மதுரை மீனாட்சி அம்மன் கோவில் முன்பு மருதிருவர் மக்கள் களம் ஆர்ப்பாட்டம்..!
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் முன்பு மருதிருவரின் மக்கள் களம், வீரகுல அமரன் இயக்கம், மருதீஸ்வரர் ஆன்மீக சேவை அமைப்பு, அகமுடையார் முன்னேற்ற நலசங்கம், சைவநெறி மீட்பு பேரவை ஆகியவை ஒருங்கிணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தியது. இதில் பங்கேற்றவர்கள் சங்கு ஊதி நூதன முறையில் போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்து மருதிருவர் மக்கள் களம் நிர்வாகி தெற்கு வாசல் மருதுராஜா கூறுகையில்:
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மருதிருவர் கட்டிய சேர்வைகாரர் மண்டகபடி பெயரை மறைத்து சிவகங்கை ராஜா பெயரை பதிவு செய்து உண்மை வரலாறு மறைக்கப்பட்டுள்ளது.
இந்த விஷயத்தில் கோவில் நிர்வாகம், சிவகங்கை சமஸ்தானம் ஆகியவை கூட்டு சேர்ந்து செயல்படுகிறது. சேர்வைக் காரர் மண்டகப்படியில் சைவ சமய லீலை வரலாற்று நிகழ்வை கோவில் நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும்.
சேதமடைந்த பெரிய மருது-சின்ன மருது சிலையை சீரமைக்க வேண்டும். மீனாட்சி அம்மன் கோவிலுக்கு மருது பாண்டியர்கள் செய்த திருப்பணி மற்றும் அருட்ப பணிகளை ஆவணப்படுத்த வேண்டும் என்றார்.
மருதிருவரின் மக்கள் களம், வீரகுல அமரன் இயக்கம், மருதீசுவரர் ஆன்மீக சேவை உள்ளிட்ட அமைப்புகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதனைத் தொடர்ந்து போலீசார் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய அமைப்பு நிர்வாகிகளில் 15 பேரை கைது செய்தனர்.
