Author: Namadhu Arasu

இந்தியாஉலகம்குற்றம்நிகழ்ச்சிகள்

டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவம்.. பிரதமர் மோடி தலைமையில் நாளை பாதுகாப்பு அமைச்சரவை கூட்டம்!

பிரதமர் நரேந்திர மோடியின் பூடான் பயணத்தைத் தொடர்ந்து, நாளை பாதுகாப்பிற்கான அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
அண்டை நாடான பூடானுக்கு பிரதமர் மோடி இரண்டு நாட்கள் அரசுமுறைப் பயணமாக இன்று செல்கிறார். இப்பயணத்தின்போது, பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கியெல் வாங்சுக் (Jigme Khesar Namgyel Wangchuck), பிரதமர் ஷெரிங் தோபே ஆகியோரை சந்தித்து இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
மேலும், தற்போதைய மன்னரின் தந்தையும், முன்னாள் மன்னருமான ஜிக்மே சிங்கியே வாங்குசுங்கின் 70ஆவது பிறந்தநாள் விழாவிலும் பங்கேற்று சிறப்பிக்கவுள்ளார். அப்போது, இந்தியாவின் நிதியுதவியுடன் பூடானில் கட்டப்பட்டுள்ள ஆயிரத்து 20 மெகாவாட் திறன் கொண்ட மிகப்பெரிய நீர்மின் நிலையத்தை பிரதமர் மோடியும், பூடான் மன்னரும் இணைந்து திறந்து வைக்கவுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, நாளை இந்தியா திரும்பும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பிற்கான அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. அப்போது, டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவம் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து விரிவான ஆலோசனை நடைபெறும் எனக் கூறப்படுகிறது.
டெல்லியில் குண்டுவெடிப்பு நடந்த கார் அரியானா பதிவெண் கொண்டது என்பதும், அதன் தற்போதைய உரிமையாளர் புல்வாமாவைச் சேர்ந்தவர் என்பதும் அம்பலமாகியுள்ளது.
டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கும், ஹரியானாவில் 350 கிலோ வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதற்கும் ஏதேனும் தொடர்புள்ளதா என்ற கோணத்தில் புலனாய்வு அமைப்புகள் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளன. காஷ்மீரில் பயங்கரவாத அமைப்பினருக்கு ஆதரவாக நோட்டீஸ் ஒட்டப்பட்டது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த வாரம் உத்தரபிரதேசத்தின் சாஹரான்பூரில் அடில் அகமது என்ற மருத்துவர் கைது செய்யப்பட்டார். அவருக்குச் சொந்தமான லாக்கரில் இருந்து ஏ.கே 47 வகை துப்பாக்கி கண்டெடுக்கப்பட்டது.
காஷ்மீர் டூ டெல்லி – வெடித்த காரின் அதிர்ச்சி பின்னணி!
டெல்லியில் குண்டுவெடிப்பு நடந்த கார் அரியானா பதிவெண் கொண்டது, உரிமையாளர் புல்வாமாவைச் சேர்ந்தவர்.

கார் 2014 முதல் நான்கு முறை முறைகேடாக விற்பனை செய்யப்பட்டு, பெயர் மாற்றம் செய்யப்படவில்லை.

சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு தீவிரம், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Read More
தமிழ்நாடுதொழில்நுட்பம்வணிகம்

