Author: Namadhu Arasu

அறிவியல்தமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்

டிட்வா புயல் வலுவிழந்தது… மேக கூட்டம் ஏதுமின்றி வெற்று சுழலாக மாறியது 

வங்கக்கடலில் நகரும் டிட்வா புயல் வலுவிழந்துவிட்டதாகவும் மேக கூட்டம் ஏதுமின்றி வெற்று சுழலாக டிட்வா புயல் மாறிவிட்டது என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
வங்கக் கடலில் உருவாகியுள்ள டிட்வா புயல் இன்று மாலை சென்னையை நெருங்கிவிடும் என வானிலை ஆய்வு மையம் கணித்து உள்ளது. டிட்வா புயலின் தாக்கத்தால், சென்னையில் நேற்று பிற்பகல் முதல் லேசான மழை பெய்யத் தொடங்கிய நிலையில், இரவிலும் மிதமான மழை நீடித்தது. நுங்கம்பாக்கம், வடபழனி, கிண்டி, மெரினா கடற்கரை, பட்டினப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்தது.
ஆனால் தற்போது காலை முதல் நகர் முழுவதும் லேசான மழையே பெய்து வருகிறது. இதனிடையே டிட்வா புயலால் சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு இல்லை என வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கணித்துள்ளார். வங்கக்கடலில் நகரும் டிட்வா புயல் வலுவிழந்துவிட்டது; மேக கூட்டம் ஏதுமின்றி வெற்று சுழலாக டிட்வா புயல் மாறிவிட்டது. டிட்வா புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிவிட்டது; இன்று மாலை புயலின் சுழற்சியால் மீண்டும் மேகங்கள் உருவாக வாய்ப்புள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின் படி, டிட்வா புயல் காரணமாக திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்று அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் என்ற ஆரஞ்ச் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களிலும் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் என கணித்துள்ளது. இது தவிர, சேலம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தை தவிர மற்ற மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பில்லை எனவும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
இன்று டிட்வா புயலின் தாக்கத்தால், தென் கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் மணிக்கு 75 கிலோ மீட்டர் வேகம் வரை தரைக்காற்று வீசக்கூடும் எனவும், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகம் வரை தரைக்காற்று வீசக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Read More
தமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்மாவட்டம்

எஸ்.ஐ.ஆர் படிவத்தில் உறவினர் பெயர் கட்டாயமில்லை: தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி

தமிழகத்தில் நடைபெற்று வரும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கான கணக்கீட்டு படிவங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க டிசம்பர் 4-ம்தேதி வரை மட்டுமே கால அவகாசம் உள்ளது என்றும், அதற்குள் படிவத்தை சமர்ப்பிக்காதவர்களின் பெயர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாது என்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் எச்சரித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில் அவர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்
வாக்காளர்கள் உரிமை கோரலுக்கு டிச.9 – ஜன.8 வரை விண்ணப்பிக்கலாம் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூறியுள்ளார். தமிழ்நாட்டின் 6.41 கோடி வாக்காளர்களில் 6.23 கோடி வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவங்கள் விநியோகிக்கப்பட்டுவிட்டன.
சிறப்புத் தீவிர திருத்தப் பணியை வெற்றிகரமாக முடிப்பதற்காக 38 மாவட்ட தேர்தல் அதிகாரிகள், 234 வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் 68,467 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் எனத் தேர்தல் துறை முழு வீச்சில் களமிறங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள 6.41 கோடி வாக்காளர்களில், இதுவரை 6.23 கோடி வாக்காளர்களுக்குக் கணக்கீட்டு படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

வாக்காளர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்கள்:

கணக்கீட்டு படிவங்களைப் பெற்ற வாக்காளர்கள் கடைசி நேர நெரிசலைத் தவிர்க்க, டிச.4 வரை காத்திருக்காமல் உடனடியாகப் பூர்த்தி செய்து வாக்குச்சாவடி நிலை அலுவலர், உதவி மையங்களில் சமர்ப்பிக்க வேண்டும். டிசம்பர் 4-ம் தேதிக்குள் கணக்கீட்டு படிவத்தைச் சமர்ப்பிக்காத வாக்காளர்களின் பெயர்கள், டிச.9 அன்று வெளியிடப்படவுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாது.

