முதல்வராக மகிழ்ச்சி.. மகனாக நெகிழ்ச்சி..! தமிழக சட்டசபையின் நூற்றாண்டு விழா மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படத் திறப்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி உரை…
இந்திய வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள் இன்று என கருணாநிதி திருவுருவ படத் திறப்பு விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார் .
தமிழக சட்டசபையின் நூற்றாண்டு விழாவும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படத் திறப்பு விழாவும் சட்டசபையில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளார்.
16 ஆவது தலைவராக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் திருவுருவ படத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்துவைத்தார். அவருக்கு முதல்வர் ஸ்டாலின் பொன்னாடையை வழங்கி நினைவுப்பரிசு வழங்கினார்.
இதையடுத்து இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில் :
இந்திய வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள் இன்று. இந்திய வரலாற்றில் முக்கிய பங்கு வகிக்கும் புனித ஜார்ஜ் கோட்டைக்கு வந்துள்ள ராம்நாத் கோவிந்த் அரசு பணியை வேண்டாம் என கூறிவிட்டு ஏழைகளுக்காக வாதாட வழக்கறிஞரானார். இந்த சட்டசபையில்தான் மகளிர் நலன் காக்கும் சிறப்பான சட்டங்களை நிறைவேற்றியுள்ளார் கருணாநிதி. அது மட்டுமல்ல மே தினத்தை விடுமுறையாக அறிவித்தவரும் இவர்தான். இந்த சட்டசபையில் சிறப்பான சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.
காவிரி நடுவர் மன்றம் கோரும் தீர்மானம் இந்த சட்டசபையில் கருணாநிதியால் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாட்டில் இரு மொழி கொள்கையை கொண்டு வந்த சட்டசபை இது. விளிம்பு நிலை மக்களுக்காக பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. பார் போற்றும் பல திட்டங்கள் கொண்டு வரப்பட்ட தமிழக சட்டசபை இது.
சீர்திருத்த திட்டங்களை இயற்றி தமிழர்களின் வாழ்வில் ஒளியேற்றியவர். எம்எல்ஏ, எதிர்க்கட்சித் தலைவர், அமைச்சர், முதல்வர் ஆகிய பல பதவிகளை வகித்தவர் கருணாநிதி. கருணாநிதியின் படத்தை ஜனாதிபதி திறந்து வைத்ததை கண்டு முதல்வராக மகிழ்கிறேன். மகனாக நெகிழ்கிறேன் என ஸ்டாலின் பேசினார்.
