“தமிழ்நாட்டிற்கு ரூ. 3 லட்சம் கோடி.. காங்கிரஸைவிட 3 மடங்கு அதிக நிதி கொடுத்திருக்கிறோம்” – பிரதமர்
கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு 3 லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு அளித்திருக்கிறது. இந்தத் தொகை காங்கிரஸ் ஆட்சியோடு ஒப்பிடும்போது 3 மடங்கிற்கும் அதிகம்” என பிரதமர் நரேந்திர மோடி தூத்துக்குடியில் பேசினார்.
பிரதமர் மோடி, இரண்டு நாள் பயணமாக இன்று தமிழ்நாட்டிற்கு வந்தார். தமிழ்நாட்டின் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. விமான நிலையத்தில் பிரதமர் மோடியை வரவேற்ற தமிழ்நாடு அமைச்சர் தங்கம் தென்னரசு வள்ளுவர் கோட்டம் நினைவுப் பரிசை வழங்கினார்.
தொடர்ந்து தூத்துக்குடி விமான நிலையப் புது முனையத் திறப்பு விழாவிற்கு வெள்ளை வேட்டி, சட்டை அணிந்துவந்தார். இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, தமிழ்நாடு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கீதா ஜீவன், எம்.பி. கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர் தூத்துக்குடி விமான நிலையப் புது முனையத்தைத் திறந்துவைத்த பிரதமர் மோடி, “நான்கு நாள் அயல்நாட்டுப் பயணத்திற்குப் பிறகு நேரடியாக பகவான் ராமேஸ்வரனின் மண்ணில் கால் பதிக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்துள்ளது. பகவான் ராமேஸ்வரன், திருச்செந்தூர் முருகன் ஆகிய தெய்வங்களின் நல்லாசியோடு தூத்துக்குடி வளர்ச்சியின் புதிய அத்தியாயம் எழுதப்பட்டது.
உள்கட்டமைப்பு மற்றும் எரிசக்தி இவை மாநிலத்தின் முன்னேற்றத்திற்கு முதுகெலும்பு போன்றவை. இந்த 11 ஆண்டுகளில் இந்தத் துறைகளின் மீது செலுத்தப்பட்ட கவனம் தமிழ்நாட்டின் வளர்ச்சியை நமக்கு முதன்மையானது என்பதை காட்டுகிறது.
இதே மண்ணில் தான் வா.உ.சி. போன்ற தொலைநோக்காளர்கள் தோன்றினார்கள். அடிமைப்பட்டு இருந்த காலத்திலேயே கடல் வழி வாணிபத்தின் சக்தியை புரிந்துகொண்டவர் அவர். காசி தமிழ் சங்கம் போன்ற ஏற்பாடுகள் மூலம் நம் கலாச்சார மரபுகளை வளர்த்துவருகிறோம். தூத்துக்குடியின் முத்துகளை பில் கேட்ஸுக்கு பரிசாக அளித்தேன். அது அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. நமது பாண்டிய நாட்டு முத்துக்கள் உலகம் முழுக்க பாரதத்தின் பொருளாதார வல்லமையின் அடையாளமாக இருந்துவந்தது.
இன்று பாரதத்தின் வளர்ச்சியில் உலகம் தனது வளர்ச்சியை காண்கிறது. உலகில் மூன்றாவது பொருளாதார நாடாக மாறும் நமது வேகம் இன்னும் வேகமளிக்கப்போகிறது. இங்கிலாந்து ஒப்பந்தத்திற்குப் பிறகு பிரிட்டனில் விற்கப்படும் 99% பாரதத்தின் பொருட்கள் மீது எந்த வரியும் விதிக்கப்படாது. விலை மலிவாகவும், தேவை அதிகமாகவும் அங்கு இருக்கும். இங்கு அந்தப் பொருட்களின் உற்பத்தி அதிகரிக்கும். இந்த ஒப்பந்தம் நமது இளைஞர்களுக்கு அதிக ஆதாயம் கிடைக்கும்.
மேக் இன் இந்தியா, இந்தியாவில் தயாரிப்போம். இந்தியாவில் தயாரிக்கும் திட்டத்திற்கும் அரசு வலு சேர்க்கிறது. ஆபரேஷன் சிந்துரின்போது, மேக் இன் இந்தியாவின் வலுவை பார்த்திருப்பீர்கள். பயங்கரவாதிகளின் பதுங்கு இடங்களை அழித்ததில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதத்தின் பங்களிப்பு இருந்தது. நம் நாட்டில் தயாரித்த ஆயுதங்கள் பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்களை தூங்கவிடாமல் செய்கிறது.
தூத்துக்குடி புது முனைய திறப்புக்கு பிறகு தமிழ்நாட்டின் பெரும் நிறுவனங்கள், உடல்நல கட்டமைப்புகள், கல்வி ஆகியவற்றுக்கு வலு கிடைக்கும். மேலும், தூத்துக்குடி துறைமுகம் மற்றும் சாலை ஆகியவற்றையும் சிறப்படைய செய்யும். அதுமட்டுமின்றி, வர்த்தகம் வேலை வாய்ப்பு ஆகியவையும் அதிகரிக்கும்.
கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு 3 லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு அளித்திருக்கிறது. இந்தத் தொகை காங்கிரஸ் ஆட்சியோடு ஒப்பிடும்போது 3 மடங்கிற்கும் அதிகம்.
இந்திய நாட்டை நவீனப்படுத்தும் மாபெரும் வேள்வி நடைபெற்றுவருகிறது. தற்சார்பு இந்தியாவின் உயிர் நாடியாக இந்திய ரயில்வே உள்ளது. 11 ஆண்டுகளில் ரயில்வே நவீனமயமாக்கியுள்ளோம். தமிழ்நாட்டில் 77 ரயில் நிலையங்களை மேம்படுத்தியுள்ளோம். வந்தே பாரத் ரயில்கள் வரிசையில் தமிழ்நாடு மக்களுக்கு புது அனுபவம் கிடைத்துவருகிறது. தேசத்தின் முதல் தனித்தன்மை வாய்ந்த செங்குத்து தூக்குப் பாலம்; பாம்பன் பாலம் கூட தமிழ்நாட்டில் தான் உருவாக்கப்பட்டுள்ளது. மதுரை போட்டிநாயக்கநல்லூர் மின்சார ரயில்பாதை அமைக்கப்பட்டது. அதன் மூலம், வந்தே பாரத் ரயில் வாய்ப்பு கிடைக்கும்.
தமிழ்நாடு வளர்ச்சி, மேம்படுத்த தமிழ்நாடு ஆகியவையே நமது முக்கிய உறுதிப்பாடு. நாங்கள் தமிழ்நாடு வளர்ச்சியோடு தொடர்புடைய கொள்கைகளுக்கே முக்கியத்துவம் அளித்து வருகிறோம்” என பேசினார்.