3 முறை அதிகாரிகள் வீடு தேடிச் சென்றும் கணக்கீட்டு படிவம் வழங்க முடியாத வாக்காளர்களின் பெயர்களும் வரைவுப் பட்டியலில் இடம்பெறாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெயர் விடுபட்டால் என்ன செய்வது?

வரைவுப் பட்டியலில் பெயர் இல்லை என்றால், படிவம் 6-உடன் உறுதிமொழிப் படிவத்தை இணைத்துப் புதிதாக விண்ணப்பிக்கலாம். 2002/2005 வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரையோ, உறவினர் பெயரையோ கண்டறிய முடியாதவர்கள், பிற விவரங்களை நிரப்பி டிசம்பர் 4-க்குள் படிவத்தை ஒப்படைத்தால், அவர்களது பெயர் வரைவுப் பட்டியலில் சேர்க்கப்படும்.

அங்கீகரிக்கப்பட்ட 12 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 2,44,685 வாக்குச்சாவடி நிலை முகவர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒரு முகவர் ஒரு நாளைக்கு அதிகபட்சம் 50 கணக்கீட்டு படிவங்களை மட்டுமே உறுதிமொழியுடன் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க அனுமதிக்கப்படுவர்.

முக்கியத் தேதிகள் (Timeline)

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: 09.12.2025

பெயர் சேர்த்தல்/நீக்கல்/திருத்தம் (Claims and Objections): 09.12.2025 முதல் 08.01.2026 வரை.

விசாரணை காலம் (Notice Phase): 09.12.2025 முதல் 31.01.2026 வரை.

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: 07.02.2026.

வாக்காளர்கள் முழு ஒத்துழைப்பு அளித்து, இந்த ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுமாறு தலைமை தேர்தல் அதிகாரி கேட்டுக்கொண்டு உள்ளார்.

Read More
தமிழ்நாடுநிகழ்ச்சிகள்மாவட்டம்வணிகம்

மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – டிசம்பர் 15-ம் தேதி முதல் …

“டிசம்பர் 15-ம் தேதி முதல் மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடுத்த உறுதி
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரோட்டில் நடைபெற்ற விழாவில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டதுடன், மத்திய பாஜக அரசு மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
ஈரோடு மாவட்டம், ஜெயராமபுரம், மொடக்குறிச்சியில் சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் பொல்லான் முழு திருவுருவச் சிலையுடன் கூடிய அரங்கத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (26.11.2025) திறந்து வைத்தார்.
அதைத்தொடர்ந்து ஈரோடு சோலார் புதிய பேருந்து வளாகத்தில் நடைபெறும் அரசு விழாவில் 235 கோடியே 73 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் சோலார் புதிய பேருந்து நிலையம் உள்பட 790 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தும் , 91 கோடியே 9 லட்ச மதிப்பீல் 23 புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் 1 லட்சத்து 84 ஆயிரத்து 491 பயனாளிகளுக்கு 278 கோடியே 62 லட்ச மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள் என 605 கோடி கோடியே 44 லட்ச மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அப்போது அவர் பேசும்போது, “ஈரோடு மாவட்டத்திற்கு செயல்படுத்தியுள்ள திட்டங்களை பட்டியலிட்டார். குறிப்பாக கடந்த நான்கு ஆண்டுகளில் ஈரோடு மாவட்டத்திற்காக ரூ.9,327 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன எனவும் ஏற்கெனவே ஈரோட்டிற்கு அறிவிக்கப்பட்ட அனைத்துத் திட்டங்களும் டிசம்பர் 10ஆம் தேதிக்குள் நிறைவேற்றப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.
“ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் விடுபட்ட தகுதியுள்ள பயனாளிகளுக்கு, வரும் டிசம்பர் 15ஆம் தேதி முதல் மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். தி.மு.க. அரசு அளித்த அத்தனை தேர்தல் அறிவிப்புகளையும் நிறைவேற்றி வருகிறது என்றும் முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார்.
விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “வாக்காளர் பட்டியலில் உங்களுடைய பெயர் இருப்பதை அனைவரும் உறுதி செய்து கொள்ள வேண்டும்” என்று பொதுமக்களைக் கேட்டுக் கொண்டார்.

