Tamilnadu

தமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்

மக்களைத் தேடி இனி அதிகாரிகள் வருவார்கள்: ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை தொடங்கிவைத்து முதல்வர்

உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நேற்று தொடங்கிவைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், மக்களைத் தேடி இனி அதிகாரிகள் வருவார்கள் என்று கூறினார்.

காமராஜர் பிறந்தநாளையொட்டி, சிதம்பரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் காமராஜர் படத்துக்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்திய முதல்வர் ஸ்டாலின், தொடந்து பரமேஸ்வரநல்லூர் பகுதியில் அமைக்கப்பட்ட அரங்கில் பேசியதாவது: 2021-ம் ஆண்டுக்கு முன்பு ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என அனைத்துத் தொகுதிகளிலும் மனுக்களைப் பெற்றோம். ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு ‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ என்று தனித் துறையை உருவாக்கி, அந்த மனுக்களுக்கு 100 நாட்களில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. திமுக ஆட்சியின் மீது நம்பிக்கைவைத்து, பல்லாயிரக்கணக்கான மனுக்களை மக்கள் வழங்கினர். அதற்காக ‘முதல்வரின் முகவரி’ என்ற தனித் துறையை உருவாக்கி, மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டது.
அதன் பிறகு ‘மக்களுடன் முதல்வர்’ என்ற திட்டத்தை தொடங்கி, தமிழ்நாடு முழுவதும் 5 ஆயிரம் இடங்களில் முகாம்கள் நடத்தி, பல லட்சம் மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டது. தற்போது தொடங்கப்பட்டுள்ள ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் முகாம்கள் நடைபெறும். தன்னார்வலர்கள் வீடுவீடாக வந்து மக்களின் குறைகளைக் கேட்டு, 46 சேவைகளுக்கான விண்ணப்பங்களை வழங்க உள்ளனர்.
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் மட்டும் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் வழங்கப்படும். தகுதி உள்ள மகளிர்க்கு கண்டிப்பாக மகளிர் உரிமைத்தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த திட்டத்தின்கீழ் சேவைகளைச் செய்ய மக்களைத் தேடி அதிகாரிகள், அலுவலர்கள் வருவார்கள். இந்த மேடையில் மார்க்சிய இயக்கத் தலைவர்கள், காந்திய வழித் தலைவர்கள், அம்பேத்கர் வழித் தலைவர்கள் ஒற்றுமையாக அமர்ந்திருக்கிறோம். இதைத்தான் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்று சொல்கிறேன். இதேபோல, தமிழ்நாடு ஓரணியில் நிற்கும்போது, டெல்லி காவி அணியின் கனவுத் திட்டமும் பலிக்காது.
இளையபெருமாளுக்கு மரியாதை.. அகில இந்திய தீண்டாமை ஒழிப்பு கமிட்டி தலைவராக இளையபெருமாள் இருந்தபோது, நாடு முழுவதும் பயணித்து, பட்டியலின மக்களின் மீதான சாதியக் கொடுமைகளை ஆய்வுசெய்து, அறிக்கையை உருவாக்கினார். அவர் அளித்த அறிக்கை, சாதி அமைப்பை துல்லியமாகப் பதிவு செய்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில்தான் தமிழகத்தில் பல்வேறு சமூகத்தைச் சேர்ந்த 29 அர்ச்சகர்கள், வெவ்வேறு கோயில்களில் பணியாற்றி வருகிறார்கள்.

1998-ல் அம்பேத்கர் பெயரிலான தமிழக அரசு விருதை முதன்முதலாக இளையபெருமாளுக்கு அப்போதைய முதல்வர் கருணாநிதி வழங்கினார். சிதம்பரத்தில் நூற்றாண்டு அரங்கம் மற்றும் சிலையை தற்போது திறந்து வைத்திருப்பது, திராவிட மாடல் அரசு அவருக்கு செலுத்தும் நன்றியாகும். இவ்வாறு முதல்வர் பேசினார்.

நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, எம்ஆர்கே.பன்னீர்செல்வம், சி.வெ.கணேசன், சாமிநாதன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், முன்னாள் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, கடலூர் எம்.பி. விஷ்ணு பிரசாத், எம்எல்ஏ-க்கள் கடலூர் கோ.ஐயப்பன், நெய்வேலி சபா ராஜேந்திரன், பண்ருட்டி வேல்முருகன், காட்டுமன்னார்கோவில் சிந்தனைச்செல்வன், மாவட்ட ஆட்சியர் சிபிஆதித்யா செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

46 சேவைகள்… முதல்வர் தொடங்கிவைத்துள்ள ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் பட்டா மாற்றம், பிறப்பு-இறப்பு சான்றிதழ், மின் இணைப்பு, வேளாண் மானியம், மகளிர் உதவித்தொகை உள்ளிட்ட 46 சேவைகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்படும். பொதுமக்கள் இந்த முகாமில் வழங்கும் மனுக்களுக்கு அதிகபட்சமாக 45 நாட்களில் தீர்வுகாண இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மகளிர் உதவித்தொகை பெற விரும்புவோர் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்றும் அரசுத் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்துக்காக நகர்புறப் பகுதிகளில் 3,768 முகாம்களும், ஊரகப் பகுதிகளில் 6,232 முகாம்களும் நடத்தப்பட உள்ளன.

