protest

அரசியல்தமிழ்நாடு

“இனி தேதியை தெரிவிக்காமல் பாஜக போராட்டம் நடத்தும்” – அண்ணாமலை பேட்டி!

சென்னையில் டாஸ்மாக் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக அறிவித்த பாஜகவினர் கைது செய்யப்பட்ட நிலையில், மாலை 6 மணியை தாண்டியும் தங்களை விடுவிக்காததால் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
டாஸ்மாக் விற்பனையில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை கூறிய நிலையில் தமிழ்நாடு பாஜக சார்பில் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த போராட்டத்திற்காக புறப்பட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அக்கட்சியின் முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோர் பல்வேறு இடங்களில் கைதுசெய்யப்பட்டு தனியார் மண்டபங்களில் தங்கவைக்கப்பட்டனர்.

மாலை 6 மணியாகியும் தங்களை ஏன் விடுவிக்கவில்லை எனக் கூறி அண்ணாமலை போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சாலிகிராமத்தில் கைது செய்யப்பட்ட தமிழிசையும் தன்னை விடுவிக்காததை கண்டித்து கட்சி நிர்வாகிகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது தமிழிசையுடன் இருந்த பெண் ஒருவர் திடீரென மயங்கி விழுந்ததால் அனைவரும் பதட்டமடைந்தனர். கட்சியின் மூத்தத் தலைவர் தனக்கே இந்த நிலையா என்றும் தமிழிசை ஆதங்கப்பட்டார்.
பின்னர் கைது செய்யப்பட்ட பாஜகவினர் விடுவிக்கப்பட்டனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, இனி தேதியை தெரிவிக்காமல் தான் பாஜக போராட்டம் நடத்தும் என்றார். தொடர்ந்து பேசிய அவர், பாஜக தனது போராட்டத்தை தீவிரப்படுத்த உள்ளதாக கூறினார். டாஸ்மாக் ஊழல் புகார் தொடர்பாக பேட்டியளித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ஊழல் நடந்திருக்கலாம் எனக் கூறும் அமலாக்கத்துறை ஆதாரத்தை வெளியிட்டுள்ளதா என கேள்வி எழுப்பினார்.
முன்னதாக, ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்திருக்கலாம் என அமலாக்கத்துறை கூறினாலும், இந்த ஆட்சி தொடங்கியது முதல் 40 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடத்திருப்பதாக தனக்கு தகவல் வந்துள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டினார்.

Read More