வெற்றிமாறனின் விடுதலை 2 படம் எப்படி ? ரிவ்யூ இதோ..!
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக இருக்கும் வெற்றிமாறன் சூரியை கதாநாயகனாக வைத்து “விடுதலை” என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் வசூல் ரீதியிலும், விமர்சன ரீதியிலும் வெற்றி பெற்றது. இந்த படத்தில் விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்து பாராட்டைப் பெற்றார். இளையராஜாவின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்த்தன. “விடுதலை” படத்தை தொடர்ந்து அதன் 2ம் பாகம் வெளியாகும் என முன்னரே பட குழுவினர் அறிவித்திருந்தனர். அதன் பின்னர் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு தொடங்கியது.
இந்த 2ம் பாகத்தில், நடிகை மஞ்சு வாரியர், அனுராக் கஷ்யப் மற்றும் கிஷோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். முதல் பாகத்தின் முடிவில் குமரேசனால் (சூரி) வாத்தியார் (விஜய் சேதுபதி) கைது செய்யப்படும் நிலையில், அதன் தொடர்ச்சியாக 2ம் பாகம் உருவாகியுள்ளது. 2ம் பாகத்தில் விஜய் சேதுபதி வாத்தியாராக மாறுவதற்கு பின்னால் என்ன நடந்தது? சிறையில் இருந்து எவ்வாறு தப்பித்தார்? போன்ற பிளாஷ்பேக் காட்சிகளை பிரதானமாக கொண்டு உருவாகியுள்ளது. மேலும் மஞ்சு வாரியர், விஜய் சேதுபதிக்கு இடையேயான முக்கிய காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.
ரசிகர்களின் உச்சகட்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் நடந்த “விடுதலை 2” படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் 9 மணிக்கு சிறப்பு காட்சி திரையிடப்பட்டுள்ளது. படம் குறித்து ரசிகர்களின் ட்விட்டர் ரெவ்யூ சொல்லுவதுதென்ன..
வெற்றிமாறன் தனக்கு கிடைத்த இரண்டரை மணி நேரத்துக்குள் இந்த சமூகத்தில் நடந்த, நடக்கின்ற, சமூக அநீதிகள் அனைத்தையும் ஒன்று விடாமல் சொல்லிவிட எத்தனிக்கிறார். இது படத்தின் வேகத்தைக் குறைப்பது போன்ற தோற்றத்தை உருவாக்கி விடுகிறது. குறிப்பாக, முதல் பாதியில், ஆங்காங்கே பிரச்சார நெடி அடிக்கிறது. அதை தவிர்த்திருக்கலாம். ஆனால், அதேநேரம், “நிலம், இனம், மொழின்னு மக்கள ஒன்னு சேர்க்குற வேலைய நாங்க செய்ய ஆரம்பிச்சப்போ, நீங்க கட்டமைச்ச சாதி, மதம், பிரிவினை வாதத்தால அரசியல் பண்ண முடியாம போச்சு”, “வன்முறை எங்க மொழியில்ல, ஆனா எங்களுக்கு அந்த மொழியும் பேசத் தெரியும்”, “தத்துவம் இல்லாத தலைவர்கள் ரசிகர்களை மட்டும் தான் உருவாக்குவார்கள், அது முன்னேற்றத்துக்கு உதவாது” உள்ளிட்ட அவரது அழம் செறிந்த வசனங்கள், ஆணிவேர் வரை சென்று அடித்தூறை ஆட்டம் காணச் செய்திருக்கிறது.
வணிக வீதிகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், பொது இடங்கள், பூங்காக்கள், அதிகமாக மக்கள் கூடும் இடங்களில் கம்யூனிஸ்ட் இயக்க கொடிகளுடன் உண்டியல் ஏந்தி வருபவர்களை பார்த்திருப்போம். அவர்கள் துண்டு பிரசுரங்களைக் கொடுத்து எதற்காக நிதி வசூலிக்கிறோம் என்பதை விளக்கி நிதி வசூலிப்பார்கள். அந்த பிரசுரங்களில் அரசப் பயங்கரவாதம், ஏகாதிப்பத்தியம், எதேச்சதிகாரம், வர்க்கம், முதலாளித்துவம், சர்வாதிகாரம், அடக்குமுறை, ஓடுக்குமுறை, ஜனநாயகம், சோஷலிசம், புரட்சியென நம் அன்றாட வாழ்க்கையில் அடிக்கொரு முறை பேசாத வார்த்தைகள் இடம்பெற்றிருக்கும். இவை எல்லாம் என்ன? எதை அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்? என்பதற்கான தேடலின் தொடக்கம் தான் இந்த ‘விடுதலை பாகம்-2’!