வீட்டில் எவ்வளவு வெள்ளி வைத்திருக்கலாம்.? RBI ரூல்ஸ்.. மீறினால் அபராதம்

வீட்டில் எவ்வளவு வெள்ளி வைத்திருக்கலாம்? ஆர்பிஐ மற்றும் வருமான வரித்துறை விதிகள் என்ன? விதிகளை மீறினால் அபராதம் விதிக்கப்படும் வாய்ப்பும் உண்டு.
இந்தியாவில் வெள்ளி என்பது நகைகள், பாத்திரங்கள், முதலீடு என பல வடிவங்களில் பயன்படுத்தப்படுகிறது. சமீப காலங்களில் தங்கத்தை விட வெள்ளி சிறந்த முதலீட்டு நிறுவனமாக மாறியுள்ளது. இந்த வருடம் மட்டும் 80% வரை லாபம் கொடுத்துள்ளது. இதனால் மக்கள் வெள்ளி வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால் வீட்டில் வெள்ளி சேமிப்பில் ஏதேனும் வரி விதிகள் அல்லது வரம்புகள் (லிமிட்) உள்ளதா என்பதை தெரிந்துகொள்வது அவசியம்.
வருமான வரி சட்டப்படி (வருமான வரி சட்டம் 1961), நீங்கள் எவ்வளவு வெள்ளி வேண்டுமானாலும் வீட்டில் வைத்திருக்கலாம். அது வாங்கியதோ அல்லது மரபாக வந்ததோ எதுவாக இருக்கும் இருந்தாலும் பரவாயில்லை. தங்கத்திற்கு உள்ளதைப் போல வெள்ளிக்கு எந்த அளவு கட்டுப்பாடு இல்லை. அதாவது, ஆர்பிஐ (RBI) அல்லது வருமான வரித்துறை எந்த ஒரு சட்டத்திலும் வீட்டில் வைத்திருக்கக்கூடிய வெள்ளி அளவுக்கு வரம்பு விதிக்கப்படவில்லை.
ஆனால் முக்கியமானது, நீங்கள் வெள்ளி வாங்கும் போது அவசியமாக ரசீது அல்லது பில் வைத்திருக்க வேண்டும். ஏனெனில், எதிர்காலத்தில் வருமான வரித்துறை ஆய்வு செய்தால், அந்த வெள்ளி சட்டப்படி வாங்கப்பட்டது என்பதற்கு ஆதாரம் காட்ட முடியாவிட்டால், அது அறிவிக்காத சொந்தமாக கருதப்படும் வாய்ப்பு உள்ளது.
நீங்கள் வெள்ளியை நகையாக அல்லாமல் முதலீடாகக் கருதினால், விற்பனை செய்தபோது வரி விதிகள் பொருந்தும். 24 மாதத்திற்குள் விற்றால், அது Short Term Capital Gains (STCG) ஆகும்; உங்கள் வருமான வரி விகிதத்திற்கேற்ப வரி செலுத்த வேண்டும். 24 மாதத்திற்குப் பிறகு விற்றால், அது Long Term Capital Gains (LTCG) ஆகும். ஜூலை 23, 2024க்குப் பிறகு வாங்கிய வெள்ளிக்கு 12.5% ​​வரி விதிக்கப்படும்.
indexation சலுகை இல்லை. அதற்கு முன் வாங்கிய வெள்ளிக்கு 20% வரி மற்றும் indexation சலுகை உண்டு. ஆகவே, வெள்ளி நகை, நாணயம் அல்லது ETF, Mutual Fund ஆகிய எந்த வடிவிலும் முதலீடு செய்தாலும், அதன் சட்டபூர்வ ஆதாரத்தை வைத்திருக்க வேண்டும். வெள்ளி சேமிப்பில் வரம்பில்லை, ஆனால் பில் இருந்தால்தான் பாதுகாப்பு உண்டு.

Read More
அரசியல்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்

திருச்சியில் 25 அன்புச்சோலை மையங்கள்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்!

