பாலியல் தொல்லைக்கு காரணம் என மாவட்ட ஆட்சியர் பேசியது சர்சையை ஏற்படுத்தியது. இதனிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவே அவ்வாறு பேசினேன் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார். குழந்தைகளுக்கு இளம் பருவத்திலேயே பாலியல் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வை பெற்றோர் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலேயே கருத்துகளை பதிவு செய்தேன் என அவர் நியூஸ்18 தமிழ்நாடு செய்திக்கு விளக்கமளித்துள்ளார்.
இந்நிலையில் மூன்றரை வயது சிறுமி பாலியல் தொல்லை வழக்கில் சர்ச்சையான வகையில் கருத்து கூறிய மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக ஈரோடு மாநகராட்சி ஆணையராக இருந்த ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் புதிய ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Read More
தமிழ்நாடு

“இரு மொழி கொள்கையால் தமிழ்நாடு இளைஞர்கள் தொழில் வாய்ப்புகளை இழக்கின்றனர்” – ஆளுநர் ஆர்.என். ரவி

மாநில அரசின் இருமொழி கொள்கையால் தமிழ்நாட்டு இளைஞர்கள் தொழில் வாய்ப்புகளை இழப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி தனது எக்ஸ் பக்கத்தில், “தமிழ்நாட்டைச் சேர்ந்த கல்வி, வணிகம், சுகாதாரம், விருந்தோம்பல், இளைஞர் ஸ்டார்ட் அப்கள் மற்றும் பெண் தொழில்முனைவோர், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த பெருவாரியான உள்ளூர் தலைவர்கள் மற்றும் பல்வேறு கல்வி நிறுவனங்களின் மாணவர்களுடன் கலந்துரையாடினேன்.

ஏராளமான சிரமங்கள் மற்றும் முறைசார் தடங்கல்கள் இருந்தபோதிலும் வாழ்க்கையை சிறப்பாக மாற்றும் இவர்களின் நேர்மறையான ஆற்றலையும் தொழில்முனைவுத் திறனையும் காண்பது ஊக்கமளிப்பதாக இருந்தது. இந்தப் பகுதி, மனித ஆற்றல் மற்றும் இயற்கை வளங்களால் நிறைந்துள்ளது. ஆனாலும் இது புறக்கணிக்கப்பட்டு பின்தங்கியுள்ளது போன்ற உணர்வைத் தருகிறது.
ஊடக தலைப்புச் செய்திகளில் இடம்பெறும் திட்டமிட்ட போராட்டங்களுக்கு மாறாக, தேசிய கல்விக் கொள்கை 2020 -ஐ அமல்படுத்துவதற்கு பெரும் தேவை உள்ளது. மாநில அரசின் கடுமையான இரு மொழிக் கொள்கை காரணமாக அண்டை மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களுடன் ஒப்பிடும்போது இந்த பிராந்திய இளைஞர்கள் வாய்ப்புகளை இழந்தவர்களாக உணர்கிறார்கள்.
துரதிர்ஷ்டவசமாக ஹிந்தியை எதிர்க்கிறோம் என்ற பெயரில் எந்தவொரு தென்மாநில மொழிகளையும் கூட படிக்க அனுமதிக்கப்படாதவர்களாக அவர்கள் உணர்கிறார்கள். இது உண்மையிலேயே நியாயமற்றது. மொழியை படிப்பதற்கான தேர்வு நமது இளைஞர்களுக்கு இருக்க வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.

Read More
குற்றம்சினிமாதமிழ்நாடு

கிரிப்டோகரன்சி மோசடி விவகாரம்: நடிகைகள் தமன்னா, காஜல் அகர்வாலுக்கு சிக்கல்..!

கிரிப்டோகரன்சி மோசடி விவகாரம்: நடிகைகள் தமன்னா, காஜல் அகர்வாலுக்கு சிக்கல்..!
கிரிப்டோகரன்சி மோசடி தொடர்பாக பிரபல நடிகைகள் தமன்னா, காஜல் அகர்வால் ஆகியோருக்கு புதுச்சேரி காவல்துறை சம்மன் அனுப்ப முடிவு செய்துள்ளது.
கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால், அதிக லாபத்தை கொடுப்பதாக ஆசை வார்த்தை கூறி, புதுச்சேரியைச் சேர்ந்த 10 பேரிடம் மூன்று கோடியே 60 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக லாஸ்பேட்டையை சேர்ந்த முன்னாள் அரசு ஊழியர் அசோகன் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

அதில், கோவையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட கிரிப்டோ கரன்சி நிறுவனம் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. முன்னணி சினிமா நடிகைகளான தமன்னா, காஜல் அகர்வால் ஆகியோர் இந்த நிறுவனத்தின் நிகழ்ச்சிகளில் பங்கேற்று விளம்பரப்படுத்தியதும் தெரியவந்தது. நிகழ்ச்சியில் பங்கேற்றதற்காக தமன்னாவிற்கு 25 லட்சம் ரூபாயும், காஜல் அகர்வாலுக்கு 18 லட்சம் ரூபாயும் அனுப்பப்பட்டிருப்பதும் புலனாகியது.
அதனடிப்படையில் கிரிப்டோ கரன்சி மோசடி தொடர்பாக நடிகைகள் தமன்னா மற்றும் காஜல் அகர்வாலிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ள காவல்துறையினர் அவர்களுக்கு சம்மன் அனுப்பவும் முடிவு செய்துள்ளனர்.

Read More
சினிமாதமிழ்நாடு

‘Bad Girl’ படத்திற்கு தணிக்கை சான்று கேட்டு மனு: படத்தை தொடரும் சர்ச்சைகள்..!

‘Bad Girl’ படத்திற்கு தணிக்கை சான்று கேட்டு மனு: படத்தை தொடரும் சர்ச்சைகள்..!
Bad girl திரைப்படத்திற்கு தணிக்கை சான்று கேட்டு, இதுவரை எந்த விண்ணப்பமும் வரவில்லை என தணிக்கை வாரியம் தெரிவித்துள்ளது.
இயக்குநர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக இருந்த வர்ஷா பாரத் இயக்கியுள்ள திரைப்படம் ‘Bad Girl’. இந்தப் படத்தை வெற்றிமாறன் மற்றும் அனுராக் காஷ்யப் இணைந்து தயாரித்துள்ளனர். படத்துக்கு அமித் திரிவேதி இசையமைத்துள்ளார். படத்தில் அஞ்சலி சிவராமன், சாந்தி பிரியா, ஹ்ரிது ஹாரூன், Teejay அருணாசலம், சஷாங்க் பொம்மிரெட்டிப்பள்ளி, சரண்யா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

டின்ஏஜ் பெண் ஒருவரின் மன ஓட்டங்களையும், காதலையும், உணர்வுகளையும் வெளிபடுத்தும் விதமாக இருந்த டீசரில், பாலியல் உணர்வுகள் சார்ந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் விவாதங்களை எழுப்பின. ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விருது 2025-க்கான மிக உயரிய விருதாக கருதப்படும் NETPAC விருதினை வெற்றிமாறன் தயாரித்துள்ள ‘Bad Girl’ திரைப்படம் வென்றது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இந்த படத்துக்கு சென்சார் சான்று வழங்க கூடாது என ராஷ்டிரிய சனாதன சேவா சங்கத்தின் தலைவர் ராமநாத் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி பரத சக்ரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தபோது குறிப்பிட்ட சமூகத்தையும், பெண்களையும் அவமதிக்கும் விதத்தில் bad girl திரைப்படத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது சட்ட விரோதமானது என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Read More