திருச்சியில் தனியார் பள்ளி உணவகத்திற்கு சீல்..! முழு விவரம் இதோ..
திருச்சியில் உள்ள தனியார் பள்ளியில் உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டதால், அந்தப் பள்ளியின் உணவகத்துக்கு உணவுப் பாதுகாப்புத்துறையினர் சீல் வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
திருச்சி விமான நிலையம், ஓயர்லஸ் சாலையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்கள் உணவு சாப்பிட்ட பிறகு உடலில் ஒவ்வாமை ஏற்பட்டதை அடுத்து மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு தலைமையில், உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் கொண்ட குழுவால் அந்த பள்ளியில் இன்று உணவகம் ஆய்வு செய்தபோது அந்த உணவகம் சுகாதாரமற்ற முறையில் இயங்கி வந்தது தெரியவந்தது . இதுமட்டுமல்லாமல் உணவு பாதுகாப்புத் துறையின் உரிமம் இல்லாததும் தெரியவந்தது.
இதையடுத்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளின் உத்தரவின் பேரில் அந்த பள்ளியின் உணவு தயாரிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்த பள்ளி உணவகம் மீது பிரிவு 56-இன் கீழ் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து உணவகத்தை மூடி சீல் வைக்கப்பட்டது.
மேலும் இதுகுறித்து மாவட்ட நியமன அலுவலர் கூறுகையில் மாணவர்களுக்கு உணவு தயாரித்து கொடுக்கும் உணவகம் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருக்க வேண்டும். இல்லையென்றால் அந்த உணவகம் மீது உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2006-இன் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் இதுபோன்று சுகாதாரமற்ற முறையில் உணவகம் இருந்தால் 99449-59595, 95859-59595 எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம் என தெரிவித்தார் .
