குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக இன்று பதவி ஏற்கிறார் பூபேந்திர படேல்
குஜராத்தின் புதிய முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ள பூபேந்திர படேல் இன்று பதவியேற்கிறார்.
குஜராத்தில் பாஜக சார்பில் முதலமைச்சராக இருந்த ஆனந்தி பென் படேல் கடந்த 2016-ம் ஆண்டு ராஜினாமா செய்ததை அடுத்து புதிய முதலமைச்சராக விஜய் ரூபானி தேர்ந் தெடுக்கப்பட்டார். அவர் தமது பதவியை நேற்று முன் தினம் ராஜினாமா செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலமைச்சராக பொறுப்பு வழங்கி, மக்களுக்கு சேவை செய்ய வாய்ப்பளித்த பாஜக தலைமைக்கு நன்றி தெரிவிப்பதாகக் கூறினார்.
இதையடுத்து அந்த மாநிலத்தில் 17 வது முதலமைச்சராக பூபேந்திர படேல் தேர்வு செய்யப் பட்டார். அவர் இன்று முதலமைச்சராக பதவியேற்கிறார். இந்த தகவலை மாநில பாஜக தலைவர் சி.ஆர்.பாட்டீல் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இன்று முதலமைச்சர் மட்டுமே பதவியேற்பதாகவும், ஓரிரு நாட்களில் புதிய அமைச்சரவை அமைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். உடனிருந்த பூபேந்திர படேல், தன் மீது நம்பிக்கை வைத்து முதலமைச்சராக தேர்வு செய்த பிரதமர் மோடி, அமித்ஷா, கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார்.
