கோலியுடனான நட்புறவு கிரிக்கெட்டை விட மிகவும் ஆழமானது..! நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் நெகிழ்ச்சி !
முதலாவது உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை முதல்முறையாக தன்வசப்படுத்தியது . வெற்றி பெற்றதும் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன், இந்திய கேப்டன் விராட் கோலியின் நெஞ்சோடு சாய்ந்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.

இந்நிலையில் எதிரணி கேப்டனை அரவணைத்தது ஏன் என்பது குறித்து வில்லியம்சன் பேட்டி ஒன்றில் கூறியதாவது :
இறுதிப்போட்டியில் வெற்றி பெற்றது மிகச்சிறந்த தருணம். இந்தியாவுக்கு எதிராக எப்போது கிரிக்கெட் விளையாடினாலும் அது கடினமாக இருக்கும் என்பது தெரியும். அதனால் கடும் முயற்சியை வெளிப்படுத்த வேண்டி இருந்தது. போட்டி முழுவதும் ஒரு கத்தியின் விளிம்பில் இருப்பது போல் உணர்ந்தேன். நீண்ட போராட்டத்துக்கு பிறகு கோப்பை அதிர்ஷ்டம் எங்களுக்கு கிட்டியது.

ஆட்டம் முடிந்ததும் கோலியின் தோளோடு ஏன் சாய்ந்தேன் என்று கேட்கிறீர்கள். எனக்கும், கோலிக்கும் இடையிலான நட்புறவு பல ஆண்டுகளுக்கு முன்பாக ஏற்பட்டது. எங்களது நட்புறவு கிரிக்கெட்டை விட ஆழமானது. அது எங்கள் இருவருக்கும் தெரியும். அதன் வெளிப்பாடு தான் அந்த இனிமையான கட்டித்தழுவல் என தெரிவித்துள்ளார் .

கோலி மற்றும் வில்லியம்சன் நட்பை பற்றி கிரிக்கட் ரசிகர்கள் அனைவர்க்கும் தெரியும் பல போட்டிகளில் பல விடியோக்களில் அவர்களின் நட்பை நம் பல முறை பார்த்து ரசித்திருக்கிறோம்.இந்நிலையில் வில்லியம்சன் அளித்த இந்த பேட்டி இவர்களின் நட்பை இன்னும் ஆழப்படுத்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்