திருச்சியில் 10 கோடி மதிப்பில் 25 அன்புச்சோலை மையங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
திருச்சியில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 25 அன்புச்சோலை – முதியோர் மனமகிழ் வள மையங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். மூத்த குடிமக்களின் நல்வாழ்வை மேம்படுத்துவற்காக, வீடுகளில் உள்ள முதியவர்கள் மனம் சோர்வடையாமல் ஊக்கம் பெற உதவும் வகையில் ‘அன்புச்சோலை’ என்ற புதிய திட்டத்தை தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ளது.
தமிழ்நாடு அரசின் நிதியுதவியுடன் பகலில் மட்டும் இயங்கும் இந்த அன்புச்சோலை மையங்கள், போதிய இடவசதி, போதுமான உட்கட்டமைப்பு வசதிகள் கொண்டிருக்கும். இந்தப் பகல்நேரப் பராமரிப்பு மையங்களில், முதியவர்கள் தோழமை மற்றும் அர்த்தமுள்ள செயல்பாடுகளில் ஈடுபடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக காலை 9.30 மணிக்கு திருச்சி – ஸ்ரீரங்கம் எம்எல்ஏ பழனியாண்டி இல்ல திருமண விழாவில் முதல்வர் முக ஸ்டாலின் கலந்து கொள்கிறார். பின்னர் புதுக்கோட்டை – கீரனூர் தனியார் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள மேடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதுக்கோட்டை மாவட்டத்தில் 767 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி விழாப் பேருரை ஆற்றுகிறார்கள். இதனைத்தொடர்ந்து இந்நிகழ்ச்சிகள் முடிந்து மாலை சென்னைக்கு மீண்டும் திரும்ப உள்ளார்.

Read More
அரசியல்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்

சென்னையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்…

சென்னையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தொடர்பாக அனைத்துக் கட்சிகள் கூட்டம் நடைபெறுகிறது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக் கட்சிகள் கூட்டம் நடைபெறவுள்ளது. பிகார் போன்று தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணிகள் வரும் செவ்வாய்க்கிழமை தொடங்கவுள்ளன. இதற்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இது தொடர்பாக விவாதிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை தியாகராய நகரில் இன்று காலை 10 மணியளவில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் திமுக கூட்டணி கட்சிகள் மட்டுமின்றி கூட்டணியில் இல்லாத கட்சிகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, அதிமுக, பாஜக, பாமகவின் அன்புமணி தரப்பு தவிர்த்து, கூட்டணியில் இல்லாத தேமுதிக, தமாக, தவெக உள்ளிட்ட 60 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் தலைவர்கள் வைக்கும் கோரிக்கைகள், ஆலோசனைகள் அடிப்படையில் அடுத்தக்கட்ட செயல்பாடுகள் அமையும் என்று கூறப்படுகிறது. இதனிடையே, இக்கூட்டத்தில் யார் யார் பங்கேற்பார்கள் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

Read More
தமிழ்நாடுநிகழ்ச்சிகள்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 9 மசோதாக்கள்… ஒப்புதல் அளித்த ஆளுநர் ஆர்.என். ரவி

தமிழ்நாடு நிதி நிர்வாக பொறுப்புடைமை உள்பட சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 9 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
அக்டோபர் 14 முதல் 17ஆம் தேதி வரை 4 நாட்கள் நடந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில் மொத்தம் 16 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. அவை ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டன. இதில் 9 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் வழங்கி உள்ளார்.
இதில் முக்கியமாக தமிழ்நாடு நிதி நிர்வாக பொறுப்புடைமை மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த மசோதா முதல் முறையாக கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பினார்.
சட்டப்பேரவையில் மீண்டும் மசோதா நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. இந்நிலையில் தமிழ்நாடு நிதி நிர்வாக பொறுப்புடைமை மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் வழங்கி உள்ளார்.
இதுதவிர, தமிழ்நாடு நெடுஞ்சாலைகள் திருத்த மசோதா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை உயர்த்தும் மசோதா, சிறு குற்றங்களுக்கு சிறை தண்டனைக்கு பதிலாக அபராதம் விதிக்கும் மசோதா உள்ளிட்ட 9 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

Read More
இந்தியாஉலகம்நிகழ்ச்சிகள்வணிகம்

சீனா மீதான வரி 10% குறைப்பு.. அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு!

