மகளிர் மசோதாவை நிறைவேற்ற முடியாததால் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் – பிரதமர் மோடி
பெண்களின் சிறகுகளை பறித்த எதிர்க் கட்சிகள்’: மசோதாவை வீழ்த்தியது பெண் சிசுக்கொலைக்கு சமம்: மோடி ஆவேசம்
மகளிர் மசோதாவை நிறைவேற்ற முடியாததால் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மசோதா தோல்வியடைந்த பிறகு எதிர்க்கட்சிகள் கொண்டாடியது மிகுந்த வேதனை அளித்தது என்று மோடி குறிப்பிட்டார்.
131-வது அரசியல் சட்டத்திருத்த மசோதாவிற்கு லோக்சபாவில் 3-ல் 2 பங்கு ஆதரவு கிடைக்காததால் அது தோல்வியடைந்தது. இந்த மசோதாவிற்கு ஆதரவாக 298 எம்பிக்களும், எதிராக 230 எம்பிக்களும் வாக்களித்தனர். மசோதா நிறைவேற பெரும்பான்மைக்கு 352 எம்பிக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், போதிய ஆதரவு இல்லாததால் இது தோல்வியைத் தழுவியது.
மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதாவும் மக்களவையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் போதிய ஆதரவு கிடைக்காததால் தோல்வியடைந்தது. மொத்தம் 489 பேர் வாக்களித்த நிலையில், ஆதரவாக 278 வாக்குகளும் எதிராக 211 வாக்குகளும் கிடைத்தன. எனினும், இது அரசியல் அமைப்பு திருத்த மசோதா என்பதால் நிறைவேற்றத் தேவையான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்காததால் இந்த மசோதாவும் தோல்வியுற்றதாக அறிவிக்கப்பட்டது.
நாட்டின் பெண்களின் கனவுகள் சிதைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட மோடி, எங்களால் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை; அதற்காக நாட்டின் அனைத்துத் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். மகளிர் மசோதா தோல்வியடைந்தபோது காங்கிரஸ், தி.மு.க, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சியினர் மேசைகளைத் தட்டி மகிழ்ச்சியுடன் கைதட்டிக் கொண்டாடினர். இது நாட்டின் ஒட்டுமொத்த பெண் குலத்திற்கு இழைக்கப்பட்ட அவமானம்.
எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பிற்குப் பின்னால் உள்ள அரசியலை விளக்கிய அவர், பெண்கள் வலிமை பெற்றால், அது வாரிசு அரசியல் நடத்தும் குடும்பக் கட்சிகளுக்கு அச்சுறுத்தலாக அமையும் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள். அதனால்தான் பெண்களின் அதிகாரத்தைத் தடுக்கிறார்கள். காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் உண்மையான முகம் இப்போது தேசத்தின் முன்னால் வெளிப்பட்டுவிட்டது. அவர்கள் எப்போதுமே மகளிர் இடஒதுக்கீட்டிற்கு எதிரானவர்கள்தான் என்றார்.
இந்தியாவின் பின்தங்கிய நிலைக்குக் காங்கிரஸ் கட்சியே காரணம் என்று குற்றம் சாட்டினார். இந்தியா அடைய வேண்டிய வளர்ச்சியின் உச்சாணிக் கொம்பை எட்ட முடியாமல் போனதற்குப் பின்னால் இருப்பது காங்கிரஸ் கட்சிதான். நம்முடன் சுதந்திரம் பெற்ற பல நாடுகள், இன்று நம்மை விட வெகுதூரம் முன்னேறிச் சென்றுவிட்டன. எல்லைப் பிரச்னைகள், ராணுவத்தினருக்கான OROP திட்டம் மற்றும் ஓ.பி.சி விவகாரங்கள் என அனைத்தையும் தீர்க்காமல் பல ஆண்டுகளாகத் தொங்கவிட்டதற்கு காங்கிரஸ் கட்சியே பொறுப்பு என்றார்.
தொகுதி மறுவரையறை குறித்து காங்கிரஸ் மற்றும் அதன் நண்பர்கள் தொடர்ந்து பொய்களைப் பரப்பி வருகிறார்கள். ஆங்கிலேயர்களிடம் இருந்து ‘பிரித்தாளும் சூழ்ச்சி’ அவர்கள் கற்றுக்கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு மாநிலத்தின் பிரதிநிதித்துவமும் விகிதாச்சார அடிப்படையில் அதிகரிக்கும் என்று நாங்கள் கூறி வருகிறோம். இந்த மசோதா நிறைவேறியிருந்தால் அனைத்து மாநிலங்களும் பயனடைந்திருக்கும். ஆனால் எதிர்க்கட்சிகள் தங்கள் சொந்த மக்களுக்கே துரோகம் இழைத்துவிட்டனர். காங்கிரஸ் ஒரு சீர்திருத்தங்களுக்கு எதிரான கட்சி (Anti-reform party). நாட்டின் முன்னேற்றத்திற்காக எடுக்கப்படும் அனைத்து நல்முயற்சிகளையும் அவர்கள் எதிர்க்கிறார்கள். பிராந்தியக் கட்சிகள் வளர்வதை காங்கிரஸ் ஒருபோதும் விரும்புவதில்லை. காங்கிரஸ், தி.மு.க, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி ஆகிய கட்சிகள் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கும், பெண்களுக்குமே எதிரானவர்கள் தான் என்றார்.
21-ம் நூற்றாண்டின் பெண்களுக்குச் சிறகுகளை வழங்கவே இந்த மசோதா கொண்டு வரப்பட்டது. இது எதையும் பறிப்பதற்காக அல்ல, அனைவருக்கும் சமமான வாய்ப்பை வழங்குவதற்காகவே. பெண் சக்தியை எதிர்க்கட்சிகள் மிகச் சாதாரணமாக எடைபோட்டுவிட்டனர். மகளிர் மசோதாவைத் தோற்கடித்ததற்காக மக்கள் அவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்குவார்கள் என்று பிரதமர் மோடி எச்சரித்தார். எதிர்க்கட்சிகள் தங்க தவறுகளைத் திருத்திக் கொள்வார்கள் என்று நான் எதிர்பார்த்தேன், ஆனால் அவர்கள் ஏமாற்றிவிட்டனர் என்று பிரதமர் தனது உரையில் வேதனையுடன் குறிப்பிட்டார்.
Read More