Read More
தமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்மாவட்டம்

SIR | வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டால்..? – தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்

வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டால், அதற்கான காரணம் தொடர்புடைய வாக்குச்சாவடியில் ஒட்டப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி (CEO) அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். மேலும், பூர்த்தி செய்த எஸ்ஐஆர் படிவங்களை சமர்ப்பிக்க டிசம்பர் 4-ம் தேதிக்கு பிறகு அவகாசம் நீட்டிக்கப்படாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் கூறியது: “தமிழகத்தில் 6.41 கோடி வாக்காளர்களின் பெயர்கள் இடம்பெற்ற வாக்காளர் பட்டியலில் சிறப்புத் தீவிர திருத்த பணி (எஸ்ஐஆர்) நடைபெற்று வருகிறது. இந்தப் பணியில் 68,470 பிஎல்ஓக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட 83,256 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அரசியல் கட்சிகள் சார்பில் பிஎல்ஏக்கள் 2,45,340 பேர் நியமிக்கப்பட்டு, எஸ்ஐஆர் பணிக்கு உதவி வருகின்றனர். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் இவ்வளவு பிஎல்ஏக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் 33,000 தன்னார்வலர்கள் உதவி செய்து வருகின்றனர். இதுவரை 6.16 கோடி படிவங்கள் (96 சதவீதம்) வாக்காளர்களிடம் வழங்கப்பட்டுள்ளன. இதில் 50 சதவீத படிவங்கள், பூர்த்தி செய்யப்பட்டு திரும்ப பெறப்பட்டுள்ளன. அதில் 2.59 கோடி படிவங்கள் (40%) கணினியில் பதிவேற்றப்பட்டுள்ளன.

327 பிஎல்ஓக்கள் தங்கள் பணிகளை 100 சதவீதம் நிறைவு செய்துள்ளனர். சென்னையில் 96 சதவீத படிவங்கள் கொடுக்கப்பட்டு, 50 சதவீத படிவங்கள் திரும்ப பெற்று, 30 சதவீத வடிவங்கள் கணினியில் ஏற்றப்பட்டுள்ளன. ஆன்லைன் மூலம் 2 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். ஏற்கெனவே வாக்காளர்களாக இருப்பவர்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை. வாக்காளர்கள் தங்களால் முடிந்த விவரங்களை பூர்த்தி செய்து கொடுக்கலாம். மீதம் உள்ளவற்றை பூர்த்தி செய்ய பிஎல்ஓக்கள், தன்னார்வலர்கள் உதவுவார்கள். பிஎல்ஓக்களுக்கு அதற்கான செயலிகள் வழங்கப்பட்டுள்ளன.
உரிய விவரங்கள் இல்லை என படிவத்தை கொடுக்காமல் இருந்து விடக்கூடாது. உரிய காரணமின்றி தகுதியான வாக்காளர்கள் ஒருவரின் பெயரும் பட்டியலில் இருந்து நீக்கப்படாது. வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டால், அதற்கான சரியான காரணம், அந்தந்த வாக்குச்சாவடிகளில் ஒட்டப்படும். தேர்தல் ஆணைய இணையதளத்திலும் வெளியிடப்படும்.

இறப்பு, வீடுகளில் இல்லாதவர்கள், நிரந்தரமாக வேறு இடங்களுக்கு குடியேறியவர்கள், இரட்டை வாக்குரிமை வைத்திருப்பவர்கள், படிவத்தை பெற்றுச் செல்லாதவர்கள் அல்லது பூர்த்தி செய்து திருப்பி தராதவர்கள் ஆகிய 5 காரணங்களில் ஏதேனும் ஒரு காரணம் இருந்தால் மட்டுமே பெயரை பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்று தெளிவான அறிவுறுத்தல்கள் வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. டிசம்பர் 4-ம் தேதி வரை மட்டுமே பூர்த்தி செய்த படிவங்களை பெற அவகாசம் வழங்கப்படும். அதன்பிறகு அவகாசம் நீட்டிக்கப்படாது.

ஒரே தொகுதிக்குள் இருந்தால் படிவங்களை பெற்று, பூர்த்தி செய்து கொடுக்கலாம். வேறு தொகுதியில் குடியேறி இருந்தால், அவர்கள் முகவரி மாற்றுவதற்காக படிவம் 8-ஐ தான் கொடுக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.