Read More
தமிழ்நாடுநிகழ்ச்சிகள்

வேலைவாய்ப்பற்ற மயிலாடுதுறை இளைஞர்களே! உதவித்தொகை பெற இதுதான் கடைசி தேதி: முழு விபரம்

வேலைவாய்ப்பற்ற மயிலாடுதுறை இளைஞர்களே உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவுசெய்துள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியுள்ள பதிவுதாரர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். மேலும் 29.08.2025 அன்றுக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பித்து பயனடையுமாறு அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கேட்டுக்கொண்டுள்ளார்.

யார் தகுதியானவர்கள்?
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தில் பயன்பெற, 30.06.2025 அன்று ஐந்து வருடங்கள் முடிவடைந்த (மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை முறையாக புதுப்பித்துள்ள) பதிவுதாரர்கள் தகுதியுடையவர்கள் ஆவர். இதில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், மேல்நிலை வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்கள் ஆகியோர் அடங்குவர்.

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு சலுகைகள்
மாற்றுத்திறனாளிகளைப் பொறுத்தவரை, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள் அல்லது பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், மேல்நிலை வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்று 30.06.2025 அன்று ஒரு வருடம் முடிவடைந்த பதிவுதாரர்கள் தகுதியுடையவர்கள். மாற்றுத்திறனாளிகளுக்கு வருமானம் மற்றும் வயது உச்ச வரம்பு ஏதும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுப்பிரிவினருக்கான உதவித்தொகை விவரம்
பத்தாம் வகுப்பு தேர்ச்சியின்மை (SSLC-Failed) உள்ளவர்களுக்கு மாதம் ரூ.200/-

பத்தாம் வகுப்பு தேர்ச்சி (SSLC-Passed) பெற்றவர்களுக்கு மாதம் ரூ.300/-

மேல்நிலை வகுப்பு தேர்ச்சி (HSC-Passed) பெற்றவர்களுக்கு மாதம் ரூ.400/-

பட்டப்படிப்பு தேர்ச்சி (DEGREE-Passed) பெற்றவர்களுக்கு மாதம் ரூ.600/-
இந்த உதவித்தொகை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கணக்கிடப்பட்டு பயனாளியின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.

வயது மற்றும் வருமான வரம்பு (பொதுப்பிரிவினருக்கு)
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பிரிவினர் 45 வயதுக்குள்ளும், இதர பிரிவினர் 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.

குடும்பத்தின் அதிகபட்ச ஆண்டு வருமானம் ரூ.72,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை விவரம்:
பத்தாம் வகுப்பு தேர்ச்சியின்மை மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.600/-

மேல்நிலை வகுப்பு தேர்ச்சி (HSC-Passed) பெற்றவர்களுக்கு மாதம் ரூ.750/-

பட்டப்படிப்பு தேர்ச்சி (DEGREE-Passed) பெற்றவர்களுக்கு மாதம் ரூ.1000/-

மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை ஒவ்வொரு மாதமும் நேரடியாக அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
தகுதியற்றவர்கள் யார்?
ஏற்கனவே மூன்று ஆண்டுகள் உதவித்தொகை பெற்றவர்கள்.

பொறியியல், மருத்துவம், விவசாயம் மற்றும் சட்டம் போன்ற தொழில் சார்ந்த பட்டப் படிப்புகள் முடித்தவர்கள்.

அரசுப்பணியில் உள்ளவர்கள் அல்லது தனியார் துறையில் ஒருமுறையாவது பணியில் சேர்ந்து ஊதியம் பெற்றவர்கள் அல்லது பெறுபவர்கள்.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறுபவர்கள் மற்றும் அரசின் வேறு ஏதேனும் திட்டத்தில் உதவித்தொகை பெறுபவர்கள்.

எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் தற்போது பயில்பவர்கள்.
விண்ணப்பிக்கும் முறை
தகுதியுடைய பதிவுதாரர்கள், தேவையான அனைத்து அசல் மற்றும் நகல் ஆவணங்களுடன் நேரில் விண்ணப்பிக்கலாம்.

தேவையான ஆவணங்கள்
வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை

பள்ளி, கல்லூரிகளின் மதிப்பெண் சான்றிதழ் மற்றும் மாற்றுச்சான்றிதழ்

குடும்ப அட்டை
ஆதார் அட்டை
சாதிச்சான்றிதழ்
தேசியமயமாக்கப்பட்ட ஏதேனும் ஒரு வங்கியில் தங்கள் பெயரிலுள்ள வங்கிக் கணக்குப் புத்தகம்
அணுக வேண்டிய முகவரி
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம்,

2வது தெரு, பாலாஜி நகர்,

பூம்புகார் சாலை,

மயிலாடுதுறை-1.

விண்ணப்பப் படிவத்தை அலுவலகத்தில் இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம் அல்லது https://tnvelaivaaippu.gov.in/download.html என்ற இணையதள பக்கத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இணையதளத்தில் பதிவிறக்கம் செய்பவர்கள் 04364-299790 என்ற அலுவலக தொலைபேசி எண்ணை தொடர்புகொண்டு உரிய அறிவுரை பெற்று பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை 29.08.2025-க்குள் சமர்ப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி தகுதியுள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயனடையுமாறு மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.

