அரசியல்இந்தியா

குஜராத் மாநிலத்தின் 17வது முதலமைச்சராகிறார் பூபேந்திர படேல்..!

குஜராத் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பூபேந்திர படேல் தேர்வு செய்யப் பட்டுள்ளார்.

பாஜகவைச் சேர்ந்த விஜய் ரூபானி, தமது பதவியை நேற்று ராஜினாமா செய்தார். அகமதாபாத்தில் உள்ள ஆளுநர் மாளிகைக்குச் சென்ற விஜய் ரூபானி, தமது ராஜினாமா கடிதத்தை, ஆளுநர் ஆச்சார்யா தேவ்ராத்திடம் அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலமைச்சராக பொறுப்பு வழங்கி, மக்களுக்கு சேவை செய்ய வாய்ப்பளித்த பாஜக தலைமைக்கு நன்றி தெரிவிப்பதாகக் கூறினார்.

இதையடுத்து பாஜகவின் மூத்த தலைவர்கள் சிலர், புதிய முதலமைச்சரை தேர்வு செய்வதற்காக குஜராத்துக்கு சென்றனர். காந்தி நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் அவர்கள் ஆலோசனை நடத்தினர்.

கூட்டத்தில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, துணை முதலமைச்சர் நிதின் படேல், மாநில பாஜக தலைவர் சிஆர் பாட்டில் மற்றும் ரூபானி பங்கேற்றனர்.

இதையடுத்து புதிய முதலைச்சரை தேர்வு செய்வதற்கான பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடந்தது. இதில் புதிய முதலமைச்சராக, பூபேந்திர படேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதை மத்திய அமைச்சரும் பாஜக தலைவருமான நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார். இதையடுத்து அவர் விரைவில் பதவியேற்க இருக்கிறார்.