Read More
தமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்

கோயம்புத்தூர் மக்களின் 15 வருட கனவு – இன்று செம்மொழி பூங்கா இன்று திறப்பு!

கோவை செம்மொழி பூங்கா இன்று (நவம்பர் 25) திறக்கப்படுகிறது. முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த பிரம்மாண்டமான பூங்காவை திறந்து வைக்கிறார். இது சுமார் 208.6 கோடி ரூபாய் செலவில், காந்திபுரத்தில் உள்ள மத்திய சிறைச்சாலை மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

கோவையின் புதிய அடையாளம்
இந்த பூங்கா, முதல்வர் ஸ்டாலினின் தந்தையும், முன்னாள் முதல்வருமான கலைஞரின் கனவை நிறைவேற்றும் ஒரு திட்டமாகும். 2010 ஆம் ஆண்டிலேயே அவர் இந்த பூங்கா திட்டத்தை அறிவித்தார். இப்போது, கோயம்புத்தூர் நகருக்கு ஒரு புதிய அடையாளமாகவும், மக்கள் குடும்பத்துடனும் நண்பர்களுடனும் வந்து மகிழ்ந்து செல்ல ஒரு சிறந்த இடமாகவும் இது அமையும்.
தாவரவியல் பூங்கா
45 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இந்த செம்மொழி பூங்காவின் முக்கிய அம்சம் அதன் தாவரவியல் பூங்கா ஆகும். இங்கு 23 விதமான சிறப்புத் தோட்டங்கள் உள்ளன. பாறைத் தோட்டம், மலர்த் தோட்டம், நறுமணத் தோட்டம், மூங்கில் தோட்டம், நீர் தோட்டம், மூலிகைத் தோட்டம், மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் பூச்சிகளுக்கான தோட்டம் என பலவகையான தோட்டங்கள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன.
5 லட்சத்திற்கும் அதிகமான செடிகள்
இந்த தாவரவியல் பூங்காவில் 2,000-க்கும் மேற்பட்ட தாவர வகைகளைச் சேர்ந்த ஐந்து லட்சத்திற்கும் அதிகமான செடிகள் உள்ளன. இவற்றில், அழிந்து வரும் நிலையில் உள்ள, சிவப்புப் பட்டியலில் உள்ள, மற்றும் மிக அபாயகரமான நிலையில் உள்ள தாவர வகைகளும் அடங்கும். உதாரணமாக, ஹில்டெகார்டியா பாப்புலிஃபோலியா, பென்டிக்டியா கொண்டப்பன்னா, பிஷோபியா ஜாவானிகா, மற்றும் சிஜியம் ஆக்ஸிடேண்டேல் போன்ற அரிய வகை தாவரங்களையும் இங்கு காணலாம்.
இணையவழி சாதனங்கள்
இந்த பூங்காவின் வடிவமைப்பாளரான ரூபமதி ஆனந்த் கூறுகையில், இங்குள்ள மண்ணின் ஈரப்பதம், வெப்பநிலை மற்றும் ஊட்டச்சத்துக்களை கண்காணிக்க இணையவழி சாதனங்கள் (IoT-based devices) பொருத்தப்பட்டுள்ளன. “மண்ணின் வளத்தை அறியவும், உரமிடுவதை மேம்படுத்தவும் நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் கண்காணிக்கப்படுகின்றன. இந்த கண்காணிப்பு, குறிப்பாக ரோஜா தோட்டம் போன்ற மிகவும் கவனமாகப் பராமரிக்க வேண்டிய தோட்டங்களில் மட்டுமே செய்யப்படுகிறது” என்று அவர் தெரிவித்தார்.
பூங்காவில் சேர்க்கப்படும்
இந்த பூங்காவின் ஒட்டுமொத்த வடிவமைப்பு ஆறு முக்கிய நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டது என்றும் அவர் கூறினார். அவை: பாதுகாப்பு, மீட்டெடுத்தல், கல்வி, பொழுதுபோக்கு, நல்வாழ்வு மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு. மேலும், பூங்காவின் இரண்டாம் கட்டமாக, இன்னும் அதிக பசுமையான இடங்களையும், சுவாசிப்பதற்கான இடங்களையும் உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். “அடுத்த கட்டத்தில், ஆர்க்கிட் மலர்கள், ஈரநிலத் தோட்டம், புதர் நிலத் தோட்டம், தேவதை கதைகள் தோட்டம் மற்றும் ஊட்டச்சத்து தோட்டம் போன்றவையும் பூங்காவில் சேர்க்கப்படும்” என்றும் அவர் கூறினார்.
டிக்கெட் கவுண்டர்
கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் எம். சிவகுரு பிரபாகரன், எதிர்காலத்தில் பொதுமக்களின் பொழுதுபோக்கிற்காக, செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான விளையாட்டு மையம் மற்றும் 12D திரையரங்கம் போன்றவற்றை செம்மொழி பூங்காவில் அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். “VOC மிருகக்காட்சி சாலைக்கு எதிரே உள்ள அரசு அருங்காட்சியகம், இந்த பூங்காவில் உள்ள டிக்கெட் கவுண்டர் கட்டிடத்திற்கு மாற்றப்படும்” என்றும் அவர் கூறினார்.