Read More
தமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்

மனுக்கள் மீது உடனடி தீர்வு – ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் இன்று முதல்…

’உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்க இருக்கும் நிலையில், முகாம் நடத்துவதற்கு முன்பாக தன்னார்வலர்கள் மூலம் மக்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசின் செய்தித் தொடர்பாளர் அமுதா தெரிவித்துள்ளார்.
மக்கள் வசிக்கும் பகுதிகளிலேயே அரசின் சேவைகளை கொண்டு செல்லும் விதமாக ’உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்த உள்ளது. இந்த திட்டம் குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அரசின் செய்தித் தொடர்பாளர் அமுதா, ’உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை முதலமைச்சர் சிதம்பரத்தில் தொடங்கி வைக்க இருப்பதாகக் கூறினார்.
இந்த திட்டத்தின் கீழ் நகர்ப்புறங்களில் 3738 முகாம்கள், ஊரகப் பகுதிகளில் 6232 முகாம்கள் என நவம்பர் மாதம் வரை 10 ஆயிரம் முகாம்கள் நடத்தப்பட உள்ளதாகவும், நகர்ப்புறத்தில் 43 சேவைகள், ஊரகப் பகுதிகளில் 46 சேவைகள் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் ஆவணங்களை முறையாக மக்கள் கொண்டுவந்தால் உடனடியாக மனு மீது தீர்வு காணப்படும் என்றும் அமுதா கூறினார்.கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்களும் ’உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களில் பெறப்படும் என்றும் மகளிர் உரிமைத் தொகை பெறாத பெண்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து முகாம்களில் கொடுக்கலாம் என்றும் தெரிவித்தார்.முகாம்களில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்று கூறிய அமுதா, இந்தத் திட்டத்திற்காக பிரத்யேகமாக “உங்களுடன் ஸ்டாலின்” இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Read More
தமிழ்நாடுநிகழ்ச்சிகள்

ரேஷன் கார்டில் மற்றம் செய்ய விரும்புவோர் இன்று நடக்கும் முகாமில் மாற்றம் செய்யலாம்…

தமிழகத்தில், 2.26 கோடி ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். இதில் ஏ.ஏ.ஒய்., மற்றும் பி.எச்.எச்., ரேஷன் கார்டுகளில் 3 கோடியே 65 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர்.உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கீழ் வழங்கப்படும் ரேஷன் கார்டு மூலமாகத்தான் மகளிர் உரிமைத் திட்டம் போன்ற நலத்திட்டங்களை மக்கள் பெற முடிகிறது.
இந்த நிலையில் பொது விநியோகத் திட்டப் பயனாளிகள் தங்கள் ரேஷன் கார்டுகளில் பெயர் நீக்கம், சேர்த்தல், முகவரி சான்று, தொலைபேசி எண் பதிவு ஆகியவற்றை மேற்கொள்ள வருகின்ற சனிக்கிழமை (12ஆம் தேதி) அன்று பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில்,பொது விநியோகத் திட்டத்தின் பயன்களை குடும்ப அட்டைதாரர்கள் எளிதில் பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் சென்னையைப் பொறுத்தவரை மண்டல அலுவலகங்களிலும் மக்கள் குறைதீர் முகாம் பிரதி மாதமும் இரண்டாம் சனிக்கிழமை நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது.
ஜூலை 2025 மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் 12.07.2025 அன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறவுள்ளது.
குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு / மாற்றம் செய்தல் மற்றும் அங்கீகாரச் சான்று உள்ளிட்ட பொது விநியோகத் திட்டம் தொடர்பான சேவைகள் மேற்கொள்ளப்படும்.
சென்னையிலுள்ள 19 மண்டல அலுவலகப் பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இச்சேவையினைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பிற மாவட்டங்களில் மண்டல, வட்ட வழங்கல் அதிகாரிகள் அளவில் இந்த குறைதீர் முகாம்கள் நடத்தப்படும்.

