முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி… சென்னை ஹைகோர்ட் உத்தரவு…
நடிகை அளித்த பாலியல் புகாரில், அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் முன் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி கட்டாயப்படுத்தி கருக்களைப்பு செய்ததாக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது சென்னை அடையாறில் உள்ள காவல் நிலையத்தில் நடிகை புகார் அளித்திருந்தார். நடிகையின் புகாரை அடுத்து, முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மற்றும் அவரது நண்பர் பரணிக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி முன்னாள் அமைச்சர் மணிகண்டன், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். தனக்கும், நடிகை அளித்த புகாருக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்றும், அதில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என்றும் மனுவில் தெரிவித்திருந்தார். எனவே இந்த வழக்கில் இருந்து முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் முன்ஜாமீன் மனுவை எதிர்த்து காவல் துறை சார்பில், மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை ஆரம்பக் கட்டத்தில் உள்ளதால் முன்ஜாமீன் வழங்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதேபோல் நடிகையின் தரப்பில் இருந்தும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணை கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற நிலையில், வழக்கின் தீர்ப்பினை நீதிபதி தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.
இந்த நிலையில் முன்ஜாமீன் மனு மீது தீர்ப்பளித்த உயர்நீதிமன்ற நீதிபதி, முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டார். முன்ஜாமீனுக்கு எதிராக நடிகை தொடர்ந்த மனுவை ஏற்றுக்கொள்வதாகவும் நீதிபதி தெரிவித்தார்.