Read More
அறிவியல்தமிழ்நாடுநிகழ்ச்சிகள்

தமிழ்நாடு

தென்கிழக்கு வங்கக் கடலில் இன்று (நவ. 22) காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது. இதன் காரணமாக இன்று (சனி) மற்றும் நாளை (ஞாயிறு) கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, புதுக்கோட்டை, மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடலில் இன்று (நவ.22) புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த ஆய்வு மையம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
புயல் சின்னம் உருவாக்கம் மற்றும் நகர்வு: தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் தற்போது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் தாக்கம் காரணமாக, தென்கிழக்கு வங்கக் கடலில் சனிக்கிழமையான இன்று காற்றழுத்த தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) உருவாக வாய்ப்புள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நவ.24-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். தொடர்ந்து, தென்மேற்கு வங்கக் கடலில் இது மேலும் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் பட்சத்தில், அதற்கு ‘சென்யார்’ எனப் பெயர் சூட்டப்படும்.

கனமழை எச்சரிக்கை: இந்த புயல் சின்னம் காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நவம்பர் 22 முதல் 27 வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக பின்வரும் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது.

நாளை (நவ. 23 – ஞாயிற்றுக்கிழமை): கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மீனவர்களைப் பொறுத்தவரை, நவ.22, 23 ஆகிய தேதிகளில் தெற்கு அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இந்த நாட்களில் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Read More
இந்தியாதமிழ்நாடுநிகழ்ச்சிகள்

கோவைக்கு இன்று வரும் பிரதமர் மோடியை சந்திக்கும் ஈபிஎஸ்… கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை?

கோவைக்கு வரும் பிரதமர் மோடியை விமான நிலையத்தில் வரவேற்கும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அவருடன் ஆலோசனை நடத்தவுள்ளார். தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால் இருவரின் சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு ஓராண்டுக்கு முன்பாகவே அதிமுக – பாஜக கூட்டணி உறுதியானது. உள்துறை அமைச்சர் அமித் ஷா இதற்காக கடந்த ஏப்ரல் மாதமே சென்னை வந்து, கூட்டணி அறிவிப்பை வெளியிட்டார். அப்போதே, அதிமுக உள்கட்சி விவகாரங்களில் தாங்கள் தலையிடப் போவதில்லை என தெரிவித்தார் அமித் ஷா.
அமித் ஷாவின் இந்த கருத்து, அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களும், அந்த சமயத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தவர்களுமான ஓபிஎஸ், தினகரன் ஆகியோரை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தியதாக அரசியல் விமர்சகர்கள் கருதினர். அதற்கேற்றாற் போல், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் வெளியேறினர். பிரிந்தவர்களை ஒன்றிணைக்க வேண்டும் எனக் கூறிவந்த அதிமுகவின் மூத்த தலைவர் செங்கோட்டையனையும், கட்சியிலிருந்து ஈபிஎஸ் நீக்கினார்.
இப்படி அதிமுகவை சுற்றி அடுத்தடுத்த நிகழ்வுகள் நடைபெற்று வரும் சூழலில்தான், தமிழ்நாட்டுக்கு வருகை தரும் பிரதமர் மோடியை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி. தென்னிந்திய இயற்கை விவசாயிகள் மாநாட்டில் பங்கேற்க இன்று 1.30 மணிக்கு வருகை தரும் பிரதமர் மோடியை, கோவை விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமி வரவேற்க இருக்கிறார். தொடர்ந்து அவரை சந்தித்து பேச இருப்பதாகவும் கூறப்படுகிறது.
பாஜக மூத்த தலைவர்கள், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோரும் பிரதமரை வரவேற்க உள்ளனர். நிகழ்ச்சி முடிந்தபிறகு, மாலை 3.30 மணிக்கு கோவை விமான நிலையத்தை அடையும் மோடி, அங்கிருந்து தனி விமானம் மூலம் டெல்லி செல்கிறார். அதற்கு முன்னதாக, கோவையில் கூட்டணி கட்சித் தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.