Read More
அறிவியல்ஆன்மீகம்தமிழ்நாடு

இன்று குரு பூர்ணிமா… என்ன செய்ய வேண்டும் …

குரு பூர்ணிமா என்பது ஆனி மாத பௌர்ணமி தினத்தில் கொண்டாடப்படும் ஒரு புனிதமான பண்டிகையாகும். குருமார்கள், ஆசிரியர்கள், மற்றும் வழிகாட்டிகளைப் போற்றும் நாளாக இது அனுசரிக்கப்படுகிறது. “குரு” என்ற சமஸ்கிருத சொல்லுக்கு “அறியாமை என்னும் இருளை நீக்கி அறிவொளியைப் புகட்டுபவர்” என்று பொருள்.
இந்து மதத்தில் மட்டுமல்லாமல், பௌத்த மற்றும் சமண மதங்களிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக குரு பூர்ணிமா கொண்டாடப்படுகிறது. மகாபாரதத்தை எழுதிய மகரிஷி வேத வியாசரின் பிறந்த நாளாகவும் இது கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், மாணவர்கள் தங்கள் குருக்களின் ஆசிகளைப் பெறவும், அவர்களுக்கு மரியாதை செலுத்தவும் செய்கிறார்கள்.
ஒவ்வொரு வருடமும் ஆனி மாதத்தில் வரும் பௌர்ணமி “குரு பூர்ணிமா” அல்லது “வியாச பூர்ணிமா” என்று அழைக்கப்படுகிறது. ஒரு வருடத்தில் வரும் மிக முக்கியமான பெளர்ணமிகளில் ஆனி மாதத்தில் வரும் குரு பூர்ணிமாவும் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த பெளர்ணமி மட்டும் குருவிற்கு மரியாதை செலுத்தும் குரு பூர்ணிமாவாக கொண்டாடப்படுவதற்கு மிக முக்கியமான காரணம் சொல்லப்படுகிறது. வியாசர் அவதரித்த திருநாளையே குரு பூர்ணிமாவாக கொண்டாடுகிறோம். இப்படி போற்றும் அளவிற்கு வியாசர் அப்படி என்ன செய்தார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
சன்னியாச ஆசிரமத்தில், ஒவ்வொரு சன்னியாசியும் ஒவ்வொரு விதமான முறையில் துறவு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பார்கள். “குடீசகர்கள்” என்று அழைக்கப்படும் சன்னியாசிகள் ஒரு குடிசையிலேயே வாழ்ந்து கொண்டிருப்பார்கள். “பஹுதகர்கள்” என்று அழைக்கப்படும் இன்னொரு விதமான துறவிகள், அதிக நீர் உள்ள நதிக்கரையிலேயே வாழ்ந்து கொண்டிருப்பார்கள். “பரிவ்ராஜகர்கள்” என்று அழைக்கப்படும் ஒரு விதமானவர்கள், பயணம் செய்து கொண்டே இருப்பார்கள். ஒரு இடத்தில் (ஊரில்) மூன்று அல்லது சில குறிப்பிட்ட நாட்கள் தான் தங்குவார்கள்.
பரிவ்ராஜகர்கள் ஞானத்தை அடைந்திருப்பார்கள். குரு-சிஷ்ய பரம்பரையில் வந்திருப்பார்கள். தாங்கள் தங்கும் கிராமத்திலோ நகரத்திலோ பிச்சை எடுத்து தான் உணவு உட்கொள்வார்கள். சன்னியாசிகளுக்குப் பற்றின்மை எனும் பண்பு மிகவும் முக்கியமானது. ஒரே இடத்தில் அதிக நாட்கள் தங்கினால் அந்த இடத்திலோ, அங்கு வாழும் மக்களின் மேலோ மற்றும் அங்கு வாழும் மக்களுக்கு இவர்கள் மீதோ பற்று வந்துவிடும். அதனால் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு சஞ்சாரம் செய்து கொண்டே இருப்பார்கள். ஆனால் மழைக் காலத்திலோ ஊர் ஊராக சஞ்சரிக்க முடியாது. ஏனெனில் மழைக் காலத்தில் புதிதாகப் புட்கள், செடிகள் துளிர் விடும்; புழு பூச்சிகள் மண்ணிலிருந்து வெளி வரத் தொடங்கும். துறவிகளுக்கு அகிம்சை என்ற பண்பும் மிகவும் முக்கியமானது.
புட்களையும், செடிகளையும், புழு பூச்சிகளையும் மிதியாமல் சஞ்சரிப்பது கடினம் என்பதால், மழைக்காலம் தொடங்கி, முடியும் வரை (நான்கு மாதங்கள்) ஒரே இடத்தில் தங்கி விடுவார்கள். குறிப்பாக இயற்கை சீர் கெடாமல் இருந்த பண்டைக் காலத்தில், ஆனி மாத பவுர்ணமி அன்று தான் மழைக் காலமும் தொடங்கும். அவர்கள் எந்த ஊரில் மழைக்காலம் தொடங்கும் பொழுது இருக்கிறார்களோ அதே ஊரிலேயே நான்கு மாதங்களும் தங்கி விடுவார்கள். அவ்வூரில் வாழும் மக்கள் சன்னியாசிகளிடம் நான்கு மாதங்களில் வேதாந்த உபதேசம் செய்யுமாறு வேண்டிக் கொள்வார்கள். அந்தந்த ஊர் மக்களே அவருக்குத் தேவையான குடிசையை அமைத்து கொடுத்து பிச்சைக்கும் ஏற்பாடு செய்வார்கள்.
வாழ்க்கை முழுவதும் ஒவ்வொருவரும் வேதாந்தத்தில் ஈடுபட்டு, குரு மற்றும் ஈஸ்வரனை வழிபட வேண்டும். சன்னியாசி தான் ஞானத்தை பெற்றதற்கு நன்றியை வெளிபடுத்தும் வகையிலும், “தான் துவங்க இருக்கும் வேதாந்த உபதேசம் தடையில்லாமல் முடிவடையவும், வியாச பகவானை ஆராதித்துப் பூஜை செய்யும் இந்நாள், குரு பவுர்ணமி என்றும் வியாச பவுர்ணமி என்றும் அழைக்கப்படுகிறது. இந்நாளில் துறவிகள் மட்டுமில்லாமல், ஞான மற்றும் மோட்ச சாஸ்திரத்தை அறிய முற்படும் அனைவரும் தங்களது குருவையும், வியாச பகவானையும் ஆராதிக்க வேண்டும். வியாச பகவானை நிமித்தமாக வைத்து, (சிவ பெருமான் அல்லது ஸ்ரீமன் நாராயணன்) தொடங்கி, தங்களுடைய இப்பொழுதைய குரு வரை குரு பரம்பரையில் உள்ள அனைவரையும் இந்நாளில் வழிபட வேண்டும்.

