பாகிஸ்தானை பந்தாடிய இந்திய அணி; 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
இன்றைய போட்டியில் டாஸ் போடும் போது இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ்வும், பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகாவும் கைகுலுக்கவில்லை. ஆசியக் கோப்பையிலும் இந்திய – பாகிஸ்தான் கேப்டன்கள் கைகுலுக்கவில்லை. இது டி20 உலகக்கோப்பையில் தொடர்கிறது.
டி20 உலகக் கோப்பையில் உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா, பாகிஸ்தான் போட்டி கொழும்பு பிரேமதேச மைதானத்தில் தொடங்கியுள்ளது. டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா தங்கள் அணி முதலில் பவுலிங் செய்யும் என அறிவித்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
யாரும் எதிர்பார்க்காத வகையில் சல்மான் ஆகா முதல் ஓவரை வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தில் அபிஷேக் சர்மா ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். அடுத்து இஷான் கிஷன் உடன் திலக் வர்மா ஜோடி சேர்ந்தார். திலக் வர்மா நிதானமாக விளையாட, இஷான் கிஷன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் இந்தியா பவர்பிளேயில் 1 விக்கெட் இழப்பிற்கு 52 ரன்கள் எடுத்தது.
7-வது ஓவரை அப்ரார் வீசினார். இந்த ஓவரின் முதல் 2 பந்துகளை பவுண்டரிக்கு விரட்டி 27 பந்தில் அரைசதம் விளாசினார் இஷான் கிஷன். அத்துடன் அடுத்த பந்தை பவுண்டரி தூக்கினார். அவர் 2 சிக்ஸ், 7 பவுண்டரியுடன் அரைசதம் விளாசினார். 9-வது ஓவரை சயீம் ஆயுப் வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தில் பவுண்டரி அடித்த இஷான் கிஷன் அடுத்த பந்தில் க்ளீன் போல்டானார். அவர் 40 பந்தில் 77 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். அப்போது இந்தியா 8.4 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 88 ரன்கள் எடுத்திருந்தது.
3-வது விக்கெட்டுக்கு திலக் வர்மா உடன் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். 12-வது ஓவரை முகமது நவாஸ் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை திலக் வர்மா சிக்சருக்கு தூக்கினார். இதன் மூலம் இந்தியா 11.1 ஓவரில் 100 ரன்களை கடந்தது. 11.1 ஓவரில் 100 ரன்னைக் கடந்த இந்தியா 14 ஓவரில் 125 ரன்னைத் தொட்டது. 15-வது ஓவரை சயீம் ஆயுப் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் திலக் வர்மா ஆட்டமிழந்தார். அவர் 24 பந்தில் 25 ரன்கள் எடுத்தார். 4-வது விக்கெட்டுக்கு சூர்யகுமார் யாதவ் உடன் ஹர்திக் பாண்ட்யா ஜோடி சேர்ந்தார். ஹர்திக் பாண்ட்யா முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். இந்தியா அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இதனால் இந்தியா 14.3 ஓவரில் 126 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுக்களை இழந்தது.
19-வது ஓவரை உஸ்மான் தாரீக் வீசினார். இந்த ஓவரின் 5-வது பந்தில் சூர்யகுமார் யாதவ் ஆட்டமிழந்தார். இவர் 29 பந்தில் 32 ரன்கள் எடுத்தார். அப்போது இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்திருந்தது. 19-வது ஓவரில் தாரீக் 5 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். கடைசி ஓவரை ஷாஹீன் அப்ரிடி வீசினார். முதல் பந்தை ஷிவம் துபே பவுண்டரிக்கு விரட்டினார். 2-வது பந்தில் ஒரு ரன் எடுத்தார். 3-வது பந்தை ரிங்கு சிங் பவுண்டரிக்கு விரட்டினார். 4-வது பந்தை சிக்கருக்கு தூக்கினார். 5-வது பந்தில் 2-வது ரன்னுக்கு ஓட முயன்றபோது ஷிவம் துபே ரன்அவுட் ஆனார். கடைசி பந்தை அக்சர் படேல் சந்தித்தார். அதில் ஆட்டமிழந்தார். இதனால் இந்தியா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் குவித்தது.
பின்னர் 176 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணியின் சகிப்சதா ஃபர்ஹான், சயீம் ஆயுப் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை ஹர்திக் பாண்ட்யா வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தில் ஃபர்ஹான் ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
அடுத்து சல்மான் ஆகா களம் இறங்கினார். 2-வது ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை ஆயுப் சிக்சருக்கு தூக்கினார். 2-வது பந்தில் எல்.பி.பி.டபிள்யூ ஆனார். 5-வது பந்தில் பவுண்டரி அடித்த சல்மான் ஆகா, கடைசி பந்தில் ஹர்திக் பாண்ட்யாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதனால் பாகிஸ்தான் 13 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது. அடுத்த வந்த பாபர் அசாம் 5 ரன்னில் அக்சர் படேல் பந்தில் வெளியேறினார்.
விக்கெட் கீப்பர் உஸ்மான் கான் சிறப்பாக விளையாடி 34 பந்தில் 44 ரன்கள் எடுத்து அக்சர் படேல் பந்தில் ஸ்டம்பிங் ஆனார். அதன்பின் பாகிஸ்தான விக்கெட்டுகள மளமளவென சரிந்தது. இதனால் பாகிஸ்தான் 18 ஓவரில் 114 ரன்களில் ஆல்அவுட் ஆகி 61 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. பும்ரா, அக்சர் படேல், வருண் சக்ரவர்த்தி, ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் இந்தியா 3 போட்டிகளில் வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது. தொடக்கம் முதலே துல்லியமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்கரவர்த்தி மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோரின் பங்களிப்பால் இந்தியா இந்த வெற்றியை வசப்படுத்தியுள்ளது. இந்திய அணியின் வெற்றியை நாடு முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
பிளேயிங் லெவன் வீரர்கள் பட்டியல்:
இந்தியா: சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், திலக் வர்மா, சூரியகுமார் யாதவ் (கேப்டன்), ஷிவம் துபே, ஹர்திக் பாண்டியா, ரின்கு சிங், அக்சர் படேல், வருண் சகரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங்.
பாகிஸ்தான்: சைம் அயூப், சாஹிப்சாதா ஃபர்ஹான், சல்மான் ஆகா (கேப்டன்), பாபர் அசாம், உஸ்மான் கான் (விக்கெட் கீப்பர்), ஷதாப் கான், முகமது நவாஸ், ஃபஹீம் அஷ்ரஃப், ஷஹீன் அப்ரிடி, உஸ்மான் தாரிக், அப்ரார் அகமது.61 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி
டி20 உலகக் கோப்பையின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆட்டத்தில், இந்திய அணி பாகிஸ்தானை 61 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது. ஆட்டத்தின் இறுதிவரை ஆதிக்கம் செலுத்திய இந்தியப் பந்துவீச்சாளர்கள், பாகிஸ்தான் அணியை 114 ரன்களுக்குச் சுருட்டினர்.
