Tamilnadu

ஆன்மீகம்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்

திருப்பரங்குன்றம் தீபத் தூண் விவகாரம் : உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு

திருப்பரங்குன்றம் தீபத் தூண் விவகாரத்தில் தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்த மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகிறது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத் துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற கோயில் நிர்வாகத்திற்கு உத்தரவிடக் கோரிய வழக்கில், துாணிலும் தீபத்தை ஏற்ற உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவிட்டார். இதை எதிர்த்து கோயில் நிர்வாகம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், அந்த மனுக்களை நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் அமர்வு விசாரித்தது.
அப்போது, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத் தூண் இருந்ததற்கான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை எனவும் மலை உச்சியில் இருப்பது தீபத் தூண் இல்லை என்பதில் உறுதியாக இருப்பதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதேநேரம் 1961 ஆம் ஆண்டு திருப்பரங்குன்றம் கோவில் தேவஸ்தானம் வெளியிட்ட புத்தகத்தில், மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றியதாக குறிப்பிடப்பட்டு இருப்பதாக கூறி அதற்கான ஆவணத்தை மனுதாரர்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். இந்நிலையில், தனி நீதிபதி சுவாமிநாதனின் உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More
தமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்மாவட்டம்

தமிழக அரசு ஊழியர்களின் 20 ஆண்டு கோரிக்கையை ஏற்று உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அறிவிப்பு..

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் 20 ஆண்டு கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் என்ற புதிய திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ளார். அதன்படி, ரூ.25 லட்சம் வரை பணிக்கொடை, இறுதி சம்பளத்தில் 50 சதவீதம் வரை ஓய்வூதியம் வழங் கப்படும்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கடந்த 2021-ம் ஆண்டு இந்த அரசு பொறுப்பேற்றது முதல், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன்களைக் காக்க தேவையான பல்வேறு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. தமிழகம் முன்னெப்போதும் கண்டிராத வளர்ச்சியை எட்டியிருப்பினும், மத்திய அரசின் வரிப்பகிர்வு தொடர்ந்து குறைப்பது, திட்டங்களுக்கான மத்திய அரசின் நிதி குறைக்கப்படுவது அல்லது முறையாக விடுவிக்கப்படாமல் இருப்பது, ஜிஎஸ்டி மாற்றங்களால் குறைந்து வரும் மாநில வரி வருவாய், உயர்ந்து வரும் நலத்திட்டச் செலவுகள் போன்றவற்றால் அரசுக்கு நிதிச்சுமை உள்ளது.
அவற்றை எல்லாம் தாண்டி, தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன்களை முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து காத்து வருகிறார். அந்த வகையில், கரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட அகவிலைப்படி உயர்வு, ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு நடைமுறை, அரசு ஊழியர்கள் விபத்தில் உயிரிழந்தால் ரூ.1 கோடி, இயற்கை மரணத்துக்கு ரூ.10 லட்சம், கல்வி முன்பணம், திருமண முன்பணம், வீடு கட்டுவதற்கான முன்பணம் உயர்வு, ஓய்வு பெறும் நாளில் சஸ்பெண்ட் சூழல் நீக்கம், பணிக்கொடை ரூ.25 லட்சமாக உயர்வு, ஓய்வூதியர்கள் மருத்துவ காப்பீடு, பொங்கல் பரிசுத் தொகை உயர்வு, மகப்பேறு உயர்வு போன்றவை அமல்படுத் தப்பட்டுள்ளன.

எனினும், அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் நாளன்று எவ்வளவு ஓய்வூதியம் பெறுவோம் என்று அறியாமல் கடந்த 20 ஆண்டுகளாக இருப்பதாகவும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் சங்கங்கள் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றன. அதை உணர்ந்து இந்த விவகாரத்தில் தகுந்த பரிந்துரைகளை வழங்க ககன்தீப் சிங்பேடி தலைமையில் குழு ஒன்றை முதல்வர் ஸ்டாலின் அமைத்தார். அந்தக் குழுவின் அறிக்கையையும் அரசு பெற்றுள்ளது.

