தமிழ்நாடு

மதுபானம் கொள்முதல் : டாஸ்மாக் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

தமிழகம் முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. இங்கு விற்பனை செய்யப்படும் மதுபானங்களுக்கான மதுவிலக்கு ஆயத்தீர்வை வரி மற்றும் விற்பனை வரியை அண்மையில் தமிழக அரசு உயர்த்தியது. இதையடுத்து, மதுபான கொள்முதல் விலை உள்ளிட்ட விவரங்களை வழங்கக் கோரி கோவையை சேர்ந்த வழக்குரைஞர் லோகநாதன் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கின் விசாரணையின் போது, மதுபான கொள்முதல் ஒப்பந்த நகல்களை தாக்கல் செய்ய டாஸ்மாக் நிர்வாகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்தது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, டாஸ்மாக் கடைகளுக்கு எந்தெந்த நிறுவனங்களிடம் இருந்து மதுபானங்கள் கொள்முதல் செய்யப்படுகிறது. எவ்வளவு விலைக்கு கொள்முதல் செய்யப்படுகிறது என்பது தொடர்பான விவரங்களை தெரிவிக்க டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது. அதோடு, விபரங்களை சீல் வைக்கப்பட்ட கவரில் ஜனவரி மாதம் 6-ஆம் தேதி அறிக்கையாக அளிக்க டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்றம், நீதிமன்ற உத்தரவுப்படி மதுபான கொள்முதல் ஒப்பந்த நகல்களை தாக்கல் செய்யாத நிர்வாகத்துக்கு ரூ.10,000 அபராதம் வசூலித்து, அபாரதத் தொகையை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு செலுத்தவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.