அரசியல்தமிழ்நாடு

59-வது பிறந்தநாளில் வி.சி.க தலைவர் திருமாவளவன் கடந்து வந்த பாதை ..!

விடுதலை சிறுத்தைகள் என்ற கட்சியைத் தொடங்கி, அதைத் தேர்தல் அரசியலில் பயணிக்கச் செய்த தலைவர் திருமாவளவன் அவர்கள் பன்முக அடையாளத்தைக் கொண்டவர். ஓவியர், கவிஞர், நடிகர், எழுத்தாளர், முன்னாள் அரசு ஊழியர், நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் எனப் பல வடிவங்களை எடுத்துக் கொண்டேதான் வருகிறார்.

அரியலூர் மாவட்டம் செந்தூரை அடுத்துள்ள அங்கனூரில் திருமா அவர்கள் பிறந்தார். உயர் நிலைப் பள்ளிகூட இல்லாத ஊர். எனினும் படிப்பின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக விருத்தாசலத்தில் பியூசி முடித்துவிட்டு, அங்கிருந்து சென்னை பறந்தார். சென்னை பிரெசிடென்ஸி கல்லூரியில் இளநிலை வேதியிலும், முதுநிலையில் குற்றவியலும் பயின்றார்.

அதன்பின் சென்னை சட்டக்கல்லூரியில் சட்டத்தையும் கரைத்துக் குடித்தார். இவர் பள்ளிப் பருவத்திலிருந்தே பத்திரிகைகளைத் தீவிரமாகப் படித்து வந்துள்ளார். திருமா பயின்ற பள்ளியில் நடத்தப்படும் பள்ளி பாராளுமன்ற நிகழ்வில் சிறந்த பேச்சாளராக உருவெடுத்துள்ளார்.

சென்னையில் படிப்பை முடித்துவிட்டு மதுரையில் அரசுப் பணியில் சேர்ந்தார். தடயவியல் துறையில் பணி. இதற்கிடையே பாரதிய தலித் பாந்தர் என்ற அமைப்பிலும் இணைந்தார். 1983 ஈழப் பிரச்சினை போராட்டங்களை ஒருகிணைக்கும் பணியை திருமாவளவன்தான் முன்னெடுத்தார்.

அரசியல் பயணம்

1984 கவியரசு கண்ணதாசன் இலக்கிய பேரவை பொதுச் செயலாளர்

1985 தலித் மீனவ மாணவர்கள் ஒருங்கிணைப்பாளர்

1986 இலங்கை சென்று தமிழ் கல்லூரி மாணவர்களுடன் போராட்டம்

1986 திராவிடர் கழகம் நடத்திய ரயில் மறியல் போராட்டத்தில் பங்கேற்றார்

பாரதிய தலித் பாந்தர் அமைப்பின் தமிழ்நாடு அமைப்பாளர் மலைச்சாமி என்பவர் 1989ஆம் ஆண்டு காலமானார். அதைத் தொடர்ந்து 1990ஆம் ஆண்டு தமிழ்நாடு பாரதிய தலித் பாந்தர் அமைப்பின் அமைப்பாளராக திருமாவளவன் தேர்வு செய்யப்பட்டார்.

திருமா, அமைப்பின் பெயரை இந்திய ஒடுக்கப்பட்ட சிறுத்தைகள் எனப் பெயர் மாற்றி, நீலம் சிவப்பு நடுவில் நட்சத்திரம் பதித்த கொடியை அறிமுகப்படுத்தினார். அதன்பின் அந்த அமைப்பின் பெயர் விடுதலை சிறுத்தைகள் என மாற்றப்பட்டது.

சாதி ரீதியாகத் தான் எந்த போராட்டங்களையும் முன்னெடுக்கவில்லை என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருக்கும் திருமாவளவன் தமிழ்நாட்டில் நம்ப முடியாத பல நிகழ்வுகளைச் செய்து காட்டியவர். பாமகவுடன் கூட்டணி வைத்தார். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நம்பிக்கைக்குரியவராக வலம் வந்தார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைத்து 11 தொகுதிகளில் போட்டியிட்டார். மக்கள் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வந்த திருமாவளவன், ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சிக்குப் பாடுபடத் தேர்தல் அரசியலில் குதிக்க வேண்டும் என முடிவு செய்து 1999இல் களத்தில் இறங்கினார்.