Read More
அரசியல்இந்தியாதமிழ்நாடுநிகழ்ச்சிகள்

பீகார் அமைச்சரவை ஃபார்முலா: பாஜக – ஐக்கிய ஜனதா தள கட்சிக்கு சம பங்கு;

பீகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) வெற்றி பெற்ற நிலையில், புதிய அரசு அமைப்பதற்கான அமைச்சர் பதவிகள் ஒதுக்கீடு குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.பீகார் சட்டமன்றத் தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) அங்கம் வகித்த பா.ஜ.க மற்றும் ஐக்கிய ஜனதா தளம் (JD(U)) ஆகிய 2 பெரிய கட்சிகளும் தலா 101 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில், புதிய அரசு அமைப்பது குறித்த பேச்சுவார்த்தைக்கு முன்னதாக கூட்டணியில் ஆரம்ப முன்மொழிவு முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த முன்மொழிவின்படி, 2 பெரிய கட்சிகளுக்கும் சம எண்ணிக்கையிலான அமைச்சர் பதவிகளை வழங்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
பா.ஜ.க மற்றும் ஐக்கிய ஜனதா தளம் சம எண்ணிக்கையிலான அமைச்சர் பதவிகள். சிராக் பாஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி கட்சிக்கு (ராம் விலாஸ்) 2 அமைச்சர் பதவிகள் வழங்கப்படலாம். உபேந்திர குஷ்வாஹா தலைமையிலான ராஷ்டிரிய லோக் மோர்ச்சா (RLM) மற்றும் ஜிதன் ராம்மாஞ்சியின் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (மதச்சார்பற்ற) தலா 1 துறை வழங்கப்படலாம். இதுவே தற்போது விவாதத்தில் உள்ள ஃபார்முலா ஆகும். ஆலோசனைகள் நடந்து வருகின்றன. துறைகள் ஒதுக்கீட்டில் முக்கிய மாற்றங்கள் ஏற்படலாம், அது குறித்தும் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏ.க்கள் இன்று (திங்கட்கிழமை) பாட்னாவில் சந்திக்க உள்ளனர். இதைத் தொடர்ந்து, முதலமைச்சர் நிதீஷ் குமார் ஆளுநரைச் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தைச் சமர்ப்பித்து, புதிய அரசாங்கம் அமைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பா.ஜ.க சட்டமன்றக் கட்சி கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 17-வது பீகார் சட்டமன்றத்தின் பதவிக்காலம் நவ.22-ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, புதிய அமைச்சரவையின் பதவியேற்பு விழா புதன்கிழமை அல்லது வியாழக்கிழமை நடைபெறலாம் என்று தகவல் தெரிவிக்கிறது. பாஜக- 89, ஐக்கிய ஜனதா தளம் (JD(U)) – 85, லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) – LJP(RV) – 19, இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (மதச்சார்பற்ற) – HAM(S) – 5, ராஷ்டிரிய லோக் மோர்ச்சா (RLM – )4.

2020 தேர்தலில் பா.ஜ.க 74 இடங்களிலும், ஐக்கிய ஜனதா தளம் 43 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தன. அப்போது அமைந்த அரசில், பா.ஜ.கவுக்கு 22 அமைச்சர்களும், நிதீஷ் குமார் கட்சிக்கு 12 அமைச்சர்களும் மட்டுமே இருந்தனர். கூட்டணி வெள்ளிக்கிழமை வெற்றி பெற்ற பிறகு, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் பொதுச் செயலாளர் (அமைப்பு) பி.எல். சந்தோஷ் ஆகியோர் டெல்லியில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் அரசு அமைப்பது குறித்து சந்தித்தனர்.

