செந்தில் பாலாஜி, பொன்முடி ராஜினாமா..! மீண்டும் அமைச்சரான மனோ தங்கராஜ் – தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம்
மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்று மே 6 ஆம் தேதியுடன் 4 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இந்த நிலையில் அமைச்சரவை மாற்றப்பட்டுள்ளது. பெண்கள் குறித்து இழிவாகப் பேசியதாக, அமைச்சர் பொன்முடி மீது விமர்சனம் எழுந்த நிலையில், அவரது கட்சிப் பதவி பறிக்கப்பட்டது. பொன்முடியின் பேச்சு குறித்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷும் கண்டனம் தெரிவித்திருந்தார். நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்யவும் உத்தரவிட்டார். அவரை அமைச்சர் பதவியில் இருந்தும் நீக்க வேண்டும் என்று கண்டனக்குரல்கள் ஒலித்தன.
ஜாமினா, அமைச்சர் பதவியா என உச்ச நீதிமன்றம் கெடு விதித்த நிலையில், செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதேபோல, பெண்கள் குறித்து இழிவாகப் பேசிய புகாரில் பொன்முடியின் அமைச்சர் பதவியும் பறிபோயுள்ளது.
இதனால் அவரது அமைச்சர் பதவியும் பறிக்கப்படும் என தகவல் வெளியாகி வந்தது. இதேபோல, சட்டவிரோத பணமோசடி வழக்கில் ஜாமீனில் உள்ள செந்தில் பாலாஜி வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஜாமீன் வேண்டுமா, அமைச்சர் பதவி வேண்டுமா என, இன்றைக்குள் (28.04.2025) தெரிவிக்குமாறு கூறியிருந்தது.
இதன்படி, பொன்முடியும், செந்தில் பாலாஜியும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்கிறார்கள் என்றும் சிவசங்கர், முத்துசாமி, ராஜகண்ணப்பன் ஆகியோருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்படும் என்றும், மனோ தங்கராஜூக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்படும் எனவும் நியூஸ்18 தமிழ்நாடு முன்கூட்டியே செய்தி வெளியிட்டது.
அதன்படி இருவரும் அளித்த ராஜினாமாக்களை, முதலமைச்சர் ஸ்டாலினின் பரிந்துரையின் பேரில் ஏற்றுக் கொண்டதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடி ராஜினாமாவை தொடர்ந்து தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
செந்தில்பாலாஜி வசம் இருந்த மின்சாரத்துறை, அமைச்சர் சிவசங்கரிடம் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே சிவசங்கரிடம் போக்குவரத்துத்துறை உள்ள நிலையில், மின்சாரத்துறையையும் இனி அவரே கவனிப்பார். இதே போல், வீட்டுவசதி மற்றும் நகர்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் முத்துசாமியிடம், செந்தில்பாலாஜியிடம் இருந்த மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.
பால்வளத்துறை அமைச்சர் பதவி வகித்து வந்த ராஜகண்ணப்பன், பொன்முடி வசம் இருந்த வனத்துறை மற்றும் காதித்துறைகளை கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு அமைச்சர்கள் ராஜினாமா செய்த நிலையில், ஏற்கனவே அமைச்சரவையில் இருந்த மனோ தங்கராஜூக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
மனோ தங்கராஜ், கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபுரம் தொகுதியிலிருந்து எம்எல்ஏ-வாக தேர்வானவர். கடந்த முறை அவரது பதவி பறிக்கப்பட்ட நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்துக்கு அமைச்சர் பிரதிநிதித்துவம் இல்லாமல் இருந்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பாஜக சற்றே வலுவாக உள்ளதாக கூறப்படும் நிலையில் அதிமுக பாஜக கூட்டணி அமைந்துள்ள நிலையில், வரும் தேர்தலை கவனத்தில் கொண்டு, மனோ தங்கராஜுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அதுவும் அவர் ஏற்கெனவே வகித்த பால்வளத்துறை அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. மனோ தங்கராஜ் இன்று மாலை 6 மணிக்கு ஆளுநர் மாளிகையில் பதவியேற்றுக் கொள்கிறார்.
