தமிழ்நாடு

ஒடிசா ரெயில் விபத்தில் உயிரிழந்த தமிழர்கள் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் பெங்களூரு, சென்னை ரெயில்கள் உள்பட 3 ரெயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின. இதுவரை வெளியாகி இருக்கும் தகவலின்படி, இந்த விபத்தில் 288 பயணிகள் உயிரிழந்துள்ளதாகவும், 900 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விபத்தில் 35 தமிழர்கள் வரை உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இந்நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படுவதாக மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார். மேலும் பலத்த காயமடைந்தவர்களுக்கு மருத்துவ உதவிக்காக ரூ.2 லட்சம் வழங்கப்படும் எனவும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரதமர் மோடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணமும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரணமும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

இந்நிலையில் ரெயில் விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் விபத்தில் காயமடைந்த தமிழர்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.