அரசியல்இந்தியாதமிழ்நாடு

மம்தாவை கண்டித்து நாளை தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம். தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அறிவிப்பு

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்பாட்டம் நடத்தவுள்ளதாக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தது. வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு பா.ஜ.கவுக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு பெரிய கலவரமானது. இந்த விவகாரம் தொடர்பாக தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் மேற்கு வங்காளத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி எழுச்சி மிக்க வெற்றியை பெற்றிருக்கிறது.

2016 தேர்தலில் வெறும் மூன்று இடங்களை மட்டும் பெற்ற பாஜக இப்போது 77 இடங்களை பெற்றிருக்கிறது. மேலும் மம்தா பானர்ஜி போட்டியிட்ட நந்திகிராம் தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம் தோற்றுப் போயிருக்கிறார். பாரதிய ஜனதா கட்சியின் அபரிமிதமான வளர்ச்சியை கண்டு எரிச்சல் அடைந்துள்ள மம்தா பானர்ஜி, அவருடைய கட்சி தொண்டர்களை வைத்து மேற்கு வங்காளத்தில் வன்முறை வெறியாட்டத்தை நடத்தியிருக்கிறார்.

இதுவரை பாஜகவை சேர்ந்தவர்கள் ஆறு பேர் பலியாகி இருக்கிறார்கள். நந்திகிராமில் உள்ள பாஜக கட்சி அலுவலகம் திரிணாமுல் காங்கிரஸ் விசமிகளால் தீ வைத்து கொளுத்தப்பட்டு உள்ளது. ஆங்காங்கே பாரதிய ஜனதா கட்சிக்கு தேர்தல் பணியாற்றிய நிர்வாகிகள் வீடுகளும் தாக்கப்பட்டுள்ளது, பாஜக கட்சியினர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். இந்த வன்முறை வெறியாட்டத்தை கண்டித்து நாளை 05.05.2021 கொல்கத்தாவில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா பங்கேற்க இருக்கிறார். அதேபோன்று நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் மண்டல வாரியாக மம்தா பானர்ஜியின் வன்முறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.

தமிழ்நாட்டிலும் நாளை அனைத்து மாவட்டங்களிலும் மேற்கு வங்காளத்தில் நடந்து வருகிற வன்முறை சம்பவங்களை கண்டித்தும், பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் மீது நடத்துகிற தாக்குதலை கண்டித்தும், பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் கொலை செய்யப்பட்டுள்ளதை கண்டித்தும், கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்திட வேண்டும் என்று மாவட்ட, மண்டல் நிர்வாகிகளை கேட்டுக்கொள்கிறேன். ஆங்காங்கே அந்தந்த பகுதியில் இருக்கக்கூடிய முக்கிய பாஜக தலைவர்களை ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை ஏற்கச் செய்திட வேண்டும். தமிழகத்தில் நாம் எழுப்புகிற குரல் இந்த நாடு முழுவதும் எதிரொலிக்க வேண்டும், கொரோனா கட்டுப்பாடுகள் இருக்கிற காரணத்தினால் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை அனைவரும் கடைப் பிடிக்க வேண்டும்’ என்று எல்.முருகன் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.