அமைச்சர் செந்தில் பாலாஜி மேல்முறையீடு வழக்கு – உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை
அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது மனைவி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு நாளை விசாரணைக்கு வருகிறது.
சட்ட விரோத பணபரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, இரு வேறு தீர்ப்புகளை வழங்கியதால் 3வது நீதிபதிக்கு வழக்கு விசாரணை மாற்றப்பட்டது.
3வது நீதிபதியாக நியமிக்கப்பட்ட சி.வி.கார்த்திகேயன், அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது செல்லும், அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டத்திற்கு உட்பட்டவர்தான். கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைக்கு எந்த தடையும் கோர முடியாது, விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். தான் குற்றம் செய்யவில்லை என்பதை விசாரணை நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டும். அமலாக்கத்துறை ஒருவரை கைது செய்தால், காவலில் எடுக்க வேண்டியது அவசியம். காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை கோருவது அவர்களின் உரிமை. ஆகவே அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கப்படுகிறது என தீர்ப்பு அளித்தார். இதனை தொடர்ந்து அவர் காவேரி மருத்துவமனையில் இருந்து புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.
இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பு மற்றும் அவரது மனைவி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது இந்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் பட்டியலிடப்பட்ட நிலையில், இந்த மனுவை நாளை விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்தது. தங்களது தரப்பு கருத்தை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்க கூடாது என அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடதக்கது.