அந்த அறிக்கையை முழுமையாக ஆராய்ந்து, தமிழக அரசு தற்போது சந்தித்து வரும் நிதி சுமை சூழலில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கைகளை நிறைவு செய்வதற்கான வழிமுறைகள் குறித்து நிதியமைச்சர், தலைமைச் செயலர், நிதித் துறை செயலரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது பொதுப்பணி, நிதி, பள்ளிக்கல்வி அமைச்சர்களிடம் சங்கங்கள் வைத்த முக்கிய கோரிக்கைகள் பற்றி விவாதிக்கப்பட்டது.

இதையடுத்து, “தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்’’ (Tamil Nadu Assured Pension Scheme – TAPS) என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இத்திட்டத்தின் கீழ்…

மாநில அரசு ஊழியர்கள் பெற்ற கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியமாக வழங்கப்படும். இந்த ஓய்வூதியம் வழங்க ஊழியர்களின் 10 சதவீத பங்களிப்புடன், ஓய்வூதிய நிதியத்துக்கு தேவைப்படும் கூடுதல் நிதி முழுவதையும் அரசே ஏற்கும்.

ஐம்பது சதவீதம் உறுதி யளிக்கப்பட்ட ஓய்வூதியம் பெறுவோருக்கு 6 மாதத்துக்கு ஒரு முறை அரசு அலுவலர்களுக்கு இணையான அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும்.

ஓய்வூதியர் இறந்தால், அவர் பரிந்துரைத்த குடும்ப உறுப்பினர்களுக்கு ஓய்வூதியத்தில் 60 சதவீதம் குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும்.

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் போதும், பணிக் காலத்தில் இறக்க நேரிட்டாலும் அவரவர் பணிக் காலத்துக்கேற்ப ரூ.25 லட்சத்துக்கு மிகாமல் பணிக்கொடை வழங்கப்படும்.

புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்பட்ட பின், ஓய்வூதியம் பெறுவதற்கான தகுதி பணிக்காலத்தை நிறைவு செய்யாமல் ஓய்வு பெறுவோருக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கப்படும்.

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பணியில் சேர்ந்து, புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் செயல்படுத்தப்படுவதற்கு முன் இடைப்பட்ட காலத்தில் ஓய்வூதியம் இன்றி பணி ஓய்வு பெற்றவர்களுக்கு சிறப்பு கருணை ஓய்வூதியம் வழங்கப்படும்.

இந்த திட்டத்தை அறிமுகப் படுத்துவதால் ஓய்வூதிய நிதியத்துக்கு கூடுதலாக ரூ.13 ஆயிரம் கோடியை அரசு அளிக்க வேண்டும். இதுமட்டுமின்றி, ஆண்டுதோறும் சுமார் ரூ.11 ஆயிரம் கோடி அரசு பங்களிப்பாக வழங்க வேண்டும். இத்தொகை ஊழியர்களின் ஊதியத்துக்கேற்ப ஆண்டு தோறும் மேலும் உயரும். தற்போது தமிழக அரசு சந்தித்து வரும் கடுமையான நிதிச் சூழலிலும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன்களைக் காக்கும் பொருட்டு, இந்த செலவினங்களை தமிழக அரசே முழுமையாக ஏற்கும்.

எனவே இந்த திட்டத்தை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒருமனதாக வரவேற்று, அதனைச் செயல்படுத்துவதற்கான முழு ஒத்துழைப்பையும் நல்கும்படி முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். இவ்வாறு அரசு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து முதல்வர் வெளி யிட்ட சமூக வலைதளப்பதிவில், ‘‘அரசு ஊழியர்களுக்கு மிகப் பெரும் புத்தாண்டு, பொங்கல் பரிசாக தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அறிவித்துள்ளோம். திராவிட மாடல் நல்லாட்சிதான் தொடரும். தலைநிமிர்ந்து வரும் தமிழகத்தின் நிதிநிலை சீரடையச் சீரடைய அனைத்துத் தரப்பினரின் கோரிக்கைகளும் நீங்கள் கேட்காமலே நிறைவேறும்’’ என தெரிவித்துள்ளார்.

