கடைகள் 24 மணி நேரமும் திறந்திருக்க அனுமதி.. மாநகர காவல் ஆணையர், டிஜிபிக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்!
கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் 24 மணி நேரமும் திறந்திருக்க அனுமதி அளித்து அரசு பிறப்பித்த உத்தரவு குறித்து அனைத்து காவல்நிலையங்களுக்கும் தெரிவிக்குமாறு டிஜிபி மற்றும் சென்னை மாநகரக் காவல் ஆணையர் ஆகியோருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொதுமக்களின் நலன் கருதி, 10 அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்களை பணியமர்த்தியுள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள், வாரத்தின் 7 நாட்களும் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவு கடந்த ஜூன் 4ஆம் தேதி முடிவடைந்த நிலையில் மேலும் 3 ஆண்டுகளுக்கு அனுமதியை நீட்டித்து அரசு உத்தரவிட்டது.
இந்த நிலையில், 24 மணி நேரமும் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் திறந்திருக்க அனுமதி அளித்த அரசு உத்தரவை மீறி இரவு நேரங்களில் கடைகளை மூடும்படி காவல்துறை மிரட்டுவதாக உயர்நீதிமன்றத்தில் டெல்லியை தலைமை இடமாக கொண்டு செயல்படும் தேசிய ஓட்டல்கள் சங்கம் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
