weatherman

அறிவியல்தமிழ்நாடுதொழில்நுட்பம்நிகழ்ச்சிகள்

டிட்வா புயல் வலுவிழந்தது… மேக கூட்டம் ஏதுமின்றி வெற்று சுழலாக மாறியது 

வங்கக்கடலில் நகரும் டிட்வா புயல் வலுவிழந்துவிட்டதாகவும் மேக கூட்டம் ஏதுமின்றி வெற்று சுழலாக டிட்வா புயல் மாறிவிட்டது என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
வங்கக் கடலில் உருவாகியுள்ள டிட்வா புயல் இன்று மாலை சென்னையை நெருங்கிவிடும் என வானிலை ஆய்வு மையம் கணித்து உள்ளது. டிட்வா புயலின் தாக்கத்தால், சென்னையில் நேற்று பிற்பகல் முதல் லேசான மழை பெய்யத் தொடங்கிய நிலையில், இரவிலும் மிதமான மழை நீடித்தது. நுங்கம்பாக்கம், வடபழனி, கிண்டி, மெரினா கடற்கரை, பட்டினப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்தது.
ஆனால் தற்போது காலை முதல் நகர் முழுவதும் லேசான மழையே பெய்து வருகிறது. இதனிடையே டிட்வா புயலால் சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு இல்லை என வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கணித்துள்ளார். வங்கக்கடலில் நகரும் டிட்வா புயல் வலுவிழந்துவிட்டது; மேக கூட்டம் ஏதுமின்றி வெற்று சுழலாக டிட்வா புயல் மாறிவிட்டது. டிட்வா புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிவிட்டது; இன்று மாலை புயலின் சுழற்சியால் மீண்டும் மேகங்கள் உருவாக வாய்ப்புள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின் படி, டிட்வா புயல் காரணமாக திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்று அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் என்ற ஆரஞ்ச் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களிலும் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் என கணித்துள்ளது. இது தவிர, சேலம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தை தவிர மற்ற மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பில்லை எனவும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
இன்று டிட்வா புயலின் தாக்கத்தால், தென் கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் மணிக்கு 75 கிலோ மீட்டர் வேகம் வரை தரைக்காற்று வீசக்கூடும் எனவும், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகம் வரை தரைக்காற்று வீசக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Read More