”உங்கள் நலனுக்காக மேகதாது அணை கட்ட ஒப்புக்கொள்ளுங்கள்”- டி.கே.சிவக்குமார்
உங்கள் நலனுக்காக மேகதாது அணை கட்ட ஒப்புக்கொள்ளுங்கள் என கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் பேட்டியளித்துள்ளார்.
பெங்களூருவில் காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் முதல்வர் சித்தராமையாவுடன் காங்கிரஸ் கட்சி தலைவர் டி.கே.சிவக்குமார் கொடியேற்றினார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் கூறியதாவது :
“வறட்சி காலத்தில் இரு மாநிலங்களுக்கிடையே பிரச்சனை வேண்டாம். போதுமான மழை பெய்தால் தேவையான நீர் வெளியேற்றப்படும். கடந்த வருடம் 40 டி.எம்.சி. உபரி நீர் கடலுக்கு சென்றது. மேகதாது அணை இருந்தால் அந்த நீர் தேக்கி வைக்கப்பட்டு தற்போது தமிழ்நாட்டிற்கு வழங்கி இருக்க முடியும்.

உங்கள் நலனுக்காக மேகதாது அணை கட்ட ஒப்புக்கொள்ளுங்கள். கர்நாடக அணைகளில் இருந்து எவ்வளவு நீர் திறந்துவிட முடியுமோ, அவ்வளவு திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு 10 டிஎம்பி தண்ணீர் திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பணிகள் துவங்கி உள்ளது. தற்போது தண்ணீர் திறந்து விடுவதற்கான பணிகளையும் நாங்கள் தொடங்கிவிட்டோம். தற்போது வறட்சி காலம், இரு மாநிலங்கள் இடையே பிரச்சினை வேண்டாம். போதுமான மழை பெய்தால் தண்ணீர் திறக்கப்படும். மேகதாதுவில் அணைகட்ட ஒப்புதல் தந்தால் தமிழ்நாட்டிற்கு கூடுதலாகவே தண்ணீர் திறக்க முடியும்” என தெரிவித்தார் .
