இந்தியா

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…! இந்திய வானிலை மையம் தகவல்…

வடமேற்கு வங்கக்கடலில் வரும் 21 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவ மழை காரணமாக நீலகிரி, கோவை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள திண்டுக்கல், தென்காசி மற்றும் கடலோர மாவட்டங்கள், புதுவை – காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.

இந்த நிலையில் வடமேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்து தாழ்வு பகுதி வரும் 21 ஆம் தேதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதற்கு முன்னதாக சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மழை பெய்யக் கூடும் என்றும், காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான பின் மழை குறையக் கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. புதிய காற்றழுத்த தாழ்வு காரணமாக கேரளா, கர்நாடகாவில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.