Read More
ஆன்மீகம்தமிழ்நாடு

திருச்செந்தூர் முருகன் கோயில் கும்பாபிஷேகம்

திருச்செந்தூர் முருகன் கோயில் கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது.திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில், முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாவது தலமாக விளங்குகிறது. நூற்றாண்டுகளாக தமிழ் பக்தர்களின் ஆன்மீக ஈர்ப்பை தக்கவைத்திருக்கின்ற இத்தலத்தில், ஜூலை 7ம் தேதி கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. புணிதநீர் தரிசனம் மற்றும் கும்பாபிஷேக தருணத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோஷம் எழுப்பி முழங்கினர்.
அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த வாரம் முழுவதும் யாகசாலை பூஜைகள், மந்திரோச்சாடனங்கள் நடைபெற்றன. இன்று அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் பெருகத் தொடங்கியது. குடமுழுக்கு நிகழ்வின் போது புனிதநீர் ராஜகோபுரத்தின் மீது ஊற்றப்பட்டது. அதே நேரத்தில் ட்ரோன்களின் உதவியுடன் கோயிலின் வளாகம் முழுவதும் திரட்டிய புனிதநீர் பக்தர்களின் மீது தெளிக்கப்பட்டது. பக்தர்கள் “அரோகரா அரோகரா” என உரக்க முழங்கி, “வெற்றிவேல் வீரவேல்” எனக் கைகொட்டி ஆரவாரம் செய்தனர்.
சிறப்பு அம்சம் என்னவென்றால், இந்த ஆண்டின் கும்பாபிஷேக நிகழ்ச்சி தமிழ் மந்திரங்களோடும் நடத்தப்பட்டது. இதற்கு பெரிய வரவேற்பும், பாராட்டும் கிடைத்தது. இதன்மூலம், தமிழில் பக்தியையும் ஆன்மீக பாரம்பரியத்தையும் பரப்ப வேண்டிய முயற்சி வெற்றிகரமாக அமைந்தது.
பாதுகாப்பு நடவடிக்கையாக 6,000க்கும் மேற்பட்ட போலீசார் பணியில் ஈடுபட்டனர். எமர்ஜென்சி மருத்துவ குழுக்கள், தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் இருந்தன. பக்தர்கள் இடைவிடாது அலைமோதியதால், கோயில் நிர்வாகமும் அறநிலையத்துறை அமைச்சகமும் சிறப்பு பேருந்துகள், ரயில்கள் ஏற்பாடு செய்திருந்தது. சென்னை, கோவை, மதுரை, சேலம், திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பக்தர்கள் திரண்டனர்.
ராஜகோபுரம், மற்ற கோபுரங்கள் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டிருந்தது. வண்ண விளக்குகள், பூச்சோலை அலங்காரங்கள், பழங்கள், மஞ்சள்-குங்குமக் கப்புகள் என பக்திப் பரவசம் பொங்கியது. இன்று முழுவதும் முருகன் பாட்டுக்கள், பன்னிரு திருமுறை பாடல்கள் ஒலிபரப்பானது. இந்த நிகழ்வை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு முருகன் கோயில்களிலும் சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடைபெற்றன. வெளிநாட்டுப் பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் திருச்செந்தூருக்கு வந்தனர். முருகப்பெருமானின் அருளைப் பெற தங்களது நேரத்தையும் சக்தியையும் செலுத்தி பக்தர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். மிகுந்த பக்தி உணர்வோடு நடந்த இந்த கும்பாபிஷேகம், தமிழர் ஆன்மிக மரபின் பெருமையை மீண்டும் ஒளிர வைத்தது.

Read More
இந்தியாதமிழ்நாடுநிகழ்ச்சிகள்வணிகம்வணிகம்

குறையும் ஜிஎஸ்டி..! எந்தெந்த பொருட்களுக்கு …

டூத் பேஸ்ட், காலணி, ரெடிமேட் ஆடைகள், வாஷிங் மெஷின் உள்ளிட்ட பொருட்களின் ஜிஎஸ்டியை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் 4 அளவுகளில் ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகிறது. அதாவது, 5, 12, 18 மற்றும் 28 விழுக்காடு என்ற வகையில் ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டு வருகிறது. இதில், 12 விழுக்காடு என்ற வகையை ரத்து செய்ய மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாக கூறப்பட்ட நிலையில், அதன் கீழ் வரும் பொருட்களுக்கான வரியை 5 விழுக்காடாக குறைக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி, டூத் பேஸ்ட், காலணி, ரெடிமேட் ஆடைகள், வாஷிங் மெஷின் மீதான வரி குறைக்கப்பட வாய்ப்புள்ளது. குக்கர், குடை, தையல் இயந்திரம், வாட்டர் ஹீட்டர் உள்ளிட்ட பொருட்களுக்கான ஜிஎஸ்டியும் 12 விழுக்காட்டில் இருந்து 5 சதவிகிதத்திற்கு குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மூலம், பெருவாரியான வீட்டு உபயோகப் பொருட்களின் விலை குறையும் என கூறப்படுகிறது. இம்மாதத்தில் நடைபெற உள்ள 52 ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இது தொடர்பான முடிவு எடுக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

Read More
தமிழ்நாடுதொழில்நுட்பம்

ரயில் டிக்கெட் முன்பதிவு: சூப்பர் வசதிகள் அறிமுகம் – இனி ஈஸியா டிக்கெட் புக் பண்ணலாம்!

