கோவை வெடிகுண்டு தாக்குதல்- ஆன்லைன் மூலம் வெடிப்பொருட்கள் வாங்கியது அம்பலம்
கோவையில் தற்கொலை தாக்குதல் நடத்த ஆன்லைன் மூலமாக வெடி பொருட்கள் வாங்கி இருப்பதாக என்.ஐ.ஏ விசாரணையில் தெரியவந்துள்ளது.
கோவை உக்கடத்தில் சங்கமேஷ்வரர் கோவில் வாசலில் கடந்த மாதம் 23 ஆம் தேதி கார் குண்டுவெடிப்பில் ஜமேஷா முபின் என்பவர் பலியானார். இந்த சம்பவம் தொடர்பாக ஜமேஷா முபின் வீட்டில் போலீசார் சோதனை நடத்திய போது, வெடிபொருட்கள், சிலிண்டர், இஸ்லாமிய சித்தாந்தம் உட்பட பல பொருட்களை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து ஜமேஷா முபினுடன் தொடர்பில் இருந்ததாக முகமது தல்கா, முகமது அசாரூதின், முகமது ரியாஸ், முகமது நவாஸ் இஸ்மாயில், பிரோஸ் இஸ்மாயில், அப்சர் கான் உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கின் தீவிர தன்மை கருத்தில் கொண்டு என்.ஐ.ஏ விசாரணைக்கு மாற்றி உத்தரவிடப்பட்டது. பின்னர் வழக்குபதிவு செய்த என்.ஐ.ஏ, கைது செய்யப்பட்ட 6 பேரையும் என்.ஐ.ஏ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களுக்கு வருகிற 22ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கி சிறையில் அடைத்தனர்.
இதனையடுத்து என்.ஐ.ஏ நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஜமேஷா முபீன் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தீர்மானத்தின் படி, மிகப்பெரிய தற்கொலை தாக்குதல் நடத்தி குறிப்பிட்ட மதத்தினருக்கு களங்கம் ஏற்படுத்த திட்டமிட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக கோவை குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக இன்று சென்னை, கோவை, திருப்பூர், நீலகிரி, செங்கல்பட்டு, நாகப்பட்டினம் உட்பட தமிழகம் முழுவதும் 42 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் மின்னனு சாதனங்கள் மற்றும் பல முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளதாக என்.ஐ.ஏ தெரிவித்துள்ளது.
மேலும் கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 6 பேரும் ஜமேஷா முபினுக்கு உதவி செய்திருப்பதும், ஆன்லைன் மூலமாக வெடிபொருட்கள், வாகனத்தை கொண்டு மோதியவுடன் வெடித்து சிதறும் வெடிபொருள் ஆகியவற்றை இவர்கள் வாங்கி இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.