திருமாவளவனைத் தேர்தல் அரசியலுக்குள் கொண்டு வந்த முக்கிய பங்கு மறைந்த தலைவர் மூப்பனாரையே சேறும். திராவிட கட்சிகளுக்கு எதிராக மூன்றாவது அணி மூப்பனார் தலைமையில் உருவானது. அந்த அணி 1999ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் களம் கண்டது.

விடுதலை சிறுத்தைகளுக்குச் சிதம்பரம், பெரம்பலூர் தொகுதி ஒதுக்கப்பட்டது. கணிசமான வாக்குகளைப் பெற்று பிரதான கட்சிகளை விடுதலை சிறுத்தை ஆச்சரியப்படுத்தியது. அதன்பின் திமுகவுடன் 2001ஆம் ஆண்டு கூட்டணி.

மங்களூர் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு சட்டசபைக்குச் சென்றார். கூட்டணியில் திருமாவளவன் வெகுநாள் நீடிக்கவில்லை. 2 ஆண்டுகளில் சட்டசபை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.

கூட்டணியை விட்டு வெளியே வந்த கையோடு 2004ஆம் ஆண்டு மக்கள் கூட்டணி எனப் பல கட்சிகள் ஒன்று சேர்ந்து நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொண்டார். அடுத்து அதிமுக, பாமகவுடன் கூட்டணி அமைத்தார். 2006இல் இந்த கூட்டணி சட்டசபைத் தேர்தலில் களம் கண்டது. 11 தொகுதிகளில் போட்டியிட்ட திருமாவளவன் கட்சி 2இல் வெற்றி பெற்றது.

நாடாளுமன்ற உறுப்பினர்

2009ஆம் ஆண்டு மீண்டும் திமுகவோடு கூட்டணி அமைத்து நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்கிய திருமா, சிதம்பரம் தொகுதியில் வெற்றியும் பெற்றார். முதல் முறையாக நாடாளுமன்றத்திற்குப் புறப்பட்ட திருமா, அங்குத் தமிழருக்காகக் குரல் கொடுப்பதையே பணியாகச் செய்து வந்தார்.

திருமாவளவன் தெளிவான திட்டமிடலோடுதான் அரசியலில் பயணிக்கிறார். சாதி ரீதியான கட்சி என்ற அடையாளத்தை ஒருபோது விடுதலை சிறுத்தை பெறக் கூடாது என்பதற்காக பல்வேறு பணிகளைத் தொடர்ந்து செய்து வருகிறார். வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்களைக் கொண்டு விடுதலை சிறுத்தைகள் கட்சிக் கொடியை ஏற்ற செய்வது.

பிற சாதியினரை வேட்பாளராக முன்னிறுத்துவது என சாதாரணமாகப் பல நிகழ்வுகளை அரங்கேற்றினார். அதுமட்டுமின்றி கட்சி சார்பாகப் பெரியார், அம்பேத்கர், காமராஜர் பெயரில் தலைவர்களுக்கு விருது வழங்கும் வழக்கத்தையும் உருவாக்கினார். இதன் வழியில் 2011ஆம் ஆண்டு அம்பேத்கர் சுடர் என்ற விருதை பாமக நிறுவனர் ராமதாசுக்கு வழங்கச் செய்தார்.

சமூக நல்லிணக்கத்தைப் பேண அரசியல் ரீதியாகத் தொடர்ந்து பல்வேறு பணிகளை தொல். திருமாவளவன் செய்து வருகிறார். ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கான குரல் என, இவர் பெண்களின் பிரச்சினைகள் சார்ந்தும் தன்னை இயக்குகிறார்.

இந்நிலையில் இன்று அவரது 59வது பிறந்தநாள் விழாவை வெளிச்சம் தொலைக்காட்சி அலுவலகத்தில் பனையூர் பாபு எம்.எல்.ஏ அவர்களின் தலைமையில் திருமாவளவன் அவர்கள் கொண்டாடினார்.