ஐபிஎல் 2023 : புதிய ஜெர்சியை வெளியிட்டது கே எல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்
இந்தியாவில் நடைபெறும் பிரம்மாண்ட கிரிக்கெட் தொடரான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இதுவரை 15 சீசன்களை கடந்துள்ளது. தற்போது வருகிற மார்ச் 31-ம் தேதி ,16-வது ஐபிஎல் சீசன் தொடங்கவிருக்கும் நிலையில், போட்டி குறித்த எதிர்பார்ப்புகள் மக்களிடையே எகிறியுள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் புதிய அணிகளாக அறிமுகமான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய இரண்டு அணிகளில் குஜராத் டைட்டன்ஸ் அணி இறுதிவரை சென்று வெற்றிக் கோப்பையை கைப்பற்றியது.
இந்நிலையில், மார்ச் 31-ம் தேதி அகமதாபாத்தில் நடைபெற இருக்கும் முதல் போட்டியில் ஹார்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், எம் எஸ்
தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோத உள்ளன.
இதனிடையே, 2023 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் ஜெர்சியை அணி நிர்வாகம் மாற்றம் செய்துள்ளது. கடந்த ஆண்டு, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் வெளிர் நீல நிற ஜெர்சியை அணிந்து விளையாடிய நிலையில், தற்போது அவர்களது புதிய ஜெர்ஸியானது அடர் நீல நிறத்திற்கு மாறியுள்ளது. இதனை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸின் கேப்டன் கேஎல் ராகுலுடன் இணைந்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா இன்று அறிமுகப்படுத்தினார்.
இந்த ஜெர்சி வெளியீட்டு விழாவில் ராகுல், தீபக் ஹூடா, ஜெய்டன் உனட்கட், ரவி
பிஷ்னோய் மற்றும் அவேஷ் கான் போன்ற அணி வீரர்கள் உட்பட அணி ஆலோசகர் கவுதம் கம்பீர் மற்றும் அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவும் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