Read More
தமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்மாவட்டம்

மெட்ரோ, பஸ், மின்சார ரயிலில் பயணம்: சென்னை ஒன் செயலியில் ரூ.1க்கு டிக்கெட் – புதிய அறிவிப்பு

‘சென்னை ஒன்’ செயலியில், தலா 1 ரூபாய் கட்டணம் செலுத்தி மெட்ரோ, மாநகர பேருந்து மற்றும் மின்சார ரயிலில் ஒரு முறை சலுகை பயணம் செய்யும் புதிய சலுகை, நாளை முதல் அறிமுகம் செய்யப்பட உள்ளது. சென்னை புறநகரில், மின்சார ரயில், மெட்ரோ, மாநகர பேருந்து, ஆட்டோ, டாக்சிகளில் பயணிக்க வசதியாக ‘சென்னை ஒன்’ செயலியை, கடந்த செப்., 22ம் தேதி, தமிழக அரசு துவக்கியது.
இந்த செயலியில், அனைத்து பொது போக்குவரத்துக்கும் டிக்கெட் பெறும் வசதி இருப்பதால், பயணியரிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தினமும் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த 10ம் தேதி மட்டும் அதிகபட்சமாக, 29,704 டிக்கெட்டுகள் விற்று சாதனை புரிந்துள்ளது.

இந்த செயலியை ஊக்கப்படுத்தும் வகையில் புதிய சலுகை, நாளை முதல் அறிமுகமாக உள்ளது. அதன்படி, பி.எச்.ஐ.எம்., எனப்படும், ‘பீம், நேவி’ செயலிகளை பயன்படுத்தி, யு.பி.ஐ., வாயிலாக பணம் செலுத்துவோர், மெட்ரோ ரயில், எம்.டி.சி., பேருந்துகளின் டிக்கெட்டை, 1 ரூபாய் செலுத்தி, முதல் முறை மட்டும் பயணம் செய்யலாம்.

விமான நிலையத்தில் இருந்து விம்கோ நகருக்கு மெட்ரோ ரயிலில் செல்ல, 40 ரூபாய் கட்டணம். சென்னை ஒன் செயலியை பயன்படுத்தி, பீம் மற்றும் நேவி செயலிகள் வாயிலாக டிக்கெட் எடுத்தால், ஒரு ரூபாய் கட்டணம்தான். பஸ், மின்சார ரயிலிலும் பயணிப்போரும் இந்த சலுகையை பெறலாம். இந்த சலுகையை, ஒரு டிக்கெட்டுக்கு ஒரு முறை மட்டும்தான் கிடைக்கும். இந்த நடைமுறை நாளை முதல் பயன்பாட்டிற்கு வரும்.
சென்னை மாநகரப் போக்குவரத்துக்கான அனைத்து சேவைகளையும் ஒருங்கிணைக்கும் ‘சென்னை ஒன்’ செயலியில், பயணியரை ஊக்குவிக்கும் விதமாக ஒரு புதிய சலுகை நாளைமுதல் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

Read More
தமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்

சென்னையில் 40.8 சதவீதம் முடிந்த SIR பணிகள்-விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு!

சென்னையில் 40.8 சதவீதம் SIR பணிகள் முடிந்துள்ளதாக கூறப்படுகிறது . இது தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது .
சென்னையில், 2026 ஆம் ஆண்டுக்கான சிறப்பு தீவிர திருத்தப் பணிகளின் (SIR) ஒரு பகுதியாக, வாக்காளர் பட்டியல்களைப் புதுப்பிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை, மாவட்டத்தில் உள்ள மொத்த வாக்காளர்களில் 40.8% பேருக்கு, அதாவது 16,35,596 வாக்காளர்களுக்கு, சிறப்பு தீவிர திருத்தப் படிவங்கள் (SIR forms) வீடு வீடாகச் சென்று விநியோகிக்கப்பட்டுள்ளன. இந்த விநியோகப் பணி நவம்பர் 4, 2025 அன்று தொடங்கி, டிசம்பர் 4, 2025 வரை தொடரும். இந்தப் பணியை மேற்கொள்ள, சென்னை மாவட்டத்தில் மொத்தம் 3,718 பூத் லெவல் அதிகாரிகள் ( Booth Level Officers ) நியமிக்கப்பட்டுள்ளனர்.

