ப்ளஸ் 2 அலகுத் தேர்வு : வாட்ஸ் அப் வழி தேர்வுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்தும் வகையில் வாட்ஸ் அப் மூலம் அலகுத் தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று பாதிப்பின் தீவிரம் குறைந்தவுடன் பொதுத்தேர்வு நடத்துவது குறித்து முதல்வருடன் ஆலோசித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என அண்மையில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருந்தார். தேர்வு ரத்து செய்யப்படவில்லை எனவும் அவர் தெளிவுப்படுத்தி இருந்தார். இந்நிலையில் அலகுத் தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.
“வாட்ஸ் அப் அப்ளிகேஷனில் மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியே குழு ஏற்படுத்த வேண்டும். அந்த குழுவில் வினாத்தாள் மற்றும் விடைத்தாள் தவிர வேறு எந்த தகவலும் பதிவிடவோ, பரிமாறவோ கூடாது. அந்த குழுவில் வினாத்தாள்களை அனுப்ப வேண்டும். மாணவர்கள் விடைத்தாளில் தங்களது பெயர், தேர்வுத் துறையால் வழங்கப்பட்ட பதிவெண் முதலியவை கட்டாயம் இடம்பெற செய்ய வேண்டும்.
ஆசிரியர்கள் விடைத்தாள்களை வாட்ஸ் அப் மூலம் திருத்தி அதற்கான மதிப்பெண்களை வழங்க வேண்டும்” என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
