அரசியலில் தற்போது பக்குவமாக செயல்பட்டு வருகிறேன்..!துரோகத்தையும் சூழ்ச்சியையும் முறியடிப்போம் ,ஒன்றுபடுவோம்! மனம்திறந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி
அதிமுகவில் சிறந்த வாய் சொல் வீரராக வலம் வந்தவர் ராஜேந்திரபாலாஜி. இவர் அதிமுக ஆட்சியில் கடந்த பத்தாண்டுகாலம் அமைச்சராக வலம் வந்தவர் . அவ்வப்போது தனது பேச்சால் சர்ச்சையில் சிக்கினார். இந்நிலையில் சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு இவர் பெரிதாக அதிகம் தென்படவில்லை.
இந்நிலையில் தற்போது ராஜேந்திரபாலாஜி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் அவர் கூறிருப்பதாவது :
“எனக்கு கொரோனா தொற்று இருந்ததால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தற்போது எனது இல்லத்தில் மருத்துவர்களின் ஆலோசனையின்படி தனிமையில் உள்ளேன். அடுத்த சில நாட்கள் நான் முழுமையாக ஓய்வு எடுக்க வேண்டியிருப்பதால் யாரும் என்னை நேரில் சந்திக்க வர வேண்டாம். கடந்த 10 நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்திட வேண்டுகிறேன்.
சமூக வலைதளங்களில் என்னைப்பற்றி வரும் பொய், வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். லஞ்சம் ஊழலுக்கு அப்பாற்பட்டு அமைச்சர் பதவியிலும், அரசியல் பொது வாழ்க்கையிலும் செயல்பட்டுள்ளேன். செயல்பட்டும் வருகிறேன்.
சில நேரங்களில் அரசியல் உணர்ச்சி மிகுந்து சில தடித்த வார்த்தைகளை பயன்படுத்தி உள்ளேன். அதற்காக வருத்தம் அடைந்து அரசியலில் பக்குவமாக தற்போது செயல்பட்டு வருகிறேன். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் தலைமையில் கழகத்திற்காக என்னை அர்ப்பணித்துள்ளேன். துரோகத்தையும் சூழ்ச்சியையும் முறியடிப்போம். ஒன்றுபடுவோம், வெற்றி பெறுவோம்” என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