16 சட்டமன்றத் தொகுதி
சென்னை மாவட்டத்தின் 16 சட்டமன்றத் தொகுதிகளில் இந்த சிறப்பு தீவிர திருத்தப் பணி நடைபெற்று வருகிறது. திங்கட்கிழமை மாலை 8 மணி நிலவரப்படி, மொத்தம் 40,04,694 வாக்காளர்களில் 16,35,596 பேருக்கு படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. இது மொத்த வாக்காளர்களில் 40.8% ஆகும். அதிகபட்சமாக டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் 2,35,272 வாக்காளர்களில் 1,58,856 பேருக்கு படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. குறைந்தபட்சமாக திரு. வி. க. நகர் தொகுதியில் 2,23,571 வாக்காளர்களில் 77,227 பேருக்கு படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன.
பொதுமக்கள் இந்தப் புதுப்பிப்புப் பணியில் பங்கேற்க ஊக்குவிப்பதற்காக, நவம்பர் 10, 2025 அன்று பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. குடியிருப்புப் பகுதிகள், பூங்காக்கள் மற்றும் பள்ளிகளில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. வாக்காளர் சேர்க்கை குறித்த செய்திகளைத் தாங்கிய ரங்கோலி கோலங்களும் போடப்பட்டன. இந்தத் தகவல்களை GCC தெரிவித்துள்ளது.
பூத் லெவல் அதிகாரிகள் (Booth Level Officers) என்பவர்கள் யார்?
இவர்கள் தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்படும் அதிகாரிகள். ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் ஒரு அதிகாரி இருப்பார். வாக்காளர் பட்டியலைத் தயார் செய்வது, புதுப்பிப்பது, வாக்காளர்களின் விவரங்களைச் சரிபார்ப்பது போன்ற பணிகளை இவர்கள் மேற்கொள்வார்கள். வீடு வீடாகச் சென்று வாக்காளர்களைச் சந்தித்து, அவர்களின் விவரங்களைச் சேகரிப்பார்கள்.
சிறப்பு தீவிர திருத்தம் (SIR) என்றால் என்ன?
இது வாக்காளர் பட்டியலை மிகவும் துல்லியமாகவும், முழுமையாகவும் மாற்றுவதற்காக நடத்தப்படும் ஒரு சிறப்புப் பணியாகும். புதிய வாக்காளர்களைச் சேர்ப்பது, இறந்தவர்களின் பெயர்களை நீக்குவது, முகவரி மாறியவர்களின் விவரங்களைப் புதுப்பிப்பது போன்ற பணிகள் இதில் அடங்கும். இது பொதுவாக ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் விரைவாகச் செய்யப்படும்.
இந்த SIR படிவங்கள் எதற்காக?
வாக்காளர்கள் தங்கள் பெயர், முகவரி, வயது போன்ற விவரங்கள் சரியாக உள்ளதா என்பதைச் சரிபார்க்கவும், ஏதேனும் மாற்றங்கள் இருந்தால் அதைத் தெரிவிக்கவும் இந்தப் படிவங்கள் உதவுகின்றன. புதிய வாக்காளர்கள் இந்தப் படிவத்தைப் பயன்படுத்தி தங்கள் பெயரைப் பதிவு செய்யலாம்.
தேர்தல்களுக்கு மிகவும் அவசியமானது
இந்தச் சிறப்புத் திருத்தப் பணி, 2026 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் தேர்தல்களுக்கு மிகவும் அவசியமானது. துல்லியமான வாக்காளர் பட்டியல் இருந்தால் மட்டுமே தேர்தல்கள் நேர்மையாகவும், திறமையாகவும் நடத்தப்படும். எனவே, வாக்காளர்கள் அனைவரும் இந்தப் பணியில் முழு ஒத்துழைப்பு அளித்து, தங்கள் விவரங்களைப் புதுப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Read More