திருப்பதியில் இன்று முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை
உலக பிரசித்திப்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு உலகம் முழுவதும் இருந்து நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர். இதையொட்டி பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் நாள்தோறும் செய்யப்பட்டு வருகிறது.
பக்தர்களுக்கு கொடுக்கும் அதே பாதுகாப்பு மலைப்பகுதியில் இருக்கும் வனவிலங்குகளுக்கும், வனப்பகுதிகள் மாசடையாமல் இருக்கவும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அதனால், திருப்பதியில் இன்று முதல் முழு பிளாஸ்டிக் கவர் தடை அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
வனப்பகுதி பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த முடிவை தேவஸ்தானம் எடுத்து நடைமுறைப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிருப்பதாவது :
திருப்பதி ஏழுமலையான் கோவில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
கடைக்காரர்களும் பிளாஸ்டிக் கவர் பொருட்களை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டிருப்பதுடன் மட்கும் காகிதங்களால் செய்யப்பட்ட கவர்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மீறும் கடை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டிருப்பதுடன், சோதனையின்போது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் அலிப்பிரி சோதனைச் சாவடியில் முழுமையான சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. மேலும் பிளாஸ்டிக் கவர்களை அதிக விலைக்கு விற்கக்கூடாது என தெரிவித்துள்ள தேவஸ்தானம், விலைப்பட்டியலை கடைகளுக்கு முன்பு ஒட்ட வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.
ஹோட்டல் கடை வைத்திருப்பவர்கள் தனித்தனி குப்பைத் தொட்டிகளை வைத்து உலர் கழிவுகள் மற்றும் ஈரமான கழிவுகளை சேகரிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது.