ரயில் புறப்படுவதற்கு எட்டு மணி நேரத்துக்கு முன்னதாகவே முன்பதிவு பட்டியல் (Reservation Chart) தயாராகிவிடும். அதுமட்டுமில்லாமல், டிக்கெட் முன்பதிவு செய்யும் முறையிலும் பெரிய மாற்றம் வரப்போகிறது. ஒரு நிமிடத்தில் ஒன்றரை லட்சம் டிக்கெட்டுகள் வரை புக் செய்யலாம்.
இனி ரயில்கள் புறப்படுவதற்கு 8 மணி நேரத்துக்கு முன்பே முன்பதிவு பட்டியல் தயாராகிவிடும். இப்போது 4 மணி நேரத்துக்கு முன்புதான் பட்டியல் தயாராகும். பயணிகளின் வசதிக்காக இந்த மாற்றம் செய்யப்படுகிறது.
ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஸ்னவ் உத்தரவு!
ரயில்வே வாரியம் இதற்கான திட்டத்தை உருவாக்கியுள்ளது. ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் இதை கொஞ்சம் கொஞ்சமாக அமல்படுத்த உத்தரவிட்டுள்ளார். இதனால் எந்த குழப்பமும் இருக்காது என்று அவர் கூறியுள்ளார். விரைவில் இது எப்போது அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட உள்ளது.
ரயில்வே அமைச்சகம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “ரயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்துக்கு முன்பு முன்பதிவு பட்டியல் தயாராவதால் பயணிகளுக்கு குழப்பம் ஏற்படுகிறது. புதிய நேர நிர்ணயம் பயணிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும்” என்று கூறப்பட்டுள்ளது. காத்திருப்பு பட்டியலில் உள்ள பயணிகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அவர்களுக்கு காத்திருப்பு பட்டியல் நிலவரம் முன்கூட்டியே தெரிந்துவிடும். தூர இடங்களில் இருந்து வரும் பயணிகளுக்கு இது மிகவும் வசதியாக இருக்கும். டிக்கெட் கிடைக்கவில்லை என்றால் வேறு ஏற்பாடு செய்யவும் அவர்களுக்கு நேரம் கிடைக்கும்.
ரயில்வே அமைச்சகம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “ரயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்துக்கு முன்பு முன்பதிவு பட்டியல் தயாராவதால் பயணிகளுக்கு குழப்பம் ஏற்படுகிறது. புதிய நேர நிர்ணயம் பயணிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும்” என்று கூறப்பட்டுள்ளது. காத்திருப்பு பட்டியலில் உள்ள பயணிகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அவர்களுக்கு காத்திருப்பு பட்டியல் நிலவரம் முன்கூட்டியே தெரிந்துவிடும். தூர இடங்களில் இருந்து வரும் பயணிகளுக்கு இது மிகவும் வசதியாக இருக்கும். டிக்கெட் கிடைக்கவில்லை என்றால் வேறு ஏற்பாடு செய்யவும் அவர்களுக்கு நேரம் கிடைக்கும்.
புதிய ப்யணிகள் முன்பதிவு திட்டத்தின் மூலம் டிக்கெட் சரிபார்ப்பு, டிக்கெட் பற்றிய தகவல்களை அறிதல் என்பது ஒரு நிமிடத்தில் 4 லட்சம் என்ற அளவில் இருந்து 40 லட்சமாக உயர்த்த முடியும். இந்த புதிய முறையில் பல மொழிகளில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். இது உபயோகிக்க எளிதாகவும் இருக்கும். அஷ்வினி வைஷ்ணவ் தலைமையில் நடந்த கூட்டத்தில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டன. இந்த திட்டத்தை Centre for Railway Information Systems (CRIS) என்ற அமைப்பு செய்து வருகிறது.
டிக்கெட் முன்பதிவு!
“புதிய PRS-ல் பயணிகள் தங்களுக்கு பிடித்த இடத்தை தேர்வு செய்யலாம். கட்டண விவரங்களையும் பார்க்கலாம்” என்று அதிகாரி ஒருவர் கூறினார். ஜூலை 1 முதல் IRCTC இணையதளம் மற்றும் மொபைல் செயலியில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் கட்டாயம் பயனர் அங்கீகாரம் (user authentication) செய்ய வேண்டும்.
ரயில்வே துறையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நிறைய மாற்றங்கள் அமலுக்கு வரும் போது பயணிகளுக்கு சிறப்பான அனுபவமாக இருக்கும். டிக்கெட் முன் பதிவு செய்யும் போது பயனர்களுக்கு எளிதாக, விரைவான சேவையை வழங்கும் போது டிக்கெட் முன் பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரிக்கும்.

தட்கல் முறையில் முன் பதிவு செய்யும் போது ஏற்படும் சில தொழில்நுட்ப சிக்கல்களும் சரி செய்யப்படும் பட்சத்தில் பயணிகள் நல்ல அனுபவத்தை பெறுவார்கள்.

