இலங்கையில் தொடரும் கனமழை…! நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக அதிகரிப்பு !
இலங்கையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ள நிலையில், 6 மாவட்டங்களுக்கு நிலச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் ரத்னபுரா உள்ளிட்ட கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. முக்கிய நகரங்களில் உள்ள ஏராளமான வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. சுமார் 10 மாவட்டங்களில் உள்ள 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த சுமார் இரண்டரை லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர் கனமழையால் 800 வீடுகள் சேதமடைந்துள்ளன.
16 ஆயிரம் பேர் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதுவரை கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி 17 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மீட்புப்பணியில் ராணுவம் இறக்கிவிடப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் எல்லாம் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. கனமழை காரணமாக தென்மேற்கு பகுதிகளில் உள்ள அணைகள் நிரம்பி வழிகின்றன.
இந்நிலையில் இனி வரும் நாட்களில் மழையின் அளவு அதிகரிக்கக்கூடும் என்றும் 6 மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்படும் ஆபத்து உள்ளதாகவும் இலங்கை வானிலை மையம் எச்சரித்துள்ளது. இந்த தொடர் கனமழையால் இலங்கை மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