தென்கொரியாவில் உள்ள புசான் (BUSAN) நகரில் சீன அதிபர் ஷி ஜின்பிங் – அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகியோர் சந்தித்துக் கொண்டனர். இந்த சந்திப்பு ஒரு மணி நேரம் 40 நிமிடம் நடைபெற்றது.
அதிபர் ஷி ஜின்பிங் உடனான சந்திப்புக்குப் பிறகு சீனப் பொருட்கள் மீதான வரி 10 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற டிரம்ப், பல்வேறு நாடுகளின் மீது வரி விதிப்பை மேற்கொண்டார். இது உலக நாடுகளின் வர்த்தகத்தை பெரிதும் பாதித்தது.
இந்த நிலையில், தென்கொரியாவில் உள்ள புசான் (BUSAN) நகரில் சீன அதிபர் ஷி ஜின்பிங் – அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகியோர் சந்தித்துக் கொண்டனர். இந்த சந்திப்பு ஒரு மணி நேரம் 40 நிமிடம் நடைபெற்றது.
வரி விதிப்பு, ஏற்றுமதி கட்டுப்பாடுகள் உள்ளிட்டவற்றால் இருநாடுகள் இடையே நிலவிய வர்த்தகப் போரின் பதற்றத்தைத் தணிக்க இருநாட்டுத் தலைவர்களும் சந்தித்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
இந்த சந்திப்பிற்குப் பிறகு, சீனப் பொருட்கள் மீதான வரி 10 சதவிகிதம் குறைப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார். இது உடனே நடைமுறைக்கு வருவதாகவும் கூறினார். இதற்கு முன்பாக, சீனப் பொருட்களுக்கு 57 சதவிகிதம் வரி விதிக்கப்பட்டு வந்தது. அது தற்போது 10 சதவிகிதம் குறைக்கப்பட்டு 47 சதவிகிதமாக உள்ளது.

Read More
தமிழ்நாடுதொழில்நுட்பம்மாவட்டம்

தொடர் கனமழை.. இன்று இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள “மொந்தா” புயல் இன்று கரையை கடக்கவுள்ளது. இதனால் தமிழகத்தில் பெரிய பாதிப்பு இல்லை என்றும் அறிவிக்கப்பட்டாலும், ஆங்காங்கே கனமழை நீடிக்கும் என்றும் ஒரு சில மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் விடுத்தும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
மொந்த புயல் காரணமாக தமிழகத்தில் ஆங்காங்கே நள்ளிரவு முதல் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.மாவட்ட பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது
நேற்று முதலே சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இடை விடாது மழை தொடர்ந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு சென்னையில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மட்டும் ஒரு நாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இதே போல் திருவள்ளூர் மாவட்டத்திலும், மழையை கருத்தில் கொண்டு இன்று ஒரு நாள் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இதனால் மக்கள் வீடுகளில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும், கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கனமழை மேலும் நீடிக்கும் பட்சத்தில் இன்னும் சில மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
100 கி.மீ., வேகம்.. ‘மொந்தா’ புயல் எச்சரிக்கை.. வானிலை மையம் அப்டேட்
மொந்தா புயல் சென்னைக்கு கிழக்கே 480 கி.மீ. தொலைவில் தீவிரமாகி, ஆந்திர கடலோரம் அருகே கரையை கடக்க வாய்ப்பு.

திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை.

வடதமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை & காரைக்கால் பகுதிகளில் பலத்த தரைக்காற்று வீச வாய்ப்பு.