Read More
தமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்மாவட்டம்வணிகம்

பொங்கல் பரிசு தொகுப்பாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.3,000 ரொக்கம்.. இன்று அறிவிப்பு…

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை அனைத்துத் தரப்பினரும் மகிழ்ச்சியாக கொண்டாட தமிழ்நாடு அரசு சார்பில் ஆண்டுதோறும் பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.அந்த வகையில், இந்த ஆண்டு 2 கோடியே 22 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு, பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
அதில் ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு ஆகியவை தொகுப்பாக வழங்க, தமிழ்நாடு அரசு 248 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இந்தத் தொகுப்புகளை வழங்குவதற்கான டோக்கன்கள் பயனாளிகளுக்கு விரைவில் விநியோகிக்கப்பட உள்ளன.
பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தை வரும் 8 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கும் நிலையில், பரிசுத் தொகுப்புடன் ரொக்கத் தொகை வழங்குவது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பில் எவ்வளவு பணம் வழங்கப்பட உள்ளது என்பது குறித்து முறையான அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Read More
தமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்

ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு – டேவிட்சன் தேவாசீர்வாதம் டிஜிபியாக நியமனம்…!

ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதத்திற்கு டிஜிபி ஆக பதவி உயர்வு அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பல்வேறு ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ள நிலையில், ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், டிஜிபியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். தமிழ்நாட்டில் முக்கிய பதவிகளில் இருக்கும் சில ஐபிஎஸ் அதிகாரிகள் ஓய்வு பெறவுள்ள நிலையில் தமிழக அரசுப் பணியிட மாற்றம் தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஏடிஜிபியாக இருந்து வந்த டேவிட்சன் தேவாசீர்வாதத்திற்கு தற்போது டிஜிபியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அவர் ஆயுதப்படை டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல ஏடிஜிபி சந்தீப் மிட்டலும் டிஜிபியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். இவருக்கு சைபர் கிரைம் டிஜிபி பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
அந்த வரிசையில், ஏடிஜிபி பால நாகதேவியும் டிஜிபியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். இவர் பொருளாதாரக் குற்றப்பிரிவு டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல சிபிசிஐடி ஐஜியான அன்பு உள்ளிட்டோர் ஏடிஜிபிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி சிபிசிஐடி ஐஜி அன்பு பதவி உயர்வு பெற்று சிபிசிஐடி ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். தென்மண்டல ஐஜியான பிரேம் ஆனந்த் சின்கா, ஏடிஜிபியாக பதவி உயர்வு பெற்று ஆவடி காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழக காவல் துறையில் பல்வேறு ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், மகேஷ்வர் தயாள், சிறைத் துறையிலிருந்து மாற்றப்பட்டு சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆவடி காவல் ஆணையராக உள்ள சங்கர், சிறைத் துறை ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஏடிஜிபியான அமல்ராஜ், தாம்பரம் காவல் ஆணையராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜியான அனிஷா உசேன், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு ஏடிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல சென்னை காவல் தெற்கு கூடுதல் ஆணையராக உள்ள என்.கண்ணன், கோவை காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கோவை மாநகர காவல் ஆணையராக இருந்து வரும் சரவண சுந்தர், மேற்கு மண்டல ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல விழுப்புரம் மாவட்ட எஸ்பியாக உள்ள பி.சரவணன், திருநெல்வேலி சரக டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பணியிட மாற்றங்கள் நாளை முதல் அமலுக்கு வரவுள்ளன.

Read More
தமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்மாவட்டம்

தமிழகத்தில் புதிய சுற்றுலா திட்டங்களை செயல்படுத்த TTDC முடிவு!

தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழகம் (TTDC) இப்போது புதிய சுற்றுலாத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இது தொடர்பாக அரசு தரப்பில் கூறுகையில், ஏற்கெனவே பிரபலமான ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப் பிரதேசங்களில் கூட்டம் அதிகமாகி, வளர்ச்சி கட்டுப்பாடு இல்லாமல் போவதால், இந்த புதிய திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. தற்போது புதிதாக ஜவ்வாது மலை, வத்தல் மலை, கொல்லி மலை, ஏற்காடு போன்ற மலைப் பிரதேசங்களில், இனிமேல் புதிதாக ஒழுங்கான முறையில் கேம்பிங் (camping) மற்றும் க்ளம்பிங் (glamping) வசதிகள் ஏற்படுத்தப்படும்.
ஜவ்வாதுமலை
ஜவ்வாது மலை, இப்போது மலையேற்றம் செய்பவர்களுக்கும், உள்ளூர் மக்களுக்கும் மட்டுமே தெரிந்த ஒரு இடம். ஆனால், இனிமேல் இங்கு முதல் முறையாக, சுமார் 7.65 ஏக்கர் பரப்பளவில், ஒரு பெரிய க்ளம்பிங் வசதி வரப்போகிறது. இங்கு அடிப்படை வசதிகளை அரசு செய்து கொடுத்துள்ளது.
10 ஆயிரம் பேர்
தனியார் நிறுவனங்கள் சார்பில், ஆடம்பரமான கூடாரங்கள், டோம்ஸ் (domes) மற்றும் ரெடிமேட் வீடுகள் அமைக்க வேண்டும். திருவண்ணாமலை மாவட்ட அதிகாரியின் தகவலின்படி, வனத்துறையிடம் ஏற்கெனவே கேம்பிங் இடங்கள் உள்ளன. ஏரிக்கு அருகில் தங்கும் வசதிகளையும் அவர்கள் உருவாக்கியுள்ளனர். தனியார் நிறுவனம் 10 தங்கும் அறைகள், ஒரு உணவகம், வரவேற்புப் பகுதி ஆகியவற்றை அமைக்க வேண்டும். மாதத்திற்கு சுமார் 1,000 பேர் ஜவ்வாது மலைக்கு வருகிறார்கள்.
வத்தல் மலை
அதேபோல் தருமபுரி மாவட்டத்தில் உள்ள வத்தல் மலைக்கும் இதே போன்ற திட்டங்கள் யோசிக்கப்பட்டு வருகின்றன. இந்த அழகான மலைப் பகுதி, சுற்றுலாப் பயணிகளிடையே அவ்வளவாகப் பிரபலமாகவில்லை. இங்கு சுமார் 6.1 ஏக்கர் பரப்பளவில் ஒரு கேம்பிங் தளம் அமைக்கப்படும். இங்கு கூடாரங்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த சிறிய வீடுகள் (eco-cottages) அடிப்படை வசதிகளுடன் இருக்கும். தருமபுரி மாவட்ட அதிகாரி கூறுகையில், “நாங்கள் ஏற்கெனவே உணவகத்தைக் கட்டிவிட்டோம். இது ஒரு மலைப் பிரதேசம். இங்கு அருவிகள், பழங்குடியினர் வாழும் இடங்கள் உள்ளன. மலையேற்றத்திற்கும் நாங்கள் திட்டமிட்டுள்ளோம். வனத்துறையிடம் ஒரு வழித்தடத்தைக் கேட்டுள்ளோம்” என்றார்.
பாதியிலேயே நின்றுவிடக் கூடாது
சுற்றுலாத் துறை அதிகாரிகள் கூறுகிறார்கள், இந்தத் திட்டங்களின் நோக்கம் ஊட்டி, கொடைக்கானல் போல பெரிய சுற்றுலாத் தலங்களை உருவாக்குவது அல்ல. மாறாக, அமைதியான, இயற்கையோடு இணைந்த மாற்று இடங்களை மக்களுக்கு அறிமுகப்படுத்துவதுதான். சுற்றுலாத் துறையின் முன்னாள் அதிகாரி என். ரவி கூறுகையில், “இதுவரை நாம் பழைய சுற்றுலாத் தலங்களையே நம்பி இருந்தோம். திட்டமிட்டபடி இவை நடந்தால், புதிய மலைப் பிரதேசங்களை மேம்படுத்துவதில் இது ஒரு நல்ல படியாக இருக்கும். ஆனால், இந்தத் திட்டங்கள் பாதியிலேயே நின்றுவிடக் கூடாது” என்றார்.

