ஐபிஎல் தொடரின் எல்-கிளாசிகோ..! இன்று மோதுகிறது சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள்
ஐபிஎல் தொடரில் எல்-கிளாசிகோ என்று அழைக்கப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணி இன்று பலப்பரீட்சை நடத்த உள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் போட்டியில், ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சிஎஸ்கே அணியும், சூர்யகுமார் யாதவ் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.
சர்வதேச அளவில் இந்தியா- பாகிஸ்தான் போட்டி போல, ஐபிஎல்-இல் சிஎஸ்கே – மும்பை இந்தியன்ஸ் ஆட்டத்தில் அனல் தெறிக்கும் என்பதால் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
43 வயதான தோனி, நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக வயதுடைய வீரராக களமிறங்குகிறார். “தல” தோனி அணியில் இருக்கிறார் என்பதையே சிஎஸ்கேவும், சிஎஸ்கே ரசிகர்களும் பலமாக பார்க்கின்றனர்.
கேப்டன் ருதுராஜ், கான்வே, ரச்சின் ரவீந்திரா, ஷிவம் துபே என்ற வலுவான பேட்டிங் வரிசையுடனும், ஆல்ரவுண்டர்களான ஜடேஜா, சாம் கரன், வேகத்திற்கு பதிரனா, கலீல் அகமது என சிஎஸ்கே அணி மிகவும் பலமாக உள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின், பத்து ஆண்டுகளுக்குப் பிறகு சிஎஸ்கேவுக்கு திரும்பியிருப்பது ரசிகர்களின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது.
இதே போல, ரோகித் சர்மா, கேப்டன் சூர்யகுமார் யாதவ், ரிக்கல்டன், திலக் வர்மா என மும்பையின் பேட்டிங் படையும் வலுவாகவே உள்ளது. ஹர்திக் பாண்டியா, பும்ரா இல்லாதது மும்பை அணிக்கு சற்று பலவீனமே என்றாலும், சாண்ட்னர், பவுல்ட், தீபக் சஹார் என மும்பையின் வேக கூட்டணி மிரட்டும் வகையில் உள்ளது.
பரபரப்புக்கு பஞ்சமில்லாத இந்த போட்டிக்கு முன்னதாக இசையமைப்பாளர் அனிருத்தின் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்த போட்டிக்கு மேலும் கொண்டாட்டத்தை சேர்த்துள்ளது.
