கோர விபத்து நடந்த பாலாசோர் வழித்தடத்தில் பயணிகள் ரயில் மீண்டும் இயக்கம்..!
கடந்த 2ம் தேதி வெள்ளிக்கிழமையன்று இரவு 7 மணியளவில் மேற்கு வங்கத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டம் பஹாநகர் பஜார் ரயில் நிலையம் அருகே சென்றுகொண்டிருந்தபோது, மாற்று தண்டவாளத்தில் ஏற்கனவே நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரயில் மீது அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது.

மோதிய வேகத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள் தடம்புரண்டு அருகில் இருந்த தண்டவாளத்தில் விழுந்துள்ளது. அப்போது அந்த தண்டவாளத்தில் வந்த பெங்களூரு-ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம்புரண்டு கிடந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள் மீது மின்னல் வேகத்தில் மோதியது.
அடுத்தடுத்து 3 ரயில்கள் மோதிய இந்த பயங்கர விபத்தில், 275 பேர் உயிரிழந்துள்ளனர். 1,175 பேர் காயமடைந்துள்ளனர். மீட்பு பணிகள் 2 நாட்களாக நடைபெற்ற நிலையில் , தொடர்ந்து நேற்று விபத்து நடந்த பகுதியில் விபத்தில் உருகுலைந்த பெட்டிகள் மற்றும் தண்டவாளங்களை அகற்றும் அணி நடைபெற்றது.

சீரமைப்பு பணியில் 7 பொக்லைன் இயந்திரங்கள், 140 டன் திறன் கனரக கிரேன் உள்ளிட்ட இயந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டன. மொத்தம் 4 வழித்தடங்கள் உள்ள நிலையில் இரவு 8 மணிக்குள் 2 ரயில் பாதைகள் சீரமைக்கப்பட்டு ரயில்கள் இயக்கப்படும் என்றும், இந்த பாதைகளில் ரயில்கள் மெதுவாக இயக்கப்படும் என்றும் நேற்று மாலை ரெயில்வே வாரியம் தெரிவித்திருந்தது.
அதன்படி இரவுக்குள் 2 ரயில் பாதைகள் சீரமைக்கப்பட்டுவிட்டன. அதன்பின்னர் 51 மணி நேரம் கழித்து நேற்று இரவு 11.30 மணியளவில் சரக்கு ரயில் போக்குவரத்து அந்த வழித்தடத்தில் தொடங்கப்பட்டது. மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், கையெடுத்து கும்பிட்டு வணங்கி ரயில் போக்குவரத்தை தொடங்கி வைத்தார் .

அதனைத்தொடர்ந்து தண்டவாள சீரமைப்புப் பணிகளுக்குப் பிறகு 60 மணி நேரத்திற்கு பின்னர் இன்று காலை பயணிகள் ரயில் இயக்கப்பட்டுள்ளது. விபத்து நடந்த பகுதி என்பதால் மிக குறைந்த வேகத்தில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. எஞ்சிய 2 வழித்தடங்களில் தொடர்ந்து சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
