தமிழ்நாடு

நளினிக்கு 9-வது முறையாக 30 நாட்கள் பரோல் நீட்டிப்பு..!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதியாக உள்ள நளினிக்கு 9-வது முறையாக 30 நாட்கள் பரோல் நீட்டிப்பு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினிக்கு பரோல் வழங்க வேண்டும் என்று அவரது தாயார் பத்மா மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் 23-ம் தேதி நளினிக்கு ஒரு மாதம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதனையடுத்து நளினி 2 ஆண்டு இடைவெளிக்கு பிறகு கடந்த டிசம்பர் 27-ம் தேதி வேலூர் பெண்கள் தனிச் சிறையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஒரு மாத பரோலில் விடுவிக்கப்பட்டார். சிறையில் இருந்து வெளியில் வந்த நளினி வேலூர் காட்பாடி, பிரம்மபுரத்தில் உள்ள அவரது கணவர் முருகனின் உறவினர் வீட்டில் அவரது தாயார் பத்மாவும் உடன் தங்கி இருந்து தினந்தோறும் காட்பாடி காவல் நிலையத்தில் கையொப்பமிட்டு வருகிறார்.

இந்நிலையில் அவரது பரோலை நீட்டிக்க கோரி அவரது தாயார் சிறைத்துறை அதிகாரிகளிடம் மனு தாக்கல் செய்திருந்தார். இதனை தமிழக அரசுக்கு சிறைத்துறை அதிகாரி அனுப்பி இருந்தனர். இதனையடுத்து 24-ம் தேதி முதல் மேலும் 30 நாட்களுக்கு 9-வது முறையாக பரோலை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து நளினி வரும் அக்டோபர் 24-ம் தேதி மீண்டும் வேலூர் சிறைக்கு திரும்ப வேண்டும். ஆனால் அன்றைய தினம் தீபாவளி பண்டிகை விடுமுறை என்பதால் அக்டோபர் 25-ம் தேதி நளினி சிறைக்கு திரும்ப வேண்டும் என சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.