Read More
தமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்

நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு இன்று முதல் ஆய்வு

தமிழ்நாட்டில் நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசால் நியமிக்கப்பட்ட 3 நிபுணர் குழு (அக்.25) இன்று முதல் தங்கள் ஆய்வைத் தொடங்க உள்ளதாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் (TNCSC) வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
நெல் கொள்முதலின் நிலையை இந்தக் குழுக்கள் ஆய்வு செய்யும். வடகிழக்கு பருவமழையின் தொடக்கத்தால் பெய்துவரும் தொடர்மழை காரணமாக கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பதம் குறித்த நெறிமுறைகளைத் தளர்த்தக் கோரி, நெல்லின் ஈரப்பதத்தை 17%-ல் இருந்து 22% ஆக அதிகரிக்க அனுமதி வழங்குமாறு அக்.19-ஆம் தேதி மாநில அரசு விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து இந்த ஆய்வுகள் நடைபெறுகின்றன.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் தகவல்படி, ஆய்வுக் குழுக்களின் பயணத் திட்டம் பின்வருமாறு:

முதல் குழு:

அக்டோபர் 25: செங்கல்பட்டு மாவட்டம்

அக்டோபர் 26: திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்கள்

இரண்டாவது குழு:

அக்டோபர் 25: தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை

அக்டோபர் 26: திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம்

அக்டோபர் 27: கடலூர்

மூன்றாவது குழு:

அக்டோபர் 25: திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்

அக்டோபர் 26: மதுரை மற்றும் தேனி மாவட்டங்கள்

இந்த ஆய்வுகளின் நோக்கம், அறுவடை செய்யப்பட்ட நெல்லின் ஈரப்பத அளவுகளை மதிப்பிடுவதும், கொள்முதல் விதிமுறைகளைத் தளர்த்துவதற்கான சாத்தியக்கூறுகளைத் தீர்மானிப்பதும் ஆகும். ஆய்வின் முடிவுகள் மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்படும் என்றும், அதன் அடிப்படையிலேயே மாநிலத்தின் கோரிக்கை குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் தெரிவித்துள்ளது.

Read More
ஆன்மீகம்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்

கோயில் நிதியில் வணிக வளாகங்கள் கட்டக்கூடாது.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!

கோயில் நிதியில் வணிக வளாகங்கள் கட்டக்கூடாது என தமிழகம் முழுவதுமுள்ள அனைத்து கோயில்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கந்தக்கோட்டம் முத்துக்குமார சுவாமி கோயிலுக்கு சொந்தமான இடங்களில், வணிக வளாகங்களும், குடியிருப்புகளும் கோயில் நிதியில் கட்ட தடை விதிக்கக் கோரி, ஏ.பி. பழனி என்பவர் மனுத்தாக்கல் செய்தார். வழக்கு விசாரணையின்போது, 80 சதவீத கட்டுமானப் பணிகள் முடிந்துவிட்ட நிலையில், இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும்,
7 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் கட்டடங்கள் மூலம், மாதம் 7 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கும் எனவும் தமிழக அரசு தரப்பு தெரிவித்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிமன்றம், முத்துகுமாரசுவாமி கோயில் நிலத்தில் மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகளை தொடர அனுமதி அளித்தது.
நவம்பர் 22ஆம் தேதி பதில் அளிக்க தமிழக அரசுக்கும், கோயில் நிர்வாகத்திற்கும் ஆணையிட்டது. மேலும், கோயில் நிதியில் வணிக வளாகங்கள் கட்டக்கூடாது என தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களுக்கு சுற்றறிக்கை வெளியிட அறநிலையத் துறை ஆணையருக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், தவறினால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தது.

Read More
தமிழ்நாடுநிகழ்ச்சிகள்

வங்க கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி…

தென் கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அக்டோபர் 26-ம் தேதி காற்றழுத்த தாழ்வுமண்டலமாக வலுவடையும் என வானிலை மையம் கணித்துள்ளது.
வடக்கிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகளிலும், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களிலும் இன்று கனமழை பெய்யக் கூடும் எனவும், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களிலும் இன்று கனமழை பெய்யும் என வானிலை மையம் கணித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு வங்கக்கடலில் 65 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், தென்கிழக்கு வங்ககடல் மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று காலை 5.30 மணிக்கு தென்கிழக்கு வங்ககடலில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.
இது மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் தெளிவாகத் தெரியும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Read More