Read More
குற்றம்தமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்

அளவுக்கு அதிகமாக மணல் அள்ளிய வழக்கு: தமிழக அரசு குற்றச்சாட்டை மறுத்த அமலாக்கதுறை…

மணல் கொள்ளை ஆய்வின் போது ட்ரோன்கள் பறக்கவிடப்பட்டதில் விதி மீறல்கள் நடந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை மறுத்த அமலாக்கத் துறை இதுவரை அந்த விதிமீறல்கள் தொடர்பாக எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்று தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் மணல் கொள்ளை குறித்த நிபுணர்களின் அறிக்கை சட்டவிரோதமானது என்ற மாநில அரசின் குற்றச்சாட்டுகளை அமலாக்கதுறை மறுத்துள்ளது. மேலும், இச்சம்பவம் குறித்து அமலாக்கத் துறை மறுமொழி (rejoinder) ஒன்றை தாக்கல் செய்துள்ளது என்று கூறப்படுகிறது.
தமிழகத்தில் ஆற்றுப் படுகைகளில் மணல் அள்ளுவதில் பெரும் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், இதனால் அரசு கருவூலத்திற்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, 2023-ம் ஆண்டு அக்டோபர்-நவம்பர் காலகட்டத்தில் 28 குவாரிகளில் எடுக்கப்பட்ட மணலின் அளவை மதிப்பீடு செய்ய ஐஐடி-கான்பூரை அமலாக்கத் துறை நியமித்தது.

இந்த ஆய்வு அறிக்கையின் அடிப்படையில், அனுமதிக்கப்பட்ட அளவைத் தாண்டி மணல் அள்ளப்பட்டதால் கடந்த சில ஆண்டுகளில் ரூ4,730 கோடி மதிப்புள்ள மணல் சட்டவிரோதமாக எடுக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்தது. ஆனால், தமிழக அரசின் கணக்கின்படி மணல் விற்பனை மூலம் ஈட்டப்பட்ட வருவாய் வெறும் ரூ36.45 கோடி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள தமிழக நீர்வள ஆதாரத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர், ஐஐடி-கான்பூர் இயக்குநருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், இந்த ஆய்வை முன்னின்று நடத்திய பேராசிரியர் ராஜீவ் சின்ஹாவுக்கு இதற்கான அதிகாரம் வழங்கப்பட்டதா என்பது குறித்து விளக்கம் கோரப்பட்டுள்ளது.

Read More
அரசியல்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்மாவட்டம்

சட்டசபை கூட்டத் தொடர் தேதி அறிவிப்பு

2026-ஆம் ஆண்டின் முதல் சட்ட சபை கூட்டத் தொடர் ஜனவரி 20-ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த கூட்டத்தில், ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று உரையாற்ற இருக்கிறார். இதுதொடர்பாக, சபாநாயகர் அப்பாவு தலைமைச்செயலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது, “2026-ம் ஆண்டு தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் ஜனவரி 20-ந் தேதி கூடுகிறது. அன்றைய தினம் காலை 9.30 மணிக்கு கூடும் கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று தமிழக அரசின் உரையை வாசிப்பார்.
அதனைத் தொடர்ந்து, கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து அலுவல் ஆய்வு குழு கூடி முடிவு எடுக்கும்” என்றார். ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் ஜனவரி 21-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை 4 நாட்கள் நடைபெறும் என்று கூறப்படுகிறது. பிப்ரவரி மாதம் 2-வது வாரத்தில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டசபை மீண்டும் கூட உள்ளது.

இந்த கூட்டத்தில் திருவண்ணாமலை தீபம் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்ப வாய்ப்புள்ளது. இந்த சட்டசபை கூட்டத் தொடரிலாவது ஆளுநர் ஆர்.என்.ரவி தனது முழு உரையை வாசிப்பாரா என்ற கேள்வி எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதாவது, ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த இரண்டு ஆண்டுகளாக சட்டசபையின் போது தொடர்ந்து உரையை வாசிக்காமல் சென்றுள்ளார்.
2024-ஆம் ஆண்டு சட்டசபையின் போது தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த ஆளுநர் உரையில் இருந்து ஒரு சில பகுதிகளை நீக்கிவிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி உரையை வாசித்தார். இதையடுத்து, 2025-ஆம் ஆண்டு தேசிய கீதம் அவமதிக்கப்பட்டதாக கூறி சட்டசபைக்கு வந்த வேகத்தில் வெளிநடப்பு செய்தார். ஆளுநரின் இந்த செயல்கள் கடுமையாக விமர்சிக்கப்பட்டன. இந்நிலையில், 2026-ஆம் ஆண்டு சட்ட சபை கூட்டத் தொடரின் போது ஆளுநர் தன் உரையை முழுமையாக வாசிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Read More
சினிமாதமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்

ஜனநாயகன் vs பராசக்தி… திரை ரசிகர்களுக்கு விருந்தாக அமையப் போகும் பொங்கல்!

பொங்கல் பண்டிகைக்கு விஜயின் ஜனநாயகன் திரைப்படத்துடன் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் பராசக்தி நேரடியாக மோதுகிறது. ஜனவரி 14ஆம் தேதி பராசக்தி வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதன் தேதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
அரசியலில் தீவிர கவனம் செலுத்தி வரும் தவெக தலைவர் விஜயின் கடைசி திரைப்படமான ஜனநாயகன், பொங்கலுக்கு களம் காண்கிறது. போலீஸ் அதிகாரியாக விஜய் நடித்திருக்கும் இந்த படத்தை ஹெச். வினோத் இயக்கி இருக்கிறார். கேவிஎன் நிறுவனம் தயாரித்துள்ளது.
சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படமும் பொங்கல் விடுமுறையை குறிவைத்தது. 1950-60 காலகட்டத்திற்கான கதை களத்தை கையில் எடுத்திருக்கும் இயக்குநர் சுதா கொங்கரா, இதில் மொழி பிரச்சனையை பேசியிருக்கிறார். டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் இதனை தயாரித்திருக்க, படம் பொங்கலன்று ஜனவரி 14ஆம் தேதி வெளியாகும் என ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டது.
பராசக்திக்கான ப்ரோமோஷன் பணிகள் வேகமெடுத்துள்ளன. சென்னை வள்ளுவர் கோட்டத்தில், படம் குறித்தான கண்காட்சி அமைக்கப்பட, அதற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தநிலையில், ஏற்கெனவே திரையுலகில் பரவி வந்த தகவலின்படி, பராசக்தியின் ரிலீஸ் தேதியை மாற்றியிருக்கிறது தயாரிப்பு நிறுவனம். ஜனவரி 14க்கு பதில், 4 நாட்களுக்கு முன்னதாக, அதாவது 10ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 9ஆம் தேதி வெள்ளிக்கிழமை விஜயின் கடைசிப் படமாக அறிவிக்கப்பட்டுள்ள ஜனநாயகன் ரிலீஸாகும் நிலையில், அதற்கு அடுத்த நாளே திரைக்கு வர இருக்கிறது பராசக்தி. விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்று விரிவான ஆலோசனைக்குப் பிறகே இந்த முடிவை எடுத்திருப்பதாக பராசக்தி தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
விஜய் மற்றும் சிவகார்த்திகேயனுக்கு பெரிய அளவு மார்க்கெட் இருக்கும் சூழலில், இருவரின் படங்களும் அடுத்தடுத்த நாளில் வெளியாவதால், இரு படங்களுக்கும் சரியான அளவு திரைகள் ஒதுக்கப்படுமா என கேள்வி எழுந்துள்ளது. விஜயின் கடைசி படம் என்பதால் வசூல் தாறுமாறாக இருக்கும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த வேளையில், சிவகார்த்திகேயனின் 25ஆவது படமான பராசக்தியும் சேர்ந்தே வருவதால், ஜனநாயகன் வசூலில் தாக்கம் இருக்கவே செய்யும் என திரைத்துறை வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. எது… எப்படியோ… இந்த பொங்கல்… சினிமா ரசிகர்களுக்கு செம விருந்தாக அமையப் போகிறது.

