இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர முடியாது – ஆளுநர் ஆர்.என்.ரவி
செந்தில் பாலாஜி மீது குற்றவியல் வழக்கு இருப்பதால் அமைச்சராக அவர் தொடரமுடியாது எனக் கூறி முதலமைச்சரின் பரிந்துரையை ஏற்க ஆளுநர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜி, அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டார். அவரை வருகிற 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சென்னை முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சென்னை காவிரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு இரண்டு மூன்று நாட்களில் இதய அறுவை சிகிச்சை செய்ய மருத்துவ குழு பரிந்துரை செய்துள்ளது.

இந்நிலையில் குற்ற வழக்குகளை எதிர்கொள்ளும் செந்தில் பாலாஜி, இலாகா இல்லாத அமைச்சராக தொடரக்கூடாது என முதலமைச்சருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கடிதம் எழுதியுள்ளார். இலாகா இல்லாத அமைச்சராக செந்தில்பாலாஜி தொடர்வார் என்ற முதல்வரின் பரிந்துரையை ஏற்க ஆளுநர் மறுப்பு தெரிவித்துள்ளார். எனவே செந்தில் பாலாஜி அமைச்சரவையில் தொடரமாட்டார் என தெரிகிறது.
இதனிடையே யார் அமைச்சராக தொடரலாம் என்பதை கூற ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்றும், அமைச்சரவையை அமைப்பதற்கான முழு அதிகாரமும் முதலமைச்சரிடமும் உள்ளது, இந்த விவகாரத்தை திமுக சட்ட ரீதியாக சந்திக்கும் என்றும் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