Read More
தமிழ்நாடுதொழில்நுட்பம்

சென்னையில் முதற்கட்டமாக 625 மின்சார பஸ்கள்: ஜூன் 30-இல் இருந்து தொடக்கம்…

சென்னை மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில், வியாசர்பாடி பணிமனையில் இருந்து அதிநவீன குறைந்த தள மின்சாரப் பேருந்துகள் இயக்கத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வரும் ஜூன் 30-ந் தேதி (திங்கட்கிழமை) கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார். இதன் மூலம் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் (MTC) மின்சாரப் பேருந்து சேவைகள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்படுகின்றன. இது சென்னையின் போக்குவரத்து வரலாற்றில் முக்கிய தருணமாக பார்க்கப்படுகிறது.
இது குறித்து மாநகரப் போக்குவரத்துக் கழக வட்டாரங்களின் தகவல்படி, சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் 50 வழித்தடங்களில் மொத்தம் 625 மின்சாரப் பேருந்துகளை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பிரம்மாண்ட முயற்சி, உலக வங்கி ஆதரவுடன் செயல்படுத்தப்படும் சென்னை நகர கூட்டாண்மை திட்டம் – நிலையான நகர்ப்புற சேவைகள் திட்டத்தின் (C-SUSP) முதல் கட்டத்தின் ஒரு பகுதியாகும். இத்திட்டத்தின் கீழ், செயல்பாடு அடிப்படையிலான மொத்த செலவு ஒப்பந்த (Gross Cost Contract – GCC) மாதிரியின் மூலம் 625 மின்சாரப் பேருந்துகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.

அசோக் லேலண்ட் மற்றும் ஸ்விட்ச் மொபிலிட்டியின் துணை நிறுவனமான ஓ.ஹெச்.எம் குளோபல் மொபிலிட்டி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு இந்த ஜி.சி.சி (GCC) ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. மாநகரப் போக்குவரத்துக் கழகம், ஏசி அல்லாத மின்சாரப் பேருந்துகளுக்கு ஒரு கிலோமீட்டருக்கு ரூ. 77.16 மற்றும் ஏசி மின்சாரப் பேருந்துகளுக்கு ஒரு கிலோமீட்டருக்கு ரூ. 80.86 என்ற தொகையைச் செலுத்தும். இந்த புதிய மின்சாரப் பேருந்துகள் 400 ஏசி அல்லாத மற்றும் 225 ஏசி (Air-Conditioned) வசதியுடன் இயக்கப்படுகிறது.

இந்தப் பேருந்துகள் வியாசர்பாடி, பெரும்பாக்கம், தண்டையார்பேட்டை-I, பூந்தமல்லி மற்றும் மத்திய பணிமனை ஆகிய ஐந்து முக்கிய பணிமனைகளில் இருந்து இயக்கப்பட்டு பராமரிக்கப்படும். இந்த மின்சாரப் பேருந்துகளின் செயல்பாடு மற்றும் பராமரிப்புக்காக ஐந்து பணிமனைகளை மேம்படுத்த மாநகரப் போக்குவரத்துக் கழகம் ரூ.100 கோடிக்கு மேல் செலவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த அதிநவீன மின்சாரப் பேருந்துகள் ஏற்கனவே உள்ள மற்றும் புதிதாக அறிவிக்கப்பட்ட வழித்தடங்களில் இயக்கப்படும். அவை மெட்ரோ ரயில் நிலையங்கள், குடியிருப்புப் பகுதிகள், தகவல் தொழில்நுட்ப வழித்தடங்கள் மற்றும் வர்த்தக மையங்களை இணைக்கும். இந்த நடவடிக்கை, கடைசி மைல் இணைப்பை மேம்படுத்துவதோடு, நகரில் வாகனப் புகையால் ஏற்படும் காற்று மாசுபாட்டைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

முதல்வர் தொடங்கி வைக்கும் வியாசர்பாடி பணிமனையில் இருந்து 13 வழித்தடங்களில் 120 ஏசி அல்லாத பேருந்துகள் இயக்கப்படும். மத்திய பணிமனையில் இருந்து 10 வழித்தடங்களில் 145 பேருந்துகள் இயக்கப்படும். இதில் 100 ஏசி பேருந்துகள் அடங்கும். இது அனைத்து பணிமனைகளிலும் அதிக எண்ணிக்கையிலான ஏசி பேருந்துகளாகும். பெரும்பாக்கம் பணிமனை 11 வழித்தடங்களில் 135 பேருந்துகளை இயக்கும், இதில் 55 ஏசி பேருந்துகள் அடங்கும். பூந்தமல்லி பணிமனை எட்டு வழித்தடங்களில் 125 பேருந்துகளை இயக்கும், இதில் 45 ஏசி பேருந்துகள் அடங்கும். தண்டையார்பேட்டை-I பணிமனை 10 வழித்தடங்களில் 100 பேருந்துகளை இயக்கும், இதில் 25 ஏசி பேருந்துகள் அடங்கும்.

