புதிய மின் கட்டணம் அடுத்த மாதம் முதல் அமல்படுத்தப்படும்- அமைச்சர் செந்தில் பாலாஜி
தமிழ்நாடு முழுவதும் மின்வாரியம் சார்பில் 100 இடங்களில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் பாய்ண்ட் அமைக்க திட்டமிட்டுள்ளதாக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு தகவல் தெரிவித்த மின் துறை அமைச்சர் அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழ்நாடு முழுவதும் உள்ள மாநகராட்சி நகராட்சி, மின் வாரிய அலுவலகங்கள் உள்ளிட்ட அரசு இடங்களில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜ் செய்யும் வசதி கொண்ட சார்ஜிங் பாயிண்ட் அமைப்பதற்கு இடங்கள் தேர்வு செய்யப்பட்டு வருவதாக கூறினார். இதில் முதற்கட்டமாக 100 இடங்களில் பார்க்கிங் உள்ளிட்ட நவீன வசதியுடன் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. பயன்பாடு மற்றும் வரவேற்பை தொடர்ந்து இது மேலும் விரிவுபடுத்தப்படும் என்றார்.
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள ஒரு லட்சத்து 45 மின் கம்பங்கள் தயராக உள்ளன. தாழ்வாக செல்லும் மின்வட கம்பிகள் மாற்றப்பட்டு வருகின்றன. வலுவற்ற மின்கம்பங்கள் மற்றப்பட்டுள்ளன. 80% பணிகள் தற்போது முடிவுற்றுள்ள நிலையில், பருவமழைக்கு தொடங்குவதற்கு முன் எதிர்கொள்ள தயாராக உள்ளதாகவும் அவர் கூறினார். ஏற்கனவே ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தில் இணைப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், இரண்டாம் கட்டமாக 50 ஆயிரம் இலவச விவசாய மின் இணைப்புகள் 100 நாட்களில் வழங்கும் வகையிலான திட்டம் இந்த மாத இறுதிக்குள் முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
மின் கட்டண உயர்வுக்கு ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதல் விரைவில் கிடைக்க உள்ளது. எனவே புதிய மின் கட்டணம் அடுத்த மாதம் முதல் அமல்படுத்த திட்டமிடப்பட்டு வருவதாகவும்,மின்வாரிய அதிகாரிகள் மீது புகார்கள் தொடர்ந்து வரும் நிலையில், அதிகாரிகள் தவறு செய்யாமல் கண்காணிக்க மின் வாரியத்தில் உள்ள 12 மண்டலங்களுக்கும் தலா மூன்று நபர்கள் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட உள்ளது. மொத்தம் 36 நபர்கள் இந்த கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்றார்.
