புதிய சாதனை படைத்தார் ரொனால்டோ..!
ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் இறுதிச்சுற்றில் அதிக கோல் அடித்த வீரர்கள் பட்டியலில், போர்ச்சுகல் நட்சத்திரம் கிறிஸ்டொயானோ ரொனால்டோ முதல் இடத்துக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளார்.
தற்போது நடைபெற்று வரும் யூரோ தொடரின் எப் பிரிவு லீக் ஆட்டத்தில் போர்ச்சுகல் – ஹங்கேரி அணிகள் மோதின. நடப்பு சாம்பியனுக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் அசத்திய ஹங்கேரி வீரர்கள் 84வது நிமிடம் வரை கோல் ஏதும் விட்டுக்கொடுக்காமல் மாஸ் காட்டினர்.
இப்போட்டியை காண கொரோனா காலத்திலும் 60,000க்கும் அதிகமான ரசிகர்கள் திரண்டிருந்தனர்.விறுவிறுப்பான போட்டி நிச்சயமாக டிராவில் முடியும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், போர்ச்சுகல் வீரர் குவரெய்ரோ 84வது நிமிடத்தில் முதல் கோல் அடித்து அந்த அணிக்கு முன்னிலை கொடுத்தார்.

இதையடுத்து , 87வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் கோல் போட்டு அசத்திய ரொனால்டோ, கடைசி விநாடிகளில் (90’+2) அற்புதமான ஒரு பீல்டு கோல் அடிக்க போர்ச்சுகல் அணி 3-0 என்ற கோல் கணக்கில் ஹங்கேரியை வீழ்த்தி 3 புள்ளிகளை தட்டிச் சென்றது.
விறுவிறுப்பான இந்த போட்டியில் 2 கோல் அடித்ததன் மூலமாக, யூரோ கோப்பை பைனல்ஸ் தொடரில் அதிக கோல் அடித்த வீரர்கள் பட்டியலில் பிரான்ஸ் வீரர் மைக்கேல் பிளாட்டினியை (9 கோல்) பின்னுக்குத் தள்ளி 11 கோல்களுடன் முதலிடத்துக்கு முன்னேறினார் ரொனால்டோ. இங்கிலாந்தின் ஷியரர் (7 கோல்) 3வது இடத்தில் உள்ளார். கிரீஸ்மேன் (பிரான்ஸ்), ரூனி (இங்கி.) உள்பட 7 வீரர்கள் தலா 6 கோல் அடித்து அடுத்த இடத்தில் உள்ளனர்.
சர்வதேச போட்டிகளில் தாய்நாட்டுக்காக அதிக கோல் அடித்த வீரர்கள் பட்டியலில் 2வது இடத்தில் உள்ள ரொனால்டோ (106 கோல்), ஈரான் வீரர் அலி டையி (109) சாதனையை சமன் செய்ய இன்னும் 3 கோல் அடித்தால் போதும். இந்த தொடரிலேயே அவர் இந்த சாதனையையும் நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
