தமிழகத்தில் வார நாட்களில் காலை 5.30 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ இரயில் சேவை…
தமிழகத்தில் மெட்ரோ இரயில் சேவைகள் வார நாட்களில் வழக்கம்போல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டிருந்த ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு மற்றும் இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து சென்னை மெட்ரோ இரயில் சேவைகள் இன்று முதல் வழக்கம் போல் இயக்கப்படும் என்று மெட்ரோ இரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதன்படி , வார நாட்களில் காலை 5.30 மணி முதல் இரவு 11.00 மணி வரை மெட்ரோ இரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெரிசல்மிகு நேரங்களான காலை 08.00 மணி முதல் 11.00 மணி வரையிலும், மாலை 05.00 மணி முதல் இரவு 08.00 மணி வரையிலும் 5 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும் எனவும், மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 7:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