Read More
தமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்

டிசம்பர் 27,28, ஜனவரி 3,4இல் வாக்காளர்களுக்கு சிறப்பு முகாம்

டிசம்பர் 27,28, ஜனவரி 3,4இல் வாக்காளர்களுக்கு சிறப்பு முகாம்
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க திருத்தம் செய்ய சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. டிசம்பர் 27,28 மற்றும் ஜனவரி 3,4 ஆகிய தேதிகளில் 75 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் நடைபெற உள்ளது என தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.

Read More
தமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்மாவட்டம்

பழைய ஓய்வூதியத் திட்டம்: நாளை அரசு பேச்சுவார்த்தை – அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி கிடைக்குமா?

பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து நாளை அரசு ஊழியர்களுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்
தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்டகாலக் கோரிக்கையான ‘பழைய ஓய்வூதியத் திட்டத்தை’ (OPS) மீண்டும் அமல்படுத்துவது குறித்து நாளை (டிசம்பர் 22, 2025) தமிழக அரசு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக அரசு ஊழியர் சங்கப் பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் குழு விரிவான ஆலோசனையை நடத்த உள்ளது. தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்தில் காலை 10:00 மணியளவில் இக்கூட்டம் நடைபெறவுள்ளது.
இதில் தமிழக அமைச்சர்கள் எ.வ. வேலு, தங்கம் தென்னரசு மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்துகொண்டு ஊழியர் சங்கப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
நாளை நடைபெறும் கூட்டத்தில, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீட்டெடுத்தல் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது. அதாவது, 2004-க்கு பின் பணியில் சேர்ந்தவர்களுக்குப் பழைய ஓய்வூதியத் திட்டத்தை வழங்குவதில் உள்ள சாத்தியக்கூறுகள்.
பகுதி நேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்வது மற்றும் பிற ஊதிய முரண்பாடுகளைக் களைவது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளது. 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், திமுக அரசு தனது தேர்தல் வாக்குறுதியான பழைய ஓய்வூதியத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
கடந்த தேர்தல்களில் தபால் வாக்குகள் ஆளுங்கட்சிக்கு எதிராகச் சென்றதாகக் கருதப்படுவதால், அரசு ஊழியர்களின் அதிருப்தியைப் போக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த விஷயத்தில் நேரடி கவனம் செலுத்தி வருகிறார்.
அமைச்சர் ஐ. பெரியசாமி இதுகுறித்து அண்மையில் பேசும்போது, “முதலமைச்சர் அரசு ஊழியர்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளார். அவர்களின் கோரிக்கைகள் குறித்து விரைவில் நல்ல அறிவிப்பு வெளியாகும்” என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS) என்பது ஊழியரின் கடைசி மாதச் சம்பளத்தில் 50% ஓய்வூதியமாக உறுதியாகக் கிடைக்கும். இதில் பணவீக்கத்திற்கு ஏற்ப அகவிலைப்படி (DA) உயரும். புதிய ஓய்வூதியத் திட்டம் (NPS) என்பது இது சந்தை சார்ந்த முதலீடு என்பதால், ஓய்வூதியத் தொகைக்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை
நாளை நடைபெறும் இந்தப் பேச்சுவார்த்தையில் ஒரு சுமுகமான தீர்வு எட்டப்பட்டால், அது தமிழகத்தின் லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் குடும்பங்களுக்கு ஒரு மிகப்பெரிய புத்தாண்டுப் பரிசாக அமையும். அமைச்சர்களின் இந்த ஆலோசனையைத் தொடர்ந்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இது குறித்த இறுதி அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read More