தற்போது, சென்னை பெருநகரப் பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் உள்ள 32 பணிமனைகள் மூலம் மாநகரப் போக்குவரத்துக் கழகம் தினசரி 3,233 திட்டமிடப்பட்ட பேருந்து சேவைகளை இயக்குகிறது. இதன் மூலம் சுமார் 30 லட்சம் பயணிகள் தினசரி பயணிப்பார்கள். இந்த மின்சாரப் பேருந்துகள் அறிமுகப்படுத்தப்படுவதன் மூலம், மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் தினசரி திட்டமிடப்பட்ட சேவைகள் 3,233ல் இருந்து 3,858 ஆக உயரும். அதாவது கூடுதலாக 625 சேவைகள். இந்த மின்சாரப் பேருந்துகள் படிப்படியாக அறிமுகப்படுத்தப்படும் என்றும், இது சேவை வரம்பை மேம்படுத்தி, வளர்ந்து வரும் தேவையைப் பூர்த்தி செய்து, ஒட்டுமொத்த நம்பகத்தன்மையை மேம்படுத்தும் என்றும் மாநகரப் போக்குவரத்துக் கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வியாசர்பாடி: 13 வழித்தடங்கள் | 120 பேருந்துகள் (120 ஏசி அல்லாத)

பெரும்பாக்கம்: 11 வழித்தடங்கள் | 135 பேருந்துகள் (80 ஏசி அல்லாத, 55 ஏசி)

தண்டையார்பேட்டை-I: 10 வழித்தடங்கள் | 100 பேருந்துகள் (75 ஏசி அல்லாத, 25 ஏசி)

பூந்தமல்லி: 8 வழித்தடங்கள் | 125 பேருந்துகள் (80 ஏசி அல்லாத, 45 ஏசி)

மத்திய பணிமனை: 10 வழித்தடங்கள் | 145 பேருந்துகள் (45 ஏசி அல்லாத, 100 ஏசி)

வியாசர்பாடி பணிமனை பேருந்து வழித்தடங்கள்:

46G எம்.கே.பி. நகர் முதல் எம்.ஜி.ஆர் கோயம்பேடு வரை

57X வள்ளலார் நகர் முதல் பெரியபாளையம் வரை

170TX கிளாம்பாக்கம் பி.எஸ் முதல் கண்ணதாசன் நகர் வரை

37 வள்ளலார் நகர் முதல் பூந்தமல்லி வரை

33CX அண்ணா சதுக்கம் முதல் கண்ணதாசன் நகர் வரை

64K பிராட்வே முதல் கண்ணதாசன் நகர் வரை

57 வள்ளலார் நகர் முதல் ரெட்ஹில்ஸ் வரை

2B வள்ளலார் நகர் முதல் கண்ணதாசன் நகர் வரை

170C டி.வி.கே நகர் முதல் கிண்டி டி.வி.கே எஸ்டேட் வரை

64E எம்.எம்.பி.டி முதல் சென்ட்ரல் வரை (எழும்பூர் வழியாக)

164E பெரம்பூர் முதல் மணலி வரை

46 டி.வி.கே நகர் முதல் எம்.ஜி.ஆர் கோயம்பேடு வரை

113E எம்.எம்.பி.டி முதல் கிண்டி ஐ.இ வரை

Read More
இந்தியாதமிழ்நாடுதொழில்நுட்பம்

இனி பிறப்பு சான்றிதழ் வழங்க புதிய நடைமுறை – மத்திய அரசு அதிரடி உத்தரவு

தேசிய மக்கள்தொகை பதிவேடு, ரேஷன் கார்டுகள், சொத்துப் பதிவு மற்றும் வாக்காளர் பட்டியல்களைப் புதுப்பிக்க இந்த ஒருங்கிணைந்த தரவுதளம் பயன்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.
புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படும் முன்பாக பிறப்பு சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
பிறப்பு சான்றிதழ் தொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும் இந்திய பதிவாளர் ஜெனரல் கடிதம் எழுதியுள்ளார். அதில், புதிதாகப் பிறந்த குழந்தைகள் மருத்துவமனைகளில் இருந்து, குறிப்பாக அரசு மருத்துவமனைகளில் இருந்து, டிஸ்சார்ஜ் செய்யப்படுவதற்கு முன்பு, அவர்களின் தாய்மார்களிடம் பிறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
பிறப்பு பதிவு முடிந்தவுடன், பிறப்பு சான்றிதழை பதிவாளர் உடனடியாக வழங்க வேண்டும் என்றும் மின்னணு அல்லது பிற வடிவத்தில் பிறப்புச் சான்றிதழை ஏழு நாட்களுக்குள் வழங்க வேண்டும் என்றும் பதிவாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் குழந்தை பிறப்பு பதிவு மையங்களாக செயல்படும் நிலையில், பிறப்பு சான்றிதழின் பயன்பாடு அண்மை காலமாக பன்மடங்கு அதிகரித்துள்ளதால், உடனடியாக பிறப்பு சான்றிதழை வழங்குவதன் முக்கியத்துவத்தை உணர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேசிய மக்கள்தொகை பதிவேடு, ரேஷன் கார்டுகள், சொத்துப் பதிவு மற்றும் வாக்காளர் பட்டியல்களைப் புதுப்பிக்க இந்த ஒருங்கிணைந்த தரவுதளம் பயன்படுத்தப்படும் என்றும் இது குடிமக்களுக்கு தேவையான வசதியை ஏற்படுத்தும் என்றும் இந்திய பதிவாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Read More