புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த வழக்கில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு மூன்று பேருக்கு எதிராக சிபிசிஐடி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகேயுள்ள முட்டுக்காடு ஊராட்சியில் உள்ள ஒரு குட்கிராமம் வேங்கைவயல். இங்கு, பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதிக்கு குடிநீர் விநியோகிக்கும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்ட சம்பவம், கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
2022-ஆம் ஆண்டு டிசம்பர் 26-ஆம் தேதி கண்டறியப்பட்ட இந்த கொடூரச் செயல் குறித்து சிபிசிஐடி விசாரித்து வந்தது. 2023 ஜனவரி 16-ஆம் தேதி விசாரணையைத் தொடங்கிய சிபிசிஐடி காவல்துறையினர், நேரடி சாட்சியங்களாக 300 பேரிடம் விசாரணை நடத்தியதுடன், 5 பேரிடம் குரல் பரிசோதனை, 31 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனை என அறிவியல் பூர்வமாகவும் விசாரணையை முன்னெடுத்தனர்.
இந்நிலையில், வேங்கைவயல் சம்பவம் குறித்த வழக்கு, நீண்ட நாட்களுக்குப் பிறகு சென்னை உயர்நீதிமன்றத்தில், தலைமை நீதிபதி ஶ்ரீராம் மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
இதையும் படிக்க: குடிநீர் தொட்டியின் மேல் செல்பி… லீக்கான ஆடியோ..! வேங்கைவயல் சம்பவம் நடந்தது எப்படி?
அப்போது, சம்பவம் நடந்து 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை மறுத்த தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், கடந்த 20-ஆம் தேதியே புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டதாக கூறினார்.
வழக்கின் விசாரணை முடிவடைந்து முரளி ராஜா, சுதர்சன் மற்றும் முத்துகிருஷ்ணன் ஆகிய 3 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
இந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், வேங்கைவயல், இறையூர் கிராமங்களை உள்ளடக்கிய முட்டுக்காடு ஊராட்சித் தலைவராக உள்ள பத்மா முத்தையா, குடிநீர் தொட்டி ஆப்ரேட்டராக இருந்த சண்முகத்தை பணிநீக்கம் செய்ததே சம்பவத்திற்கான மூல காரணம் என கூறியுள்ளது.
குடிநீர் ஆப்ரேட்டராக இருந்த சண்முகமுத்தின் நண்பர்களான சுதர்சன் மற்றும் முத்துகிருஷ்ணன் ஆகிய இரண்டு இளைஞர்களும் குடிநீர் தொட்டி மீது ஏறி மலம் கலந்ததாகவும், பத்மாவின் கணவரான முத்தையாவை பழிவாங்கும் நோக்கில், குடிநீரில் துர்நாற்றம் வீசுவதாக காவலர் முரளி ராஜா தவறான தகவலை பரப்பியதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும், அறிவியல்பூர்வமான ஆதாரங்களின் அடிப்படையில் குற்றம்சாட்டுவதாகவும் சிபிசிஐடி குறிப்பிட்டுள்ளது.
குற்றம்சாட்டப்பட்டுள்ள முரளி ராஜா, மணல்மேல்குடி காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்த நிலையில், இந்த சம்பவத்திற்குப் பிறகு ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். சம்பவத்தின் போது சுதர்சன் மற்றும் முத்துக்கிருஷ்ணன் ஆகிய இருவரும் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு வேலையின்றி இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, உயர்நீதிமன்ற வழக்கு விசாரணையின் போது, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படவில்லை என மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது. ஆனால், இந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என அறிவுறுத்திய நீதிபதிகள், குற்றப்பத்திரிகை மீது அதிருப்தி இருந்தால் கீழமை நீதிமன்றத்தை அணுகலாம் என சுட்டிக்காட்டினர்.
மேலும், மனுதாரர் தரப்பு பதில் அளிக்க 6 வார காலம் அவகாசம் வழங்கிய நீதிபதிகள் வழக்கு விசாரணையை மார்ச் 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். இதன் மூலம், 750 நாட்களுக்குப் பிறகு வேங்கைவயல் விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
Read More