schoolholiday kashmir

இந்தியாஉலகம்தமிழ்நாடு

பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறை… காஷ்மீர் அலர்ட்- ஆபரேஷன் சிந்தூர் அதிரடி!

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியை தொடங்கியுள்ள இந்திய ராணுவம், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் நிலைகள் மீது அதிரடி காட்டி வருகிறது. இந்நிலையில் எல்லையில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
நேற்று நள்ளிரவில் “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் பதிலடி தாக்குதலை பாகிஸ்தானிற்கு எதிராக இந்திய ராணுவம் தொடங்கியுள்ளது. கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதிக்கு சுற்றுலா பயணிகள் சென்றிருந்த நிலையில், அவர்களை திடீரென சுற்றி வளைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் காஷ்மீரை சேர்ந்த குதிரை ஓட்டி மற்றும் சுற்றுலா பயணிகள் என மொத்தம் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் இந்தியர்களை பெரிதும் கொந்தளிப்பில் ஆழ்த்தியது. பஹல்காம் தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் கிளை அமைப்பாக கருதப்படும் ”தி ரெசிஸ்டண்ட் ஃப்ரன்ட்” அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டது. இந்த அமைப்புகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் கொடுத்து போதிய உதவிகள் செய்து வந்ததால் அந்நாட்டின் மீது கோபம் திரும்பியது.
பயங்கரவாதிகளுக்கு உரிய பதிலடி கொடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இதையொட்டி ரகசிய பிளானை இந்திய ராணுவம் தயாரித்து வந்தது. முன்னதாக ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளித்து பிரதமர் மோடி உத்தரவிட்டார். இன்றைய தினம் நாடு முழுவதும் போர் ஒத்திகை நிகழ்வு நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. எனவே போர் ஒத்திகை முடிந்த பின்னர் தான் பதிலடி தாக்குதல் தொடங்கும் என்று இந்திய மக்கள் நினைத்திருப்பர். பயங்கரவாதிகள் கூட அப்படித்தான் கருதியிருக்கக் கூடும். ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் நேற்று நள்ளிரவு பாகிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகளின் 9 நிலைகள் மீது இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த பதிலடி திட்டத்திற்கு ”ஆபரேஷன் சிந்தூர்” என்று மத்திய அரசு பெயர் வைத்துள்ளது. இந்த சூழலில் இந்திய ராணுவத்தின் பதிலடி தாக்குதல் மற்றும் போர் பதற்றம் காரணமாக, ஜம்மு காஷ்மீரில் உள்ள பள்ளி, கல்லூரிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு, சம்பா, கத்வா, ரஜோரி, பூஞ்ச் ஆகிய பகுதிகளில் கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

Read More