இந்தியா

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு எல்லையில் இந்தியா – பாக் வீரர்கள் இனிப்புகள் பரிமாற்றம்

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, ஜம்மு – காஷ்மீரின் எல்லையோர பகுதிகளில் இந்தியா – பாகிஸ்தான் ராணுவ வீரர்கள், நேற்று இனிப்புகளை பரிமாறினர்.

ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ரம்ஜான் பண்டிகைக்கு முதல் நாளன்று, ஜம்மு – காஷ்மீரின் எல்லைப் பகுதியில் இந்தியா – பாகிஸ்தான் ராணுவ வீரர்கள், இனிப்புகளை பரிமாறிக் கொள்வர்.இந்த நடைமுறை, பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வருகிறது. அதன்படி, எல்லை கட்டுப்பாட்டு கோடு அமைந்துள்ள பகுதிகளில், இருநாட்டு ராணுவ வீரர்களும் நேற்று இனிப்புகளை பரிமாறிக் கொண்டனர்.

இது குறித்து ராணுவ மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது : ரம்ஜான், தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளின்போது, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ராணுவவீரர்கள், இனிப்புகளை பரிமாறிக் கொள்ளும் நடைமுறை பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, எல்லையோரம் அமைந்துள்ள தங்தர், குப்வாரா, கமன் அமன் சேது, சாக்கன் தாபாக் உள்ளிட்ட இடங்களில், இருநாட்டு ராணுவ வீரர்களும், இனிப்புகளையும், வாழ்த்துகளையும் பரிமாறிக் கொண்டனர். என அவர் கூறினார்.