இந்தியா

கொரோனா பாதித்த மாமனாரை முதுகில் சுமந்த மருமகள்… தன்னலத்தை துறந்து செயல்பட்டவருக்கு குவியும் பாராட்டு…

வில்லங்க மாமியார் ஒருவர், தனது மருமகளுக்கு கொரோனாவை பரப்பி அதன் மூலம் அவரை வீட்டை விட்டு விரட்டிய சம்பவம் தெலங்கானாவில் நடந்தது என்றால், கொரோனா பாதித்த தன் மாமனாரை முதுகில் சுமந்து சென்று மருத்துவமனையில் அவரது மருமகள் சேர்த்துள்ள சம்பவம் அசாமில் நடந்துள்ளது. நிகாரிகாவின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

அசாம் மாநிலம், ராஹா, பாட்டிகவானில் வசித்து வருபவர் துலேஷ்வர் தாஸ். இவருக்கு கொரோனா பாதிப்பு இருந்துள்ளது. வீட்டில் யாரும் இல்லாத நிலையில், அவரது மருமகள் நிகாரிகா, கொரோனா பாதித்த தன் 75 வயது மாமனாரை முதுகில் சுமந்து சென்று அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளார். இதனால் மருமகள் நிகாரிகாவுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கோவிட் மருத்துவ மையத்துக்கு அனுப்பப்பட்ட துலேஷ்வர் தாசுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நிகாரிகாவை வீட்டு தனிமையில் இருக்குமாறு மருத்துவர்கள் ஆலோசனை வழங்கினார். ஆனால், மாமனாரை மருத்துவமனையில் தனியேவிட நிகாரிக்கா மறுத்துள்ளார். பின்னர் இருவருக்கும் கொரோனா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டாலும் பரவாயில்லை என மாமனாரை தோளில் சுமந்து சென்று மருத்துவமனையில் சேர்த்த மருமகள் நிகாரிகாவை அப்பகுதிவாசிகள், நெட்டிசன்கள் பலர் பாராட்டி வருகின்றனர்.