இந்தியாவின் தடகள மன்னன் மில்கா சிங் காலமானார்!
இந்திய தடகள வீரர் மில்கா சிங் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு, அதன் பின்னர் ஏற்பட்ட பாதிப்பால் உயிரிழந்துள்ளார்.

91 வயதான புகழ்பெற்ற இந்திய தடகள வீரர் மில்கா சிங், கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக, கடந்த மே 19 ம் தேதியிலிருந்து சண்டிகரில் உள்ள தனது வீட்டில் தனிமையில் இருந்தார். பின்னர் எடுக்கப்பட்ட பரிசோதனையில் தொற்று இல்லை என்று முடிவில் தெரியவந்தது.
பின்னர் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அவர் சிகிச்சைப் பலனின்றி நேற்று இரவு 11.30 மணியளவில் உயிரிழந்ததாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

மில்கா சிங் மனைவி நிர்மல் கார் (85), கொரோனா தொற்றால் உயிரிழந்து, ஐந்தே நாட்களான நிலையில், இவரின் இந்த மரணம், அவர்களின் குடும்பத்தினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அவர் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பஞ்சாப் முதலமைச்சர் அமரிந்தர் சிங் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

1929 ஆண்டு நவம்பர் 20ஆம் தேதி, பஞ்சாப் மாநிலத்தில் பிறந்தவர். மில்கா சிங் பிரபலமாகப் பறக்கும் சிங் என்று அழைக்கப்படுவார். 1956 மற்றும் 1964ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா சார்பில் பங்குபெற்றார். நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது அவருக்கு வழங்கப்பட்டுக் கவுரவிக்கப்பட்டிருக்கிறது.

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தடகள போட்டியில், நான்கு தங்கப்பதகங்களை வென்றார். மேலும் 1958ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளிலும் இந்தியாவிற்காகத் தங்கம் வென்றார். தடகள போட்டியில் 45.73 வினாடியில் அவர் ஓடி, அப்போது புதிய சாதனை படைத்தார்.
