பிரபல ஜூவல்லரியில் வாங்கிய தங்க நகையில் கண்ணாடி துகள்கள்… போலீசில் பெண் புகார்…
சென்னை, தி.நகரில் உள்ள பிரபல நகைக்கடையான ஜி.ஆர்.டி. ஜூவல்லரியில், வாங்கிய நகையில் கண்ணாடி துகள்கள் இருப்பதாக பாண்டி பஜார் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பெங்களூர் எலக்ட்ரானிக் சிட்டி பகுதியைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவர் 2015 ஆம் ஆண்டு சென்னை வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள ஜி.ஆர்.டி. நகைக்கடையில், சீட்டு கட்டி 40.74 கிராம் எடையுள்ள தங்க நெக்லஸ் 1,15,704 ரூபாய்கு வாங்கியுள்ளார்.

கடந்த வாரம் நகையை அணிந்தபோது அது கழுத்தை அறுத்து விட்டதாக கூறி, பெங்களூருவில் உள்ள ஜி.ஆர்.டி. நகை கடைக்கு சென்று பழைய நகையைக் கொடுத்துவிட்டு புது நகையை வாங்க முயன்றுள்ளார். அப்போது பழைய நகையை பரிசோதித்தபோது, நகையின் உருண்டை பாகங்களின் உள்ளே கண்ணாடி துகல்கள் இருப்பதாக கூறியுள்ளனர். இது குறித்து கடையின் மேலாளரிடம் கேட்டபோது, உரிய பதிலளிக்காமல், தி.நகர் கடைக்கு சென்று விசாரித்துக் கொள்ளும்படி கூறியிருக்கிறார்.
இந்த நிலையில், சென்னை வந்த விஜயலட்சுமி, ஜி.ஆர்.டி. ஜூவல்லரி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, தி.நகர் துணை ஆணையாளரிடம் புகாரளித்தார். அவரது புகாரின்பேரில், சி.எஸ்.ஆர். போடப்பட்டு, பாண்டிபஜார் போலீசார் ஜி.ஆர்.டி. ஜூவல்